பலதும் பத்தும்

மாத்தளையில் மண்ணில் புதையுண்ட 7 பேரின் உடல்களை மீட்க உதவிய வளர்ப்பு நாய்

மாத்தளை, பல்லேபொல பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள அம்பொக்க கிராமத்தின் கடந்த நாட்களில் ஏற்பட்ட அனர்த்தத்தின் போது, மலையொன்று சரிந்து விழுந்ததில் கிராமத்திலுள்ள வீடொன்றில் இருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஏழு பேர் உயிரிழந்தனர்.

இவர்களின் சடலங்கள் பின்னர் மீட்கப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்ட போதிலும், அப்பகுதி இன்னும் மண்ணால் முழுமையாக மூடப்பட்டுள்ளது. மண்ணுக்கு அடியில் புதையுண்ட வீட்டின் இடிபாடுகளைக் கூட கண்டுபிடிக்க முடியவில்லை என மக்கள் தெரிவிக்கின்றனர்.

மண்ணுக்குள் புதையுண்டிருந்த இந்த 7 பேரின் சடலங்களைத் தேடுவது மிகவும் கடினமாக இருந்த தருணத்தில், அந்த வீட்டின் வளர்ப்பு நாய், மண்ணுக்குள் புதையுண்டிருந்த வீட்டார் 7 பேரதும் சடலங்களைக் கண்டுபிடித்துக் கொடுத்த சம்பவம் அனைவரின் மனதையும் உலுக்கியுள்ளது.

இந்தநிலையில் தற்போது மேற்படி அம்பொக்க கிராமத்தின் மலைத்தொடரில் மண்சரிவு அபாய நிலை காணப்படுகிறது. கடும் மழையினால் இந்த அபாய நிலை ஏற்பட்டுள்ளது.

இது குறித்து தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் உடனடியாகக் கவனம் செலுத்தி, மக்களுக்குத் தெளிவுபடுத்துமாறு கிராம மக்கள் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அம்பொக்க கிராமத்தைச் சேர்ந்த சுமார் 80 குடும்பங்கள் தற்போது வெளியேற்றப்பட்டு விகாரையொன்றிலும், உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வீடுகளிலும் தங்கியுள்ளனர்.

மண்சரிவு அபாயம் காரணமாக அதிகாரிகளால் அடிக்கடி வந்து வெளியேறுமாறு அறிவுறுத்தப்படுவதாக மக்கள் கூறுகின்றனர்.

எனினும், உரிய அறிக்கையோ அல்லது ஆய்வோ இன்றி இவ்வாறு வெளியேறுமாறு கூறப்படுவதால், தமக்கென ஒரு நிலையான சூழலை உருவாக்கிக்கொள்வது கடினமாக உள்ளதாகப் பிரதேசவாசிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

பாடசாலைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர், கிராமத்தின் அனர்த்த நிலைமை குறித்த உரிய அறிக்கையை விரைவில் வழங்குமாறு மக்கள் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button