கச்சதீவுக்கு சென்று விஜய்க்கு அநுர படம் காட்டுகிறாரா?

ஜனாதிபதி அநுரகுமார கச்சதீவுக்கு சென்று தென்னிந்திய நடிகர் விஜய்க்கு படம் காட்ட வேண்டிய அவசியமில்லை.உண்மையில் ஜனாதிபதி இஸ்ரேலியர்களினால் ஆக்கிரமிக்கப்படும் அறுகம் குடாவுக்கே சென்றிருக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தி எம்.பி முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இடம்பெற்ற இலங்கைக்கும்,ஐக்கிய அரபு இராச்சியத்துக்கும் இடையிலான பல்துறை ஒப்பந்தம் தொடர்பான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் பேசுகையில்,
விஜயால் மட்டும் கச்சதீவை இலங்கையிடமிருந்து பெற முடியாது. கச்சதீவு என்பது இந்தியாவின் மத்திய அரசாங்கம் பேச வேண்டிய விடயம்.எனவே ஜனாதிபதி கச்சதீவுக்கு விஜயம் செய்ய வேண்டியதில்லை.
விஜயை விட பலம் வாய்ந்த எம்.ஜி.ஆர் ,ஜெயலலிதா மற்றும் கருணாநிதி போன்றோர் தமிழ்நாட்டை ஆட்சி செய்த போதும் கச்சதீவில் கை வைக்க அவர்களினால் முடியவில்லை.ஆகவே, இந்த அரசியல் படம் காட்டும் வேலையை அரசாங்கம் நிறுத்திக்கொள்ள வேண்டும்.
ஜனாதிபதி கச்சதீவுக்கு செல்லாமல் அறுகம் குடாவுக்கு செல்ல வேண்டும்.அப்பகுதியை இஸ்ரேலியர்கள் ஆக்கிரமித்துள்ளனர். அரசாங்கம் எதிர்க்கட்சியில் இருக்கும் போது, பலஸ்தீனியர்களுக்காக குரல் கொடுத்து விட்டு தற்போது இஸ்ரேலியர்களுக்கு ஆதரவாக செயற்படுகின்றது என்றார்.
![]()