முச்சந்தி

மண்டைதீவில் இரண்டு மனிதப் புதைகுழிகள் உள்ளன

மண்டைதீவு சர்வதேச கிரிக்கெட் மைதானத்திற்கு அடிக்கல் நாட்ட நாளை (01) வரும் ஜனாதிபதி மண்டைதீவு மனிதப்புதைகுழி தொடர்பிலும் கரிசனை செலுத்த வேண்டும் என வேலணை பிரதேச சபை உறுப்பினர் சுவாமிநாதன் பிரகலாதன் கோரிக்கை விடுத்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே இதனை தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

மண்டைதீவில் சர்வதேச கிரிக்கெட் மைதானத்திற்கு அடிக்கல் நாட்டுவதற்காக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வருகிறார். அந்த இடத்தில் இருந்து ஒரு கிலோமீட்டர் தூரத்துக்குள் தான் மண்டைதீவு மனிதப் புதைகுழிகள் காணப்படுகிறது.

மண்டைதீவில் இரண்டு மனிதப் புதைகுழிகள் உள்ளன. அவை அகழப்படப்பட்டு நீதியான விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என இந்த மாதம் 20 ஆம் திகதி வேலணை பிரதேச சபை அமர்வில் இது தொடர்பில் பிரேரணை ஒன்றை முன்வைத்திருந்தேன். அது தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.

கடந்த 26 ஆம் திகதி மண்டைதீவு மனித புதைகுழியின் 36 ஆம் ஆண்டு நினைவு தினத்தை புதைகுழி உள்ள இடத்தில் நினைவுகூர்ந்து இருந்தோம். எனவே நமது தீர்மானத்தின் படி புதைகுழி அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

மண்டைதீவுக்கு வரும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, மண்டைதீவு மனிதப்புதைகுழிகள் தொடர்பிலும் கரிசனை செலுத்த வேண்டும்.

ஜனாதிபதி செம்மணி மனித புதைகுழிக்கு விஜயம் செய்வார் என கடற்றொழில் அமைச்சர் சொல்லியிருக்கிறார். ஆகவே மண்டைதீவுக்கு வருகின்ற ஜனாதிபதி மண்டைதீவு மனிதப் புதைகுழியை பார்வையிட வேண்டும் என எதிர்பார்க்கிறோம்.

மண்டைதீவு மனிதப் புதைகுழி அகழ்வு பணிகளை விரைவில் ஆரம்பிக்கவும் நிதி ஒதுக்கீடுகளை செய்யவும் நீதியான விசாரணைகளை முன்னெடுக்கவும் ஜனாதிபதி ஒத்துழைக்க வேண்டும் என தெரிவித்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *