இலங்கை

ஜே.வி.பி.யின் சர்வாதிகாரம் தொடர்கிறது; சபாநாயகரிடமிருந்து எந்தப் பதிலுமில்லை

இன்று சமூகத்தில் ஜனநாயகம் குழிதோண்டி புதைக்கப்பட்டுள்ளது. ஒரு பக்கம் கொலைக் கலாசாரம் தொடரும் அதே நேரம் மறுபக்கம் ஜே.வி.பி.யின் சர்வாதிகாரமும் தொடர்வதாக எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

தற்போதுள்ள முறைமையில் மாற்றத்தைக் கொண்டு வந்து, நீதி நியாயம் மற்றும் சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டுவதாக உறுதியளித்து தற்போதைய அரசாங்கம் கொண்டு வந்துள்ள புதிய முறைமை மாற்றத்தில், கொலை கலாசாரம் பரவலடைந்து, கொலைகள் அதிகரித்து வருகின்றன. தற்போது போட்டிக்கு மக்கள் கொல்லப்பட்டு வருகின்றனர். மக்கள் பிரதிநிதிகள் வெளியே சென்று மக்களுக்கு சேவை ஆற்ற முடியாத நிலை எழுந்துள்ளது என்றும் தெரிவித்தார்.

கொழும்பு மட்டக்குளி பிரதேசத்தில் நேற்று முன்தினம் புதன்கிழமை மாலை இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

இத்தகைய சூழ்நிலைக்கு மத்தியில், அரசாங்கம் பொய் சொல்லிக் கொண்டு, சமூகத்தை கொலைகாரர்கள், பாதாள உலகக் கும்பல்கள் மற்றும் கொலையாளிகளிடம் ஒப்படைத்துள்ளது. அச்சுறுத்தல்களையும் மிரட்டல்களையும் விடுத்து, அரசாளுகையில் சர்வாதிகார போக்கை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகின்றது. அரசை மையமாகக் கொண்ட சர்வாதிகார கட்டமைப்பை உருவாக்கி, ஜனநாயகத்தை குழிதோண்டி புதைக்கும் முயற்சிகளை தற்போது மேற்கொண்டு வருகிறது.

ஐக்கிய மக்கள் சக்தியைச் சேர்ந்த வெலிகம தவிசாளர், தனது உயிருக்கு அச்சுறுத்தல்கள் இருப்பதாகக் கூறி, பொலிஸ் மா அதிபருக்கு எழுத்து பூர்வமாக கோரிக்கை விடுத்திருந்தார், ஆனாலும் இறுதியில் அவருக்கு பாதுகாப்பு வழங்கப்படாததால் அவர் கொலையாளிகளுக்கு பலியானார். ஜகத் விதானா எம். பி.க்கும் உயிருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. இந்த உயிர் அச்சுறுத்தல்களை பொலிஸார் வெளிப்படுத்தவில்லை. ஜகத் விதான அவர்கள் தான் வெளிக்கொணர்ந்தார். இது குறித்து ஜகத் விதான பேசும் போது, பொலிஸ் மா அதிபர் நேரடியாகவே அவரை குற்றவாளியாக்கியுள்ளார்.

எதிர்க்கட்சியைச் சேர்ந்த உள்ளூராட்சி மன்றத் தவிசாளர்கள், உறுப்பினர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களின் உயிருக்கு அரசாங்கமே பொறுப்பு. பாதுகாப்பை உறுதி செய்யுமாறு சபாநாயகருக்கு எழுத்துபூர்வமாக அறிவித்தும், வேண்டுகோள் விடுத்தும் இதுவரை எந்த பதிலும் இல்லை. நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டதாக தெரியவில்லை. எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு ஏதேனும் நடந்தால், அரசாங்கமே பொறுப்புக் கூற வேண்டும். பொய்களை ஒதுக்கி வைத்துவிட்டு, சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்தக் கொலைகாரர்கள், போதைப்பொருள் கும்பல்கள் அல்லது திட்டமிட்ட குற்றச் செயல்களை மேற்கொண்டு வரும் கும்பல்களுடன் ஐக்கிய மக்கள் சக்தியினருக்கு எந்தவித தொடர்புகளும் இல்லை என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *