உலகம்

கோப்பையில்லாமல் வெற்றியை கொண்டாடிய இந்திய அணி; காசோலையை தூக்கி வீசிய பாக்கிஸ்தான் வீரர்

பாகிஸ்தானின் உள்துறை அமைச்சரும், ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவருமான மோஷின் நக்வி கையில் இருந்து ஆசியக் கோப்பையை வாங்க இந்திய அணி வீரர்கள் மறுத்த சம்பவம் தற்போது பேசுபொருளாகியுள்ளது.

அதிகாரப்பூர்வ பரிசளிப்பு இல்லாத நிலையில், இந்திய வீரர்கள், வெற்றிக் கோப்பையை கையில் தூக்கிக் கொண்டிருப்பதுபோல் கைகளை உயர்த்தி கற்பனை கொண்டாட்டத்தில் ஈடுபட்ட காணொளிகள் தற்போது வைரலாகி வருகின்றன.

ஆசிய கோப்பை இறுதிப்போட்டி நேற்று இரவு துபாயில் நடைபெற்றது. இதில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் துடுப்பாடிய பாகிஸ்தான் 19.1 ஓவரில் 146 ஓட்டங்களுக்கு  ஆல் அவுட்டானது.

இதையடுத்து 147 ஓட்டங்கள்  எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்தியா 19.4 ஓவரில் 150 ஓட்டங்கள் எடுத்து அபார வெற்றி பெற்று ஆசிய கோப்பையை கைப்பற்றி அசத்தியது.

இந்த நிலையில், பாகிஸ்தானின் உள்துறை அமைச்சரும், ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவருமான மோஷின் நக்வி கையில் இருந்து ஆசியக் கோப்பையை வாங்க இந்திய அணி வீரர்கள் மறுத்தனர்.

இந்திய அணி கோப்பையை பெற்றுக்கொள்ளாததால் ஆசியக்கோப்பை நிர்வாகம் கோப்பையை கையோடு தூக்கி சென்றது.

இதனிடையே, இந்திய வீரர்கள் 2024 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பையில் கேப்டன் ரோகித் கோப்பையை கொண்டுவந்தது போல சைகை செய்து இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் மற்றும் வீரர்கள் பதக்கமில்லாமல் வெற்றியை கொண்டாடினர்.

இதேவேளைஆசியக் கோப்பை தோல்விக்குப் பிறகு பாகிஸ்தான் கேப்டன் சல்மான், தனது சொந்த நாட்டு அமைச்சரையே அவமதித்ததாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

விருது வழங்கும் நிகழ்வில் ஆட்டநாயகன் மற்றும் தொடர்நாயகன் உள்ளிட்ட பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டன.

அதனை தொடர்ந்து, இரண்டாவது இடம் பிடித்த பாகிஸ்தான் வீரர்களுக்கு விருதுகள் வழங்கப்பட பிறகு, கேப்டன் சல்மான் அலி அகா பரிசுத்தொகையை பெறுவதற்காக மேடைக்கு அழைக்கப்பட்டார்.

அதன்படி வந்தவரிடம், பாகிஸ்தான் அமைச்சர் உள்ளிட்ட விருந்தினர்கள் சேர்ந்து, சுமார் 66 லட்ச ரூபாய்க்கான காசோலை மாதிரியை வழங்கினர்.

ஆனால், அடுத்த நொடியே இறுக்கமான முகத்துடன் கோபத்தில் இருந்த சல்மான் அந்த காசோலை மாதிரியை தூக்கி வீசினார்.

இதனை கண்ட மேடையிலிருந்த விருந்தினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

அதேநேரம்,  இந்திய ரசிகர்கள் கூக்குரலிட்டு எதிர்ப்பை பாரத் மாதா கி ஜெய் என முழக்கமிட்டனர். மேலும் இந்த காட்சிகள் வீடியோவில் பதிவாக தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளன.

இந்த சம்பவம், ஏற்கனவே எதிரெதிராகவுள்ள இரு அண்டை நாடுகளின் கிரிக்கெட் உறவை மேலும் மோசமாக்கி, எதிர்கால தொடர்களின் நடைமுறைகள் குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளன.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *