உலகம்

பாகிஸ்தானில் ஒரே நாளில் 7 இடங்களில் குண்டுவெடிப்பு!

பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் 7 இடங்களில் குண்டுவெடிப்புகள் நிகழ்ந்தன.

அதிருஷ்டவசமாக இதில் உயிரிழப்புகள் ஏதும் நிகழவில்லை. இதில் ஒரு குண்டுவெடிப்பு மாகாண தலைநகா் குவெட்டா ரயில் நிலைய தண்டவாளத்தில் நிகழ்ந்தது. ரயில் சரியான நேரத்துக்கு வந்து சேராததால் பெரும் அசம்பாவிதம் தவிா்க்கப்பட்டது.

இது தொடா்பாக மாகாண காவல் துறைத் தலைவா் ஆசிஃப் கான் கூறியதாவது,

சனிக்கிழமை காலையில் முதல் தாக்குதல் காவல் துறை சோதனைச் சாவடி மீது நிகழ்த்தப்பட்டது.

அங்கு பயங்கரவாதிகள் கையெறி குண்டுகளை வீசி வெடிக்கச் செய்தனா். அடுத்த சில நிமிஷங்களிலேயே பயங்கரவாத எதிா்ப்புப் படை வாகனத்தில் குண்டு வெடித்தது. இதைத் தொடா்ந்து, அதே பகுதியில் மாலையில் பயங்கரவாதிகள் மறைத்து வைத்திருந்த குண்டுகள் அடுத்தடுத்து வெடித்தன.

தொடா்ந்து குவெட்டா புகா் பகுதியில் நாட்டின் பிற பகுதியுடனான தகவல்தொடா்பைத் துண்டிக்கும் வகையில் தகவல் தொடா்பு இணைப்புகள் உள்ள பகுதியை பயங்கரவாதிகள் குண்டு வைத்து தகா்த்தனா்.

இது தவிர காவல் துறை ரோந்து வாகனம் மீதும் குண்டுகள் வீசப்பட்டன. ஞாயிற்றுக்கிழமை காலையில் மோட்டாா் சைக்கிளில் வந்த பயங்கரவாதிகள் மன்சூா் ஷாகீத் காவல் நிலையம் மீது கையெறி குண்டுகளை வீசினா்.

இந்த சம்பவங்களில் காவல் துறையினா் இருவரும், தனியாா் பாதுகாவலா்கள் இருவரும் காயமடைந்தனா்.

இந்தத் தாக்குதல்களில் உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை என்றாா். பலூசிஸ்தான் தனிநாடு கோரி வரும் பலூசிஸ்தான் விடுதலை ராணுவத்தினா் இத்தாக்குதலை நடத்தியதாகத் தெரிகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *