கவிதைகள்

கவியரசர் கண்ணதாசன் கலைவாணி வரமாவார்!… கவிதை… ஜெயராம்சர்மா

நாட்டுக்கோட்டை தந்த நல்லதமிழ் முத்து
நந்தமிழின் கவிதைக்கு அவரென்றும் சொத்து
பாட்டுக்கோட்டை கட்டியவர் பரிமளிக்க மகிழ்ந்தார்
பாட்டுத்தேரில் ஏறியவர் பலர்வியக்க வந்தார்

கண்ணதாசன் என்றவரும் பெயர்சொல்லி வந்தார்
கண்ணனுக்கே தாசனென்று காலமெலாம் வாழ்ந்தார்
எண்ணம் எலாம் கண்ணனாகி எப்பொழுதும் இருந்தார்
எண்ணரிய கவிதைகளை எழுதியவர் குவித்தார்

கம்பனாகி நிற்பார் காளிதாசன் ஆவார்
இளங்கோவாய் எழுந்து கவிபாடி நிற்பார்
வள்ளுவராய் மாறுவார் வாழ்வியலைப் பாடுவார்
உள்ளமதைத் திருத்திவிட உகந்தபடி பாடுவார்

மதுவாற்றில் நீந்தினார் மங்கைசுகம் நாடினார்
எதுவுமே அறியாமல் எடுத்தெறிந்தும் ஏசினார்
சமயத்தை இகழ்ந்தார் தத்துவத்தை வெறுத்தார்
சடம்போல கவிஞர் தன்வாழ்வை வாழ்ந்தார்

ஆண்டவனின் அருளாலே மீண்டார் நம்கவிஞர்
அஞ்ஞான இருளிலே வாழ்ந்ததாய் உணர்ந்தார்
மெஞ்ஞானம் பேசினார் மெஞ்ஞானம் எழுதினார்
மேலான தத்துவங்கள் விளங்கும்படி பாடினார்

பட்டினத்தார் திருமூலர் பலசித்தர் கருத்தை
படித்தவரும் பாமரரும் விளங்கும்படி பாடினார்
கட்டிலுக்கும் பாடினார் தொட்டிலுக்கும் பாடினார்
காடுவரை போகும்வரை கண்ணதாசன் பாடினார்

கண்ணதாசன் தனிப்பாடல் அத்தனையும் படித்தால்
எண்ணரிய தத்துவங்கள் எமக்கெல்லாம் விளங்கும்
கண்ணனது கருணையினால் கண்ணதாசன் பாடினார்
கண்ணதாசன் கவியுலகில் காலமெலாம் வாழுவார்

பாசமலர் ஆகியும் கண்ணதாசன் இருப்பார்
பாலும் பழத்தையும் பக்குவமாய் கொடுப்பார்
படிக்காத மேதையாய் பாட்டுலகில் திகழுகிறார்
பார்த்தால் பசிதீர பலகவிதை அளித்துள்ளார்

சங்கத் தமிழுடுத்துச் சந்தமுடன் பாடுவார்
சபையேறிக் கவிஞர் தமிழ்மணக்கப் பாடுவார்
பொங்கிவரும் ஊற்றாக புறப்பட்டுக் கவிதைவரும்
எங்கிருந்து வருகிறதோ எல்லாமே கண்ணனென்பார்

அர்த்தமுள்ள இந்துமதம் அருங்கருத்துப் பெட்டகமே
யேசுபிரான் காவியமோ நெஞ்சுக்கு ஒத்தடமே
கவியரசர் கண்ணதாசன் கலைவாணி வரமாவார்
புவிமீது கவியரசர் கவிதையாய் வாழுகிறார் !

மகாதேவ ஐயர் ஜெயராம்சர்மா
மேனாள் தமிழ் மொழிக்கல்வி இயக்குநர்
மெல்பேண், அவுஸ்திரேலியா

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button