மழை நீர் தேங்கி நிற்பதனால் செம்மணிப் புதைகுழி அடுத்த வருடமே தோண்டப்படும்

செம்மணி மனிதப் புதைகுழிக்குள் மழை நீர் தேங்கி நிற்பதனால் அடுத்த வருடமே மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்படும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
செம்மணி மனிதப் புதைகுழியில் இருந்து இதுவரையில் இரண்டு கட்டங்களாக மேற்கொள்ளப்பட்ட அகழ்வு பணிகளின் போது, 240 மனித என்புக்கூட்டு எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் 239 என்புக்கூட்டு எச்சங்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளுக்கான நிதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் மூன்றாம் கட்ட அகழ்வாய்வு பணிகளை முன்னெடுப்பது தொடர்பில் ஆராய்வதற்காக யாழ்.நீதிவான் நீதிமன்ற நீதிவான் எஸ்.லெனின்குமார், சட்டவைத்திய அதிகாரி செல்லையா பிரணவன் , சட்டத்தரணிகளான வி.நிரைஞ்சன், ஞா.ரனித்தா, பூரணி மரியநாயகம், குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர், பொலிஸார் உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் நேற்றுக் காலை அங்கு சென்று பார்வையிட்டனர்.
இதன் போது புதைகுழிக்குள் மழைநீர் பெருமளவில் தேங்கி நிற்பதனால் அடுத்த கட்ட அகழ்வுப் பணிகளை மேற்கொள்வது தொடர்பில் எதிர்வரும் ஜனவரி மாதம் 19 ஆம் திகதி மீண்டும் அகழாய்வு தளத்திற்கு சென்று பார்வையிட்ட பின்னர், அடுத்த கட்ட அகழ்வுப் பணிகளை முன்னெடுப்பது தொடர்பில் ஆராயப்படும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
![]()