அரசாங்கத்திற்கு எதிராக நுகேகொட நகரில் இன்று எதிர்க் கட்சிகள் பேரணி

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கு எதிரான ஒன்றிணைந்த எதிர்க்கட்சிகளின் பேரணி இன்று வெள்ளிக்கிழமை நுகேகொட நகரில் நடைபெறவுள்ளது.
‘மாபெரும் மக்கள் குரல்’ என்ற தொனிப்பொருளில் இன்று பிற்பகல் 2 மணியளவில் இந்தப் பேரணி ஆரம்பமாகவுள்ளது.
இதில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய தேசியக் கட்சி, ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, பொதுஜன ஐக்கிய முன்னணி பிவித்துறு ஹெல உறுமய உள்ளிட்ட கட்சிகள் பல கலந்துகொள்வதற்கு திட்டமிட்டுள்ளன. இதன்போது முன்னாள் ஜனாதிபதி மகிந்த ரஜபக்ஸ கலந்துகொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. அத்துடன் இந்த பேரணியில் பிக்குகள் உள்ளிட்ட பௌத்த அமைப்புகளை சேர்ந்த பலர் கலந்துகொள்வதற்கு திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
எனினும் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி இந்தப் பேரணியில் கலந்துகொள்ளாது என அறிவித்துள்ளது.
இதேவேளை இந்தப் பேரணியில் ஐக்கிய தேசியக் கட்சி கலந்துகொண்டாலும் கட்சியின் பிரதானிகள் எவரும் கலந்துகொள்ளமாட்டார்கள் என்று தெரிவிக்கப்படுகின்றது.
அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகள் பல நிறைவேற்றப்படாமல் இருப்பது தொடர்பிலும், அரசாங்கத்தினால் முறையற்ற செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாக தெரிவித்தும் அது தொடர்பில் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கும் நோக்கத்திலேயே இந்தப் போராட்டத்தை ஏற்பாடு செய்துள்ளதாக மாபெரும் மக்கள் குரல் அமைப்பின் பிரதான செயற்பாட்டாளரான முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரனர் பிவித்துறு ஹெல உறுமய தலைவர் உதய கம்மன்பில தெரிவித்தார்.
![]()