பலதும் பத்தும்

லாட்டரியில் விழுந்த ரூ.4 கோடி: மனைவிக்கு தெரியாமல் மறைத்த நபர்

லாட்டரியில் பரிசு விழுந்தால் முதல் ஆளாக வீட்டில் உள்ளவர்களிடம்தான் சொல்லி பலரும் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்வார்கள். ஆனால் ஜப்பானை சேர்ந்த முதியவர் ஒருவர், தனது மனைவிக்கு தெரியக்கூடாது என நினைத்து தனியாக செலவு செய்து இருக்கிறார். ஆனால், சில நாட்களிலேயே அவருக்கு எதார்த்தம் புரிந்துள்ளது. அதன்பிறகு அவர் என்ன செய்தார் என்பது பற்றி பார்க்கலாம்.

லாட்டரியில் பரிசு விழுவது என்பது பலருக்கும் கனவு போல இருக்கும். உண்மையாக நமக்குதான் விழுந்ததா அல்லது ஏதேனும் கனவு காண்கிறோமா என நினைக்கும் அளவிற்கு லாட்டரி பரிசு என்பது அரிதான ஒன்றாகவும் எதிர்பார்க்காத நேரத்தில் விழும்.

யாருக்கு எப்போது அதிர்ஷ்டம் அடிக்கும் என்பது தெரியாது. சிலர் வாழ்நாளெல்லாம் லாட்டரி வாங்கி, வீணாய் போனதுதான் மிச்சம் என அலட்டிக்கொள்வதையும் பார்க்க முடியும். ஒரு சிலருக்கு வாங்கிய முதல் டிக்கெட்டிலேயே லாட்டரியில் பரிசு அடித்து இருக்கும். இப்படி அதிர்ஷ்டம் எப்போது அடிக்கும் என்று தெரியாது என்றாலும் நமக்கும் ஒருநாள் அதிர்ஷ்டம் அடிக்கும் என லாட்டரி பிரியர்கள் வாங்குவதை கைவிடுவது இல்லை.

லாட்டரியில் பரிசு அடித்தால் குடும்பத்தினரிடம் சொல்லி, மகிழ்ச்சியை பகிர்ந்து விடுவார்கள். ஒருசிலர் யாருக்கும் தெரியாமல் வைத்து இருக்க வேண்டும் என சொந்த குடும்பத்தினரிடம் மறைக்க முயற்சிப்பார்கள். ஆனால் கட்டிய மனைவியிடமே மறைத்து, லாட்டரி பரிசை கூட நிம்மதியாக செலவழிக்க முடியாமல் முதியவர் ஒருவர் தவித்து இருக்கிறார். இது பற்றிய விவரங்களை பார்க்கலாம்.

ஜப்பானை சேர்ந்த 66 வயது முதியவர் எஸ் (அப்படித்தான் தன்னை அடையாளப்படுத்திக்கொள்கிறார்). இவருக்கு லாட்டரி வாங்கும் பழக்கம் இருந்துள்ளது. உற்பத்தி தொழிற்சாலை ஒன்றில் பணியாற்றிய எஸ், தற்போது ஓய்வு பெற்று வீட்டில் இருந்து வருகிறார். இவருக்கு மாதாந்திர பென்ஷனாக 2 ஆயிரம் டாலர் கிடைக்கிறது.

இதுவரை மொத்தமாக சேமித்த பணமே 1,74, 000- டாலர்தான் என்பதால், வாழ்க்கையில் ஒருநாளாவது பணக்காரர் ஆகிவிட வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் லாட்டரி டிக்கெட்டுகளை வாங்கியிருக்கிறார். இந்த நிலையில், அண்மையில், லாட்டரியில் 600 மில்லியன் யென் (இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.3.8 கோடி) பரிசாக விழுந்துள்ளது.

இவ்வளவு பெரிய தொகையை எதிர்பார்க்காத எஸ், உடனே சொகுசு கார், ஆடம்பர ரிசார்ட்களில் ரூம் புக் செய்து சுற்றுலா செல்வது என எதையும் எதிர்பார்க்கவில்லை. மாறாக மனைவிக்கு தெரியாமல் இதை மறைக்க வேண்டும் என்று நினைத்து இருக்கிறார். ஏனெனில் அவரது மனைவி ரொம்பவே சிக்கனமானவராம்.

ஆடம்பரமாக வீட்டில் எதையும் வாங்க விட மாட்டார் எனக் கருதிய எஸ், மனைவிக்கு தெரியாமல் என்ன செய்யலாம் என்று யோசித்து இருக்கிறர். மனைவிக்கு சந்தேகம் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக தனக்கு லாடரியில் வெறும் 32 ஆயிரம் டாலர்தான் பரிசாக விழுந்துள்ளது என்று கூறியுள்ளார்.

மேலும், இந்த தொகையை வைத்து வீட்டை சீரமைப்பு செய்யலாம் எனவும் கூறியுள்ளார். மனைவிக்கு தெரியாமல் லாட்டரி பணத்தை கண்டபடி செலவு செய்து உல்லாசமாக இருந்துள்ளார். ஆனால், இப்படி வீட்டிற்கு தெரியாமல் ஆடம்பர செலவு செய்கிறோமே என அவருக்கு குற்ற உணர்ச்சி வந்துள்ளது.

தனது தந்தை கடைசி காலத்தில் விவகாரத்து செய்துவிட்டு, பணரீதியாகவும் தனிமையிலும் கஷ்டப்பட்டது அவருக்கு நினைவுக்கு வந்துள்ளது. உடனடியாக லாட்டரியில் வென்ற பணத்தை எப்படி செலவு செய்யலாம் என தனது நிதி ஆலோசகரை அழைத்து ஆலோசனை பெற்றுள்ளார். அதன்பிறகு லாட்டரியில் வென்ற பணத்தை தனது பெயரில் இன்சூரன்ஸ் செய்துள்ளார்.

பயனாளிகளாக தனது மனைவி மற்றும் பிள்ளைகள் பெயரை சேர்த்து விட்டாராம். இது குறித்து எஸ் கூறுகையில், “எனது சொந்த உழைப்பில் இந்த பணம் கிடைத்து இருந்தால், நான் மிகவும் பெருமைப்பட்டு இருப்பேன். ஆனால் இந்த பணம் எந்த முயற்சியும் இன்றி எனக்கு கிடைத்தது. எனவே இது எனக்கு மகிழ்ச்சிகரமான நினைவுகளை தரவில்லை” என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button