பலதும் பத்தும்

அதிபர் மாளிகையில் மறைத்து வைக்கப்பட்ட 300 கிலோ மரகத கல்

மடகாஸ்கரின் அதிபர் மாளிகையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 300 கிலோ எடையுள்ள பிரமாண்ட, ‘எமரால்டு’ எனப்படும் பச்சை நிற மரகத கல் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக, அந்நாட்டின் புதிய ராணுவ ஆட்சியின் ஜனாதிபதி மைக்கேல் ராண்ட்ரியரினா தெரிவித்துள்ளார்.

கிழக்கு ஆப்ரிக்க நாடான மடகாஸ்கரில், ஊழல், அத்தியாவசிய பொருட்கள் பற்றாக்குறை உள்ளிட்ட காரணங்களினால், சமீபத்தில் இளம் தலைமுறையினர், அரசுக்கு எதிராக போராட்டங்களில் ஈடுபட்டனர்.

இது மிகப் பெரும் போராட்டமாக நாடு முழுதும் பரவியது. இதையடுத்து, போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த அந்நாட்டு முன்னாள் அதிபர் ராஜோலினா, ராணுவத்தினருக்கு உத்தரவிட்டார்.

இதற்கு ராணுவத்தினர் ஒப்புக் கொள்ளவில்லை. மேலும், மாணவர்களுக்கு ஆதரவாக போராட்டத்தில் அவர்களும் பங்கேற்றனர். இதையடுத்து, தனக்கு எதிராக சதி நடப்பதாக கூறி முன்னாள் அதிபர் ராஜோலினா தன் பதவியை ராஜினாமா செய்து, கடந்த மாதம் நாட்டை விட்டு வெளியேறினார்.

இதையடுத்து, ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது. தற்போது, அந்நாட்டின் அதிபராக மைக்கேல் ராண்ட்ரியனரினா பதவியேற்றார்.

இந்நிலையில், ராண்ட்ரியனரினா கூறியுள்ளதாவது:அதிபர் மாளிகைக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 300 கிலோ எடையுள்ள மரகத கல், தேசிய பொக்கிஷத்தில் இருந்ததை கண்டுபிடித்துள்ளோம்.

அரசு கருவூலம் கிட்டத்தட்ட காலியாகியுள்ள நிலையில், சர்வதேச நிதியுதவியைப் பெறவும் சர்வதேச அங்கீகாரத்தைப் பெறவும் புதிய நிர்வாகம் செயல்பட்டு வருகிறது.

அரசு கருவூலத்தை நிரப்ப, அதிபர் மாளிகையில் கைப்பற்றப்பட்ட மரகத கல் ஏலம் விட முடிவு செய்யப்பட்டுள்ளது. இது ஏன் இங்கு மறைத்து வைக்கப்பட்டுள்ளது என எங்களுக்கு தெரியவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button