இலங்கை

மாற்ற நினைத்தது சிங்கப்பூராக மாறியது சித்திரவதைக் கூடங்களாக

ஶ்ரீலங்காவை சிங்கப்பூராக மாற்றுவதாக கூறிக்கொண்டு சித்திரவதை கூடங்களாகவே மாற்றியுள்ளனர் என்று இலங்கை தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நடைபெற்ற, முன்னாள் ஜனாதிபதிகளின் உரித்துரிமைகள் நீக்குதல் சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

நிறைவேற்று ஜனாதிபதி ஆட்சி முறைமையை ஜே.ஆர் ஜயவர்தன கொண்டு வந்ததுடன் அவருடன் இதுவரையில் 8 ஜனாதிபதிகள் நாட்டை ஆட்சி செய்துள்ளனர். ஜனநாயக ஆட்சி முறைக்குள் சர்வாதிகாரத்தை புகுதித்திய ஆட்சி முறையாகவே இதனை நாங்கள் பார்க்கின்றோம். இந்த ஆட்சி முறையானது எங்களுக்கு என்ன நன்மை செய்தது.இந்நிலையில் எங்களை பொறுத்தவரையில் உரித்துரிமைகளை இல்லாமல் செய்வதையும் விட ஜனாதிபதி ஆட்சி முறை இருக்கக்கூடாது என்பதே எங்களின் நிலைப்பாடாகும்.

இதேவேளை இப்போது மண்ணை தோண்டும் போது எலும்புகூடுகளை காண்கின்றோம். 230க்கும் மேற்பட்ட எலும்புகூடுகள் செம்மணியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஜனாதிபதியாக சந்திரிகா இருந்த போது இந்த நிலைமை ஏற்பட்டிருந்தது. வடக்கில் மாத்திரமன்றி கிழக்கிலும் இந்த நிலைமை இருந்தது. இந்நிலையில் இப்போது மனித புதைகுழிகள் மட்டுமன்றி போதைப் பொருட்களும் குழிகளில் இருந்து மீட்கப்படுகின்றன. இதற்கெல்லாம் ஜனாதிபதி ஆட்சி முறையே காரணமாக இருந்துள்ளது. இதனால் இந்த ஆட்சி முறையை முழுமையாக அரசியலமைப்பில் இருந்து நீக்க வேண்டும் என்பது எங்களின் நிலைப்பாடாகும் அதேபோன்று அளவுக்கடந்த சுகபோகங்கள் இவர்களுக்கு இருக்கக்கூடாது என்பதும் எங்களின் நிலைப்படாகும்.

ஜனாதிபதியொருவர் அரசு, அரசாங்கம், ஆட்சித்துறை மற்றும் ஆயுதப் படையின் தலைவராக இருக்கின்றார். இவ்வளவு தலைமத்துவத்தை வைத்துக்கொண்டு இந்த நாடு முன்னேற்றமடைந்துள்ளதா?

ஶ்ரீலங்காவை சிங்கபூராக மாற்றப் போவதாக ஜே.ஆர்.ஜயவர்தன கூறியிருந்தார். ஆனால் சித்திரவதை கூடங்கள்தான் இங்கே உருவாக்கப்பட்டுள்ளனவே ஒழிய, சிங்கபூராக மாற்றப்படவில்லை என்பதன அனுபவத்தில் கூறுகின்றோம்.

நாட்டில் பல புதைகுழிகள் உருவாக்கப்பட்டுள்ளன. ஆட்சியாளர்கள் இதனை செய்துள்ளனர். இப்போது போதைப் பொருட்களும் புதைகுழிகளில் இருந்து மீட்கப்படுகின்றன. ஜனாதிபதிகளாக இருந்தவர்கள் தங்களின் அதிகாரங்களை பயன்படுத்தி செய்த சேவைகளை விட இவர்களால் மக்கள் பட்ட அவஸ்தைகள்தான் அதிகமாக உள்ளன.

உதாரணத்திற்கு மிருசுவில் கொலைகள் தொடர்பான குற்றத்துடன் தொடர்புடையவரை ஜனாதிபதியாக இருந்த கோதாபய ராஜபக்ச பொதுமன்னிப்பில் விடுதலை செய்துள்ளார். அப்படியென்றால் இனவாத ரீதியிலான செயற்பாடுகளே அளவுக்கு அதிகமாக நடந்துள்ளன. இவ்வாறு செய்தவர்களுக்கு உச்சமான சிறப்புரிமைகளுடனான வாழ்க்கையை அமைப்பதில் சமத்துவம், சம உரிமை இருக்காது. மக்களின் வாழ்வாதரத்தை கட்டியெழுப்புங்கள். அப்போதே நாடு அபிவிருத்தியடையும் என்றார்

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *