இலங்கை

மாவீரர்களின் மடிவுக்குப் பலனாக இனத்துக்கு விடிவு கிட்ட வேண்டும்; மாவீரர் பெற்றோர் மதிப்பளித்தல் நிகழ்வில் சுமந்திரன் கோரிக்கை!

இந்த நாட்டில் அனைவரும் சமன் என ஜனாதிபதி சொல்வது உண்மையாக இருக்குமாக இருந்தால் உங்கள் சகாக்களை வணங்குவது போல் எமது மாவீரர்களது கனவையும் நனவாக்குகின்ற வகையில் அரசியல் தீர்வை வழங்க வேண்டும் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் கோரிக்கை விடுத்தார்.

முல்லைத்தீவு, வள்ளிபுனத்தில் நடைபெற்ற மாவீரர் பெற்றோர், உரித்துடையோர் மதிப்பளித்தல் நிகழ்வில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

“நவம்பர் மாதம் என்பது உலகலாவிய ரீதியில் தங்கள் தேசங்களுக்காகப் போரிட்டு மடிந்தவர்களை நினைவு கூருகின்ற மாதம். அதனால்தான் உலகெங்கும் இராணுவத்தினராக இருக்கலாம், போராடியவர்களாக இருக்கலாம் அவர்களைப் பொப்பி மலரால் நினைவு கூருவார்கள். இது உலகம் எங்கும் நடைபெறும் ஒரு நிகழ்வு.

இப்படியான கார்த்திகை மாதத்திலேதான் நாங்களும் தங்களுக்காக அன்றி எங்களுக்காகப் போராடி மடிந்தவர்களை நினைவு கூருகின்ற ஒரு வாரத்தை அனுஷ்டிக்கின்றோம்.

சில நாட்களுக்கு முன்னர் நவம்பர் 13 ஆம் திகதி நாட்டின் தற்போதைய ஜனாதிபதியும் விகாரமாதேவி பூங்காவிலே தன்னோடு தோள் நின்று ஆயுதம் ஏந்தி மடிந்தவர்களை நினைவு கூருகின்ற படங்களை நாங்கள் பார்த்தோம்.

தங்களின் அன்றைய தலைவரின் சீருடையோடு அவர் இருக்கின்ற படம் அதன் பின்னணியில் இருக்கின்றது, ஜனாதிபதி அந்த மேடையில் பேசுகின்றார். அன்றும் அதற்குப் பின்பும அவரின் தோளோடு தோள் நின்றவர்கள் இப்படியாக மலர் அஞ்சலி செலுத்தி அவர்கள் உணர்வுபூர்வமாக அனுஷ்டித்தமையை நாங்கள் பார்த்தோம்.

அதேபோன்று ஓர் இனத்தின் விடிவுகாகப் போராடியர்கள் என்றும் எங்களின் மனங்களிலே நீங்கா இடம் பெற்றவர்கள். ஏனென்றால் எங்களுக்காகக் தங்கள் உயிர்களை அவர்கள் கொடுத்தவர்கள். இது நான் எப்போதுமே சொல்லுகின்ற விடயம். அவர்களுடைய அந்த அர்ப்பணிப்புக்கு ஈடாக நாம் எதையும் சொல்ல முடியாது.

ஏனென்றால் தங்களிடத்தில் இருக்கும் அனைத்தையும் அதாவது தமது உயிரையே எமக்காக அவர்கள் கொடுத்தவர்கள். இந்த அஞ்சலி செலுத்துகின்ற நிகழ்விலே பெற்றோர் வருகின்றபோது விசேடமாக தாய்மார், சகோதரிகள் வருகின்றபோது இன்னமும் அவ்கள் அழுது புலம்புவதைக் கண்டோம்.

இங்கே இன்னமும் என நான் கூறுவது இத்தனை வருடங்களாகியும் அவர்கள் அழுகின்றனர் என்றால் அதற்கு ஒரு காரணம் உண்டு. அந்தக் காரணம் இவர்கள் எம்மை விட்டுப் போய்விட்டனர் என்ற வருத்தம் மட்டும் அல்ல அதாவது நான் பெற்றவள் இருக்கப் பிள்ளை மடிந்து விட்டானே என்ற அங்கலாய்ப்பு மட்டுமல்ல அவர்களின் தியாகத்தினாலே இன்னமும் எமது இனம் ஒரு விடிவைக் காணவில்லையே, அது வீணாகப் போய்விடுமோ என்ற அங்கலாய்ப்பு அங்கே தென்படுகின்றது.

அவர்கள் மடிந்ததாலே இந்த இனம் விடிந்தது என்று தெரிந்தால் ஒரு பூரிப்பும் அதிலே கலந்து வரும். ஆனால் அப்படி இல்லாமல் போய்விடுமோ என்ற அங்கலாய்ப்போடு எங்களது இனம் காத்திருக்கின்றது.

தனியான ஓர் இறைமை மிக்க நாடுகாக அவர்கள் போராடினார்கள். ஆனால் சுயமாக ஆட்சி செய்கின்ற முறையிலாவது நாங்கள் எங்களை ஆளுகின்ற ஒரு முறைமையை ஏற்படுத்த வேண்டும் என்று நாங்கள் விளைகின்றோம். அவர்களுடைய அர்ப்பணிப்பும், தியாகமும் வீணாகப் போய்விடக் கூடாது. அவர்கன் பெற்றோர் இருக்கின்ற காலத்திலேயே ஒரு விடிவு ஏற்பட வேண்டும். சுயாட்சி முறையாவது எங்கள் கைகளில் கிடைக்க வேண்டும் என்று நாங்கள் பயணிக்கின்றோம்.

சில நாள்களுக்கு முன்னர் ஜனாதிபதியை எங்கள் கட்சி சந்தித்துப் பேசியபோதும் இந்த விடயம் குறித்துப் பேசிணோம். அதில் ஒரு மணித்தியாலம் அரசியல் தீர்வு குறித்து பேசினோம். 70 வருடங்களாக வெவ்வேறு வடிவத்திலான போராட்டங்களை நடத்தி வருகின்றோம்.

உலகத்திலே எந்தச் சமூகமும், எந்த மக்களும் இரண்டாந்தரப் பிரஜைகளாக வாழ மாட்டார்கள். அதனை ஏற்கவும் மாட்டார்கள். அப்படியிருக்க ஒரு ஜனநாயகக் கட்டமைப்பிலே ஒரு மக்கள் எண்ணிக்கையில் 3 மடங்காக இருக்கின்றபோது எண்ணிக்கையில் குறைந்ததாகக் காணப்படும் சமூகம் எப்படி சம அந்தஸ்து உடையவர்களாக வாழ முடியும்? ஏனெனில் வாக்கெடுப்பு நடத்தினால் அது ஒரு பக்கமாக சாய்ந்துதான் நிற்கும்.

ஆனபடியால்தான் அதிகாரப் பகிர்வைக் கோருகின்றோம். நாட்டிலே நாங்கள் பெரும்பான்மையாக வாழாவிட்டாலும் நாம் பெரும்பான்மையாக வாழுகின்ற பிரதேசங்களிலே எங்களுக்கான அரச அங்கீகாரங்களைப் பகிர்ந்து கொடுங்கள் எனக் கேட்பதன் தார்ப்பரியம், நியாயப்பாடு அதுதான். இது செய்யப்பட வேண்டும். எவர் நிமித்தம் செய்யப்படாது விட்டாலும் மடிந்துபோன எங்களுடைய மாவீரர்களது தியாகத்தின் நிமித்தமாக அது செய்யப்பட வேண்டும்.

மாவீரர்களது உறவுகள் விசேடமாக அவர்களது பெற்றார்கள் அதனைக் காண வேண்டும். என்னுடைய மகன், என்னுடைய மகள் இதற்காகத்தான் தன்னுடைய வாழ்வைக் கொடுத்தார், அதன் பெறுபேற்றை நானாவது காண்கின்றேன் என்று சொல்லக்கூடியதாக இருக்க வேண்டும்.

தனி நாடு என்ற இலக்கை விட்டு விலகி விட்டோம் எனத் துரோகிப் பட்டம் சூட்டுகின்றவர்கள் இன்றைக்கும் எவராவது தனிநாட்டைக் கோருகின்றார்களா எனக் கேட்டுப் பார்க்க வேண்டும்.

தங்களோடு கூடக் களமாடு மடிந்தவர்களுக்கு என்று அந்தக் காலங்களில் நாட்டின் பயங்கரவாதிகள் என முத்திரை குத்தப்பட்டு வீதி வீதியாக ரயர்கள் போட்டு எரிக்கப்பட்ட தங்களுடைய சகாக்களுக்காக நினைவு கூருகின்றபோது ஜனாதிபதியிடம் கேட்கின்றோம், அந்த நேரத்தில் அடக்குமுறையை மேற்கொண்டவர்களிடம் கேட்கவில்லை, அடக்குமுறைக்கு உட்படுத்தப்பட்டவர்களிடம் நாம் கேட்கின்றோம்.

எங்கள் மக்களிடமிருந்து எங்கள் பிள்ளைகள் மடிந்திருக்கின்றார்கள், ஒரு நியாயத்துக்காகப் போரிட்டு மடிந்திருக்கின்றார்கள், நீங்கள் உங்கள் சகாக்களை நினைவு கூருகின்றீர்கள், அதைப் போற்றுகின்றீர்கள். இந்த நாட்டில் அனைவரும் சமன் என நீங்கள் சொல்கின்றமை உண்மையாக இருக்குமாக இருந்தால் உங்கள் சகாக்களை வணங்குவதுபோள் இதோ இந்த மாவீரர்களது கனவையும் நனவாக்குகின்ற வகையில் அரசியல் தீர்வை ஜனாதிபதி கொடுக்க வேண்டும்.” – என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *