இலங்கை

அநுர அணியை விரைவில் வீட்டுக்கு விரட்டியடிப்போம்! நாமல் நம்பிக்கை

மக்களின் ஆணையை மீறிச் செயற்படும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவையும் அவர் தலைமையிலான அரசையும் மக்களின் ஆதரவுடன் மிக விரைவில் வீட்டுக்கு விரட்டியடிப்போம் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

ஜனாதிபதி அநுர மீதும் அவர் தலைமையிலான அரசு மீதும் நாட்டு மக்கள் கடும் அதிருப்தியடைந்துள்ளனர். மக்களின் ஆணையை மீறி அவர்கள் செயற்பட்டு வருகின்றார்கள்.

அரசின் முறையற்ற தீர்மானங்களுக்கு எதிராகப் போராடும் மக்களை பொலிஸார் மூலம் துன்புறுத்தி அடக்க ஜனாதிபதி முயல்கின்றார்.

கடந்த ஆட்சியாளர்களுக்கு எதிராகப் போலிக் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து அவர்களை ஜனாதிபதி அநுரவும் அவர் தலைமையிலான அரசும் திட்டமிட்டுப் பழிவாங்கி வருகின்றனர்.

இந்த அநுர அணியை மக்களின் ஆதரவுடன் மிக விரைவில் வீட்டுக்கு விரட்டியடிப்போம். மொட்டுக் கட்சியின் ஆட்சி மீண்டும் மலரும் என்பது உறுதி.

மேலும் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்காக தன்பாலினத்தவர்களுக்குரிய வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்குமாறு சுற்றுலாத்துறை அதிகார சபை அறிவித்துள்ளமை முறையற்றது. இந்த தீர்மானத்தை அரசாங்கம் மீள்பரிசீலனை செய்ய வேண்டும் என நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

இது இலங்கையின் கலாசாரத்துக்கு பொருத்தமற்றது. ஆகவே அரசாங்கம் இந்த தீர்மானத்தை மீள்பரிசீலனை செய்ய வேண்டும். 16 வயது பிள்ளை சுய விருப்பத்தின் அடிப்படையில் உடலுறவில் ஈடுபட்டால் என்ன பிரச்சினை உள்ளது என்று அமைச்சர் ஒருவர் பாராளுமன்றத்தில் குறிப்பிட்டார்.

ஹன்சாட் பதிவிலும் இது உள்ளது. பிள்ளைகள் உள்ள பெற்றோர் எவ்வாறு இப்படி பேசுகிறார்கள் என்பதை அறிய முடியவில்லை என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *