இலங்கை

அரச எதிர்ப்புப் பேரணியில் பங்கேற்க மாட்டேன்; காரணங்களை பகிரங்கமாக முன்வைத்த மஹிந்த

எதிர்வரும் 21 ஆம் திகதி நுகேகொடையில் எதிர்க்கட்சிகளின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ள அநுர அரசுக்கு எதிரான பேரணியில் தான் பங்கேற்கப்போவதில்லை என முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவருமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இந்த அரச எதிர்ப்புப் பேரணியில் தான் பங்கேற்காதமைக்கு இரண்டு காரணங்கள் உள்ளன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவிக்கையில்,

தங்காலையில் தினமும் என்னைப் பார்க்க வரும் மக்களைத் தவறவிட முடியாது என்பதாலும், தங்காலையில் இருந்து நுகேகொடை வரை பயணம் செய்வதில் கூடுதல் நேரத்தைச் செலவிட வேண்டியிருப்பதாலும் நுகேகொடையில் நடைபெறவுள்ள அரச எதிர்ப்பு பேரணியில் நான் பங்கேற்கமாட்டேன்.

இருப்பினும், அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஏற்பாடு செய்துள்ள பேரணியில் எனக்கு எந்த வெறுப்பும் இல்லை. இந்தப் பேரணியை நினைத்து நான் மிகவும் மகிழ்ச்சியடைகின்றேன். இந்த நிகழ்வில் நான் பங்கேற்காதது சிலரால் தவறாகப் புரிந்துகொள்ளப்படலாம். – என்றார்.

எனினும், எதிர்வரும் 21 ஆம் திகதி நுகேகொடையில் நடைபெறவுள்ள அரச எதிர்ப்புப் பேரணியில் மக்களைத் திரட்டும் நோக்கில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ எம்.பி. நேற்றுமுன்தினம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் ஒரு கலந்துரையாடலை நடத்தினார்.

இந்தக் கூட்டத்துக்குப் பிறகு ஊடகங்களிடம் பேசிய நாமல் ராஜபக்ஷ, எதிர்க்கட்சிகளால் நுகேகொடையில் நடத்தப்படும் அரச எதிர்ப்புப் பேரணியில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி முக்கிய பங்கு வகிக்கும் என்று கூறியிருந்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *