சொல்லித்தான் ஆகவேண்டும்!… அரசியல் பத்தித்தொடர்… 43 … தம்பியப்பா கோபாலகிருஷ்ணன்

கிழக்குத் தமிழர்களுக்கான தனித்துவ அரசியல் கட்டமைப்புப் பொறிமுறை
பிரதேச வாதம் அல்ல – பகுதி 1
கிழக்கு மாகாணத் தமிழர்கள் எதிர்கொள்ளும் சமூக பொருளாதாரப் பிரச்சனைகளுக்கான தீர்வுகளை வென்றெடுப்பதற்குக் கிழக்குத் தமிழர்களுக்கான தனித்துவமான அரசியற் கட்டமைப்பொன்று தேவையென்ற விடயம் அரசியல் பொதுவெளியிலோ, ஊடகங்களிலோ மேலெழும் சந்தர்ப்பங்களிலெல்லாம், அதனைப் புரிந்து கொள்ளாமல் அல்லது புரிந்து கொள்ள விரும்பாமல்-அதன் நடைமுறை யதார்த்தத்தை உணராமல் அல்லது உணர விரும்பாமல் தமிழ்த் தேசியக் கட்சிகள் எனத் தம்மை குறிசுட்டுக் கொண்டு சுயலாப அரசியல்-பிழைப்பு அரசியல் செய்கின்ற தமிழ்க் கட்சிகள் கிழக்குத் தமிழர்களுக்கான தனித்துவ அரசியல் விடயத்தைப் ‘பிரதேசவாதம்’ எனப் பெயர் சூட்டி முலாம்பூசி அதனை முடக்கிவிடும் முனைப்பையே காட்டி வருகின்றன.
கிழக்குத் தமிழர்களுக்கான தனித்துவ அரசியல் என்பது தமிழ்த் தேசியக் கருத்துத்தியலுக்கோ-வடக்குக் கிழக்கு மாகாணங்கள் இணைந்த மொழிவாரி மாகாண அதிகாரப் பகிர்வு அலகுக்கோ கடுகளவும் எதிரானதல்ல.
ஆனால் இலங்கையில் கடந்த எழுபத்தைந்து வருட காலத்திற்கும் மேலாக நடைமுறையிலிருந்துவரும் தமிழ்த் தேசிய அரசியலென்பது ஒடுக்கப்பட்ட விளிம்பு நிலை மக்களின் நலன்களுக்கான முற்போக்கான-புரட்சிகர சிந்தனைகளின் மீது கட்டமைக்கப் பெறாமல் யாழ் மேலாதிக்க மேட்டுக்குடி ‘பூர்சுவா’க் கருத்தியல்கள் மீது கட்டமைக்கப்பெற்று வளர்த்தெடுக்கப்பட்டதொன்றாகும்.
கடந்த எழுபத்தைந்து வருடங்களுக்கும் மேலாகத் தமிழர் விடுதலைப் போராட்ட அரசியல்-தமிழ்த் தேசிய அரசியல் என்ற பெயரில் முன்னெடுக்கப்பட்ட யாழ் மையவாத அரசியலின் பாதிப்பு அனுபவங்களால் படித்த பாடங்களால்தான் அவ்வாறான தனித்துவ அரசியலின் தேவையைக் கிழக்குத் தமிழர்கள் நாட வேண்டியுள்ளது. இக்கூற்றை எண்பிக்க கடந்த கால அரசியல் வரலாற்றின் பக்கங்களைப் புரட்டவேண்டியுள்ளது.
பக்கம் -01
1947-இல் நடைபெற்ற இலங்கையின் சோல்பரி அரசியல் அமைப்பின் கீழான முதலாவது பாராளுமன்றத் தேர்தலில் அப்போதைய மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைந்த கல்முனைத் தொகுதியில் ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற எம் எஸ் காரியப்பர் அவர்கள் பிரதமர் டி எஸ் சேனாநாயக்க தலைமையிலான அப்போதைய அரசாங்கத்தில் உள்நாட்டு அலுவலகங்கள் மற்றும் கிராம அபிவிருத்திப் பிரதி அமைச்சராகப் பதவி வகித்தார்.
அப்போதைய மட்டக்களப்பு மாவட்டத்தின் தென்பகுதியில் அமைந்திருந்த ‘பட்டிப்பளை’ ஆற்றுப் படுக்கைப் பிரதேசத்தில் கிழக்கு மாகாணத்திற்கு வெளியேயுள்ள மாவட்டங்களிலிருந்து சிங்களவர் திட்டமிட்டுக் குடியேற்றப்படக் காரணமாயிருந்ததும் பின்னாளில் (1962இல்) மட்டக்களப்பு மாவட்டத்தின் தென்பகுதி துண்டாடப்பட்டு ‘அம்பாறை மாவட்டம்’ உருவாகக் காரணமாயிருந்த கல்லோயா நீர்ப்பாசனத் திட்டம் உருவாகவும் அது நிறைவேறவும் பாரிய பங்களிப்புச் செய்தவர் எம். எஸ் காரியப்பர்.
1952 ல் நடைபெற்ற கல்முனைப் பட்டினசபைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்று அதன் தலைவராகப் பதவி வகித்த காலத்தில் கல்முனைத் தமிழர்களுக்குப் பல பாரபட்சமான செயற்பாடுகளையும் இன்னல்களையும் எம் எஸ் காரியப்பர் மேற்கொண்டார்.
நூறு வீதம் தமிழர்களைக் கொண்டிருந்த கல்முனைக் கிராமத்தையும் முஸ்லிம் பெரும்பான்மைக் கிராமமான கல்முனைக்குடியையும் இணைத்து முஸ்லிம் பெரும்பான்மையாக வருமாறு ‘கல்முனைப் பட்டினசபை’ யை உருவாக்குவதில் எம் எஸ் காரியப்பருக்கும் பங்கிருந்தது. ‘கல்முனைப் பட்டினசபை’ உருவானதன் பின்பு அதன் முஸ்லிம் பெரும்பான்மை நிர்வாகத்தால் கல்முனைத் தமிழர்களுக்குப் பல பாரபட்சங்கள் இழைக்கப்பட்டன.
இப்படித் தமிழர் விரோத செயற்பாடுகளைப் பின்னணியாகக் கொண்டிருந்த எம் எஸ் காரியப்பரைத் தேடிப் பிடித்தே 1956 ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் இலங்கைத் தமிழரசுக் கட்சி கல்முனைத் தொகுதியில் வேட்பாளராக நிறுத்தி தமிழர்களின் வாக்குகளைப் பெற்றுக்கொடுத்து வெற்றியீட்ட வைத்தது. இத்தேர்தலில் வெற்றிபெற்ற இவர் ஆறு மாதங்களின் பின்னர் பிரதமர் எஸ் டபிள்யூ ஆர் பண்டாரநாயக்க தலைமையிலான மக்கள் ஐக்கிய முன்னணி அரசில் இணைந்து பிரதி நீதி அமைச்சர் பதவியைப் பெற்றுக் கொண்டு தமிழர்களுக்குப் பாரபட்சமான செயற்பாடுகளையும் மேற்கொண்டார்.
கல்முனைத் தமிழர்களின் எதிர்கால நலன்களை விடவும் தமது கட்சிக்குப் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரை (அவர் தமிழர் விரோத மனப்போக்குடையவராக இருந்தாலும்கூட) பெற்றுக் கொள்வதுதான் யாழ் மையவாத இலங்கைத் தமிழரசுக் கட்சிக்குத் தேவையாகவிருந்தது.
அன்று அதிகாரத்தில் இருந்துகொண்டு எம் எஸ் காரியப்பர் இழைத்த தமிழர்களுக்குப் பாரபட்சமான செயற்பாடுகளின் காரணமாகவே இன்றும்கூடக் கல்முனைத் தமிழர்கள் ஒரு முழுமையான கல்முனை வடக்குப் பிரதேச செயலகத்திற்காகப் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.
வடமாகாணத்தைத் தளமாகக்கொண்ட தமிழ்த் தேசிய அரசியற் கட்சிக்குத் தேர்தல் வெற்றிகளைத் தவிர (1989 இலிருந்து தேசியப்பட்டியல் ஆசனங்களுக்காகவும்) கிழக்குத் தமிழர்களின் எதிர்கால சமூகப் பொருளாதார அரசியல் நலன்களின் மீது ஆத்மார்த்தமான அக்கறையில்லை என்பதற்கு இது ஒரு முதல் எடுத்துக்காட்டாகும்.
பக்கம்-02
1957-இல் கைச்சாத்தான பண்டா-செல்வா உடன்படிக்கையில் தமிழரசுக் கட்சி வட மாகாணத்திற்கு ஒரு பிராந்திய சபையையும் (கிழக்கு மாகாணத் தமிழர்களுடன் ஒரு பரந்துபட்ட முறையான கலந்துரையாடலை மேற்கொள்ளாமல்) கிழக்கு மாகாணத்துக்கு இரண்டு அல்லது இரண்டிற்கு மேற்பட்ட பிராந்திய சபைகளையும் முன்மொழிந்தமை யாழ் மையவாத அரசியல் தரப்பு கிழக்குத் தமிழர்களை ‘கிள்ளுக் கீரையாக’ எண்ணிக் கொண்டிருந்ததாலேயே ஆகும்.
(தொடரும்…)
![]()