இலங்கை

புத்தர்சிலை விவகாரம்; தமிழ், முஸ்லீம் மக்களுக்கு தொடர்பில்லை; தேரர் விளக்கம்

திருகோணமலைக் கடற்கரையில் தம்மால் வைக்கப்பட்ட புத்தர்சிலை பொலிஸாரினால் அகற்றப்பட்டு பின்னர் மீளவும் அதே இடத்தில் வைக்கப்பட்ட விவகாரம் தொடர்பில் விளக்கமளிக்கும் செய்தியாளர் சந்திப்பு  நடைபெற்றது.

இதில் கலந்துகொண்ட வணக்கத்திற்குரிய கல்யாண வன்ஸ திஸ்ஸ தேரர், இந்தச் சம்பவத்தில் தமிழ் மற்றும் முஸ்லீம் மக்களுக்கு எவ்வித தொடர்பும் இல்லை எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

தேரர் மேலும் கூறுகையில்,

தமிழ் மக்கள் இந்த விடயத்தில் எவ்வித எதிர்ப்பையும் காட்டவில்லை என்பதை மகிழ்ச்சியுடனும், நேர்மையுடனும் தான் கூறுவதாகவும், இங்குள்ள தமிழர்களும் முஸ்லீம்களும் தன்னுடன் தனிப்பட்ட முறையில் மிகவும் நட்புறவுடனேயே பழகி வருவதாகவும் குறிப்பிட்டார்.

“பொலிஸாரே மிகவும் மோசமாக நடந்துகொண்டனர். எனவே யாரும் இதனை இனரீதியான மோதல் என்று கூறி விடயத்தைத் திசை திருப்ப வேண்டாம் என்றும் தேரர் ஊடகங்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

புத்தர்சிலை வைக்கப்பட்ட இடத்தின் வரலாற்றுப் பின்னணியை விளக்கிய தேரர், “திருகோணமலை கடற்கரையில் 1952 ஆம் ஆண்டு முதல் மாவட்டத்தின் முதலாவது தர்ம பாடசாலை இயங்கி வந்தது. 2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமிப் பேரலையினால் இங்கிருந்த பாடசாலைக் கட்டிடம் முற்றாக அழிவடைந்தது. அது பின்னர் புனரமைக்கப்படவில்லை என்றார்.

நீண்டகாலமாகப் புனரமைக்க வேண்டும் என்ற விருப்பத்தின் அடிப்படையில், இந்த மாதம் விகாரையின் நிர்வாகக் குழுவின் தீர்மானப்படி அழிவடைந்த கட்டிடத்தைக் கட்டுவது என முடிவு செய்யப்பட்டது. அதன்படி சென்ற சனிக்கிழமை வேலைகள் ஆரம்பிக்கப்பட்டதாகவும், தாம் எதனையும் மறைவாகச் செய்யவில்லை என்றும் தேரர் சுட்டிக்காட்டினார்.

புத்தர்சிலை அகற்றம், தாக்குதல் மற்றும் நீதிமன்றத் தீர்ப்பு

கட்டுமானப் பணிகள் திருகோணமலை துறைமுகப் பொலிஸாரால் இடைநிறுத்தப்பட்டது.

எனினும், திட்டமிட்டபடி புத்தர்சிலையை அங்கு வைத்து வழிபாடுகள் நடத்தப்பட்டன.

பொலிஸார் நீதிக்கும், சட்டத்திற்கும் புறம்பாக இந்த இடத்திற்குள் அத்துமீறிப் பிரவேசித்து வணக்கத்திற்குரிய புத்தர்சிலையை பலவந்தமாக அகற்றிச் சென்றனர்” என்று தேரர் குற்றம் சாட்டினார்.

அதைத் தடுக்க முயற்சித்த தன்னையும், வணக்கத்திற்குரிய காசியப்ப தேரர் மீதும் பொலிஸார் தாக்குதல் மேற்கொண்டதாகவும் அவர் தெரிவித்தார்.

தாக்குதலால் பாதிக்கப்பட்ட தாம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு இன்று காலை விகாரைக்குத் திரும்பி உள்ளதாகவும் குறிப்பிட்டார்.

நீதியை நம்புவதாக தேரர் உறுதி தற்போது இந்த விவகாரம் நீதிமன்றத்தில் உள்ளது எனத் தெரிவித்த தேரர், “நேற்று திருகோணமலை நீதிமன்றம் இது தொடர்பில் இடைக்காலத் தீர்மானம் ஒன்றை விடுத்துள்ளது. ‘இந்த இடத்தில் மேலதிகமாக எவ்வித கட்டுமானங்களை மேற்கொள்ள வேண்டாம். தற்போது உள்ளவை அவ்வாறே இருக்க வேண்டும். இறுதித் தீர்மானம் ஒன்று வழங்கப்படும் வரை இதனைப் பின்பற்ற வேண்டும்’ என எமக்குக் கூறப்பட்டுள்ளது.

எனவே நாங்கள் நீதியை, சட்டத்தை மதிக்கின்றோம். எமக்கு உரிய நீதி கிடைக்கும் என நம்புகின்றோம் என குறிப்பிட்டுள்ளார்

இவ் செய்தியாளர் சந்திப்பில் மாவட்டத்தின் பிரதான விகாரைகளின் பிரதம பௌத்த பிக்குகள் பலரும் கலந்துகொண்டனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *