ஜெனீவாவில் விஜித பொய் பேசினார்; சுமந்திரன் தெரிவிப்பு

வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில் உரையாற்றும் போது காணி அபகரிப்பு வர்த்தமானி சம்பந்தமாக உண்மைக்குப் புறம்பான கருத்தை வெளியிட்டதாக தெரிவித்த இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன்,
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் நாட்டின் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்த கருத்து தொடர்பாக தனது சமூக வலைத்தளத்தில் பதிவொன்றையிட்டே இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஜெனீவாவில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் அமர்வில் கருத்து தெரிவித்த வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், “உயர் ஆணையத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள வர்த்தமானி, இந்தப் பிரச்சினையைத் தீர்க்கும் உண்மையான நோக்கத்துடன் நல்லெண்ணத்துடன் வெளியிடப்பட்டது என்பதை நாங்கள் மீண்டும் வலியுறுத்த விரும்புகிறோம். கவலைகள் குறித்து தெரிவிக்கப்பட்டவுடன், நீதிமன்றத் தீர்ப்பு வெளியிடப்படுவதற்கு முன்பே, அரசாங்கத்தால் வர்த்தமானி திரும்பப் பெறப்பட்டது” – என்றார்.
வர்த்தமானியை ரத்து செய்வது குறித்து அரசு எந்த உறுதிமொழியையும் வழங்கத் தவறியதை அடுத்து, ஜூன் 27 ஆம் திததி காலை SC FR 112/2025 என்ற வழக்கின் கீழ் உயர் நீதிமன்றம் வர்த்தமானியின் செயல்பாட்டைத் தடுத்து நிறுத்தி இடைக்கால உத்தரவைப் பிறப்பித்தது.
வர்த்தமானியில் காணி சுவீகரிப்புக்கான காலக்கெடுவுக்கான கடைசி நாளாக 28 ஆம் திகதி இருக்கும்போது ஜூன் 27 ஆம் திகதி நள்ளிரவில் அரசாங்கம் வர்த்தமானியை ரத்து செய்து திரும்பப் பெற்றது. எனவே, “நீதிமன்றத் தீர்ப்புக்கு முன்பே அரசு அதை திரும்பப் பெற்றது” என்று சொல்வது சரியல்ல – என்றார்.
![]()