அநுரவின் சந்திப்பால் உஷார் பெற்ற தையிட்டி விகாராதிபதி

பாட்டாளிகளின் பிள்ளை என கூறும் ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க சட்டவிரோத தையிட்டி விகாராதிபதியிடம் ஆசிபெற்றதன் மூலம் அந்த சட்டவிரோத தையிட்டி ஆக்கிரமிப்பாளர்களை உற்சாகப்படுத்தியுள்ளது என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் தையிட்டியில் சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ள திஸ்ஸ விகாரையை அகற்றக்கோரி நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை பௌர்ணமி நாளில் நடந்த போராட்டத்தில் கருத்து தெரிவித்த போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இம்முறை பௌர்ணமி நாளில் தையிட்டியில் சட்டவிரோதமாக விகாரையை அமைத்த ஆக்கிரமிப்பாளர்கள் மிகவும் உற்சாகமாக ஒலிபெருக்கி மூலமாக பிரித் ஓதுதல்களை ஆரம்பித்துள்ளார்கள்.கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒலிபெருக்கி மூலம் பிரித் ஓதுவதனை தவிர்த்து செயற்பட்டவர்கள் தற்போது மீளவும் உற்சாகமாக ஒலிபெருக்கி மூலம் பிரித் ஓதுவதை ஆரம்பித்துள்ளார்கள்.
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் அனுர அரசுக்கு ஆதரவான செயற்பாடுகளும், ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க சட்டவிரோத தையிட்டி திஸ்ஸ விகாராதிபதியிடம் ஆசிபெற்றமையும்
ஆக்கிரமிப்பாளர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.
இனப் படுகொலையின் பங்காளியும் தற்போதய ஜனாதிபதியுமான அனுர குமார திசாநாயக்கா கடந்த முதலாம் திகதி மயிலிட்டிக்கு அடிக்கல் நாட்ட வந்தார்.
மயிலிட்டித் துறைமுத்தில் மீதி ஆக்கிரமிப்பை இலக்காகக் கொண்டு அபிவிருத்தி எனும் போர்வையில் அடிக்கல் நாட்ட வந்த பாட்டாளியின் பிள்ளை அனுரவை நோக்கி , தையிட்டிக் காணி உரிமையாளர்கள் தமது காணிகள் விடுவிக்கப்பட வேண்டுமென வலியுறுத்தி மயிலிட்டி மீன்பிடித் துறைமுகத்திற்குத் திரும்பும் சந்திக்கு அருகில் அமைதி வழியில் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.
அப்போராட்டக்காரர்களை ஏழைகளின் நண்பன், பாட்டாளிகளின் பிள்ளை என்று கூறிக்கொள்ளும்
ஜனாதிபதி அனுரவின் கீழுள்ள பொலிசார் அடித்து விரட்டினார்கள்.
அச்சம்பவத்தை பார்த்து அந்தப் பொலிசாருக்கு பல்லிளித்தவாறு அதே வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தவிசாளர் சுகிர்தன், அனுரவுக்கு வரவேற்பளிக்கச் சென்றிருந்தார்.
இவருடன் தேசிய மக்கள் சக்தி யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களும் சென்று பல்லிளித்துக் கொண்டிருந்தார்கள்.
அதன் தொடர்ச்சியாக அன்றய தினம் மண்டைதீவில் இடம்பெற்ற சர்வதேச மைதானத்திற்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வுக்கு,சட்டவிரோத காணி அபகரிப்பில் ஈடுபட்டுள்ள குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள விகாராதிபதியை அழைத்து பாட்டாளிகளின் பிள்ளையான ஜனாதிபதி அனுரகுமார அவரிடம் ஆசிபெற்றார்.
இச்செயற்பாடுகள் தையிட்டியில் மக்கள் காணிகளில் சட்டவிரோத விகாரை அமைத்த ஆக்கிரமிப்பாளர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.மக்களே சிந்தியுங்கள். இந்தத் துரோகங்களுக்கு எதிராக நாம் போராடுவதே விடுதலைக்கான ஒரே வழியாகும் என்றார்.
![]()