இலங்கை

பெருமளவு போதைப்பொருளுடன் தே.ம.ச. நகரசபை உறுப்பினரின் கணவனும் மகனும் பிடிபட்டனர்

அனுராதபுரம் பகுதியில் ஹெரொயினுடன் கைது செய்யப்பட்ட அதிபரின் மனைவி, தேசிய மக்கள் கட்சியின் பேலியகொட நகரசபை உறுப்பினருமான டிஸ்னா நெரஞ்சலா என்பவர், பாரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரரும் குற்றவாளியுமான கொஸ்கொட சுஜியின் உறவினர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் ஹெரொயினுடன் கைது செய்யப்பட்ட அதிபரின் சொத்துக்கள் குறித்தும் விசாரணை நடத்தப்படும் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தேசிய மக்கள் கட்சியின் பேலியகொட நகரசபை உறுப்பினர் டிஸ்னா நெரஞ்சலவின் கணவர் நேற்று முன்தினம் புதன்கிழமை கைது செய்யப்பட்டார்.

கடந்த மாதம் 29ஆம் திகதி, அனுராதபுரத்தின் இபலோகம பகுதியில் ஹெரொயினுடன் ஒரு இளைஞன் இபலோகம பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

சந்தேக நபர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டிருந்தபோது, அவரைப் பார்க்க வந்த நண்பர் ஒருவரிடம், தனது வீட்டில் ஒரு ஹெரோயின் பொட்டலம் இருப்பதாகவும், அதை வீட்டிற்கு அருகிலுள்ள குளத்திற்கு அருகில் மறைத்து வைக்குமாறும் அறிவுறுத்தியுள்ளார்.

அதன்படி, அந்த நண்பர் அதனை எடுத்துச் சென்று மறைத்து வைத்துள்ளார். இதற்கிடையில், சந்தேகநபர் தனது தந்தையிடம், அந்தப் போதைப்பொருள் தொகையை நண்பரிடமிருந்து மீண்டும் பெற்று வீட்டின் பின்னால் மறைத்து வைக்குமாறு கூறியுள்ளார்.

அந்தப் பொட்டலத்தில் 2 கோடி ரூபாவுக்கும் அதிகம் பெறுமதியான ஒரு கிலோவுக்கும் அதிகமான ஹெரோயின் இருப்பதால், நண்பர் அதைத் திருடிச் செல்ல வாய்ப்புள்ளதாகச் சந்தேகநபர் தனது தந்தையிடம் கூறியதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதன்படி, சந்தேகநபரின் தந்தை, அந்த நண்பர் மூலமாகவே ஹெரோயின் தொகையை மீளப் பெற்று, கல்நேவவில் உள்ள தமது வீட்டின் பின்னால் குழி தோண்டிப் புதைத்துள்ளார்.

பின்னர், அனுராதபுரம் பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியகத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், அதிபரின் சக ஊழியர் முதலில் கைது செய்யப்பட்டார், விசாரணையின் போது, மறைத்து வைக்கப்பட்டிருந்த போதைப் பொருள் பற்றிய தகவல்கள் தெரியவந்துள்ளது.

அதன்படி, வீட்டின் பின்னால் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஹெரோயின் பார்சல் கண்டுபிடிக்கப்பட்டது, அதில் ஒரு கிலோ, 185 கிராம், 400 மில்லி கிராம் ஹெரோயின் இருப்பு கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பின்னர், பொலிஸார் சந்தேக நபரின் தந்தையைக் கைது செய்துள்ளனர், விசாரணையின் போது, அவர் அந்தப் பகுதியில் உள்ள ஒரு பாடசாலையின் அதிபர் என்பது தெரியவந்துள்ளது.

தொடர்ந்து நடந்த விசாரணைகளின் போது அவரது மனைவி பேலியகொட நகர சபையின் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் டிஸ்னா நெரஞ்சலா என்பது தெரியவந்துள்ளது.

இதன்படி, நேற்று முன்தினம் புதன்கிழமை மதியம் பேலியகொடவில் உள்ள அவரின் வீட்டையும் பொலிஸார் சோதனை செய்துள்ளனர்.ஆனால் அங்கு சந்தேகத்திற்குரிய எதுவும் கிடைக்கவில்லை.

இதற்கிடையில், சம்பந்தப்பட்ட அதிபரின் மனைவி பெரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரரும் குற்றவாளியுமான கொஸ்கொட சுஜியின் உறவினர் என்று பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட அதிபர் மற்றும் மற்றைய சந்தேக நபர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளனர்.

அவர்களின் சொத்துக்கள் குறித்து விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *