தனிக் கட்சி சர்வாதிகாரத்துடன் பொலிஸ் இராஜ்ஜியத்தை உருவாக்க அரசு முயற்சி

கிராமத்தில் உள்ள சகல அமைப்புகளினதும் பதவி நிலைகளை தனிக் கட்சிக்கு எடுத்துக் கொண்டு சர்வாதிகாரத்தை,பொலிஸ் இராஜ்ஜியத்தை முன்னெடுக்க அரசு முயற்சிப்பதாக குற்றம் சாட்டிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச,பொலிஸ் தடையகற்றல் சான்றிதழ்களைப் பெற்றுக் கொள்வதற்கு கிராமத்து தேசிய மக்கள் சக்தி சமூக பொலிஸ் குழுத் தலைவரின் சான்றிதழ் கோரப்பட்டமைக்கான ஆதாரங்களையும் சபைக்கு முன்வைத்தார்
பாராளுமனத்தில் விசேட கூற்றை முன்வத்தே இவ்வாறு குற்றம்சாட்டி ஆதாரங்களை முன்வைத்த அவர் மேலும் பேசுகையில்,
பொலிஸ் தடையகற்றல் சான்றிதழ்களைப் பெற்றுக் கொள்வதற்கு, சமூக பொலிஸ் குழுக்களின் தலைவர்களின் பரிந்துரை சான்றிதழ்களைப் பெறுவது அவசியமில்லை என்று பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்தாலும், மாத்தறை, கிரிந்த புஹுல்வெல்ல பிரதேச செயலகப் பிரிவின் கும்பல்கொட கிராம அலுவலர் பிரிவில் கங்காணம் பத்திரனகே அனுராதா மதுஷங்க தனியார் துறையில் தொழிலைப் பெற்றுக் கொள்வதற்காக ஹக்மன பொலிஸ் நிலையத்திலிருந்து பொலிஸ் சான்றிதழைக் கோரும் போது, கிராம அலுவலர் அறிக்கைக்கு மேலதிகமாக, சமூக பொலிஸ் குழுவின் தலைவரான பி. ராமவிக்ரமவின் சான்றிதழ் அவசியம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சான்றிதழ் வழங்கப்பட்ட பின்னரே அவருக்கு பொலிஸ் தடையகற்றல் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் கம்புருபிட்டிய பொலிஸ் பிரிவில், லெனபடுவ கிராம அலுவலர் பிரிவில் 317 C இல் வசிக்கும் டெனெத் என்ற இளைஞர், பொலிஸ் தடையகற்றல் சான்றிதழைக் கோரிய சமயம், சமூக பொலிஸ் குழு உறுப்பினரும், அந்த கிராமத்தின் தேசிய மக்கள் சக்தியின் தலைவருமான சம்பத் விக்ரமசிங்கவிடம் இருந்து சான்றிதழைப் பெற்று வருமாறு கோரப்பட்டுள்ளது. இவருக்கு இதுவரை பொலிஸ் தடையகற்றல் சான்றிதழ் இன்னும் வழங்கப்படவில்லை.
இந்த தகவல்கள் அனைத்தையும் நான் பொறுப்புடன் முன்வைக்கிறேன். இத்தகைய நடவடிக்கை அரசியலமைப்புச்சார் எதேச்சதிகாரத்தை கொண்டு வருவதற்கா அல்லது பொலிஸ் இராஜ்ஜியத்தை உண்டாக்குவதற்கா என்ற பிரச்சினை காணப்படுகின்றது. கிராமத்தில் உள்ள சகல அமைப்புகளினதும் பதவி நிலைகளை தனிக் கட்சிக்கு எடுத்துக் கொண்டு சர்வாதிகாரத்தை ,பொலிஸ் இராஜ்ஜியத்தை முன்னெடுக்க இவர்கள் முயற்சிக்கின்றனர் என்றார்.
![]()