இரட்டைக்கிளவியும் இரட்டிப்பு மகிழ்ச்சியும்: தொடர் – 18 …. சங்கர சுப்பிரமணியன்


அதனால்தானோ என்னவோ மாதா பிதா குரு தெய்வம் முதலிலேயே வைத்துப் போற்றப்படுகிறார்களோ? நடைமுறையில் இருப்பதுதானே பழக்கத்தில் வரும். எல்லாவற்றிற்கும் அல்லது எல்லோருக்கும் மேலாக கடவுள்தான் முதன்மையானவர் என்றால் தெய்வம் குரு பிதா மாதா என்றல்லவா இருந்திருக்கவேண்டும்.
இந்த வாக்கியத்தைக் கேட்டிருப்போம். ஏதோ ஒருவர் எப்போதோ எங்கேயோ சொல்லிச் சென்றதாக எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது. ஏனென்றால் ஔவை பிராட்டியும் கூட அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் என்றல்லவா கூறியிருக்கிறார். அதிலும் அவர்சொன்னதை சப்பைக்கட்டு கட்டுவதற்கு வழி எதுவும் கொடுக்கவில்லை.
ஏனென்றால் ஔவை அந்த கோணத்தில் சொல்லவில்லை இந்த கோணத்தில் சொல்லவில்லை என்று வாதாட ஆயிரம்பேர் ஓடிவருவார்கள். ஆனால் ஔவையாரோ அம்மாவையும் அப்பாவையும் முதலில் அறியக்கூடிய தெய்வமாக அடித்துக் கூறியிருக்கிறார். ஆனால் ஔவையார் பிதா என்று ஏன்சொன்னார் என்றுதான் தெரியவில்லை.
இலக்கணத்துக்காகவோ அல்லது இசைக்காகவோ பிதா என்ற சொல்லை
ஔவை பயன்படுத்தி இருப்பாரோ? அகர வரிசையில் ஔவையார் கொன்றை வேந்தனை இயற்றியிருந்தாலும் அன்னையும் தந்தையும் என்றோ அன்னையும் அப்பனும் என்றோ சொல்லியிருக்கலாம் அல்லவா? என்று நான் நினைப்பதுண்டு.
ஆனால் அந்த நாட்களிலேயே மொழிக் கலப்பு ஆரம்பமாகி விட்டது என்பதுதான் உண்மை. இல்லாவிட்டால் சுட்டபழம் வேண்டுமா? சுடாதபழம் வேண்டுமா என்று கேட்ட முருகனிடமே தமிழை அறிந்த ஔவை மொழிக்கலப்பை செய்திருப்பாரா?
எனவே முருகன் வாழ்ந்த காலத்திலேயே மொழிக்கலப்பு ஏற்பட்டுவிட்டது. ஆனால் இன்று நாம் ஏதோ நேற்றுதான் மொழிக்கலப்பு நடந்தது போல் குதிக்கிறோம்.
இந்த மொழிக்கலப்பு என்பது நம் மொழியில் தான் நடந்துள்ளது என்று நாம் எண்ணவேண்டாம். செம்மொழி என்று அறியப்படும் சீனமொழியிலும் கூட கலப்பு ஏற்பட்டுள்ளது. இதை நான் சும்மா சொல்லவில்லை. எப்படி என்று இப்போது உங்களுக்கு விபரமாகச் சொல்கிறேன்.
கடந்த ஆண்டில் பைன்ஸ்டேல் என்ற விக்டோரிய மாநிலத்திலுள்ள நகரத்துக்கு சென்றிருந்தேன். விக்ரோட் ஓட்டுநர் தேர்வுக்கு மொழிபெயர்ப்பாளராக சென்றிருந்தேன். பணியை முடித்துவிட்டு வீலைனில் வீடு திரும்பிக் கொண்டிருந்தேன். தொடர்வண்டியில் இரண்டு வரிசை இருக்கைகளில் பக்கத்து வரிசையில் எனக்கு எதிராக இரண்டு சீன மாணவர்களும் பயணித்தனர்.
அவர்கள் பேசுவது நன்றாக என்செவிகளில் விழுந்தன. அவர்கள் பேசுவதின் பொருள் புரியவில்லை என்றாலும் அவர்கள் பேசும்போது பல ஆங்கில வார்த்தைகள் வந்து விழுந்ததை நன்றாக கேட்டேன். இது ஆங்கிலக் கலப்பு இல்லையா? இந்த கலப்பை அவர்கள் நாட்டில் மாண்ட்ரிங்லிஷ்
என்ற சொல்வார்களோ?
இப்போது மாடசாமி அண்ணாச்சி சந்தடிச் சாக்கில் சமஸ்கிருத மொழியில் மொழிக்கலப்பு இல்லையே என்கிறார். இதை நான் சற்றும் எதிர் பார்க்கவில்லை. இருந்தாலும் சமாளித்து விட்டேன். அவரிடம் பதில் சொன்னேன். நீங்கள் சொல்வது முற்றிலும் பிழை. சமஸ்கிருதத்திலும் மொழிக்கலப்பு உள்ளது. சில மொழிகளின் கலப்பே சமஸ்கிருதம். ஆனால் அதை எங்கும் பெருமளவில் மக்கள் பேசி பார்க்கவில்லையே என்றேன்.
காய்த்த மரத்தில்தானே கல்லடி படும். பேச்சு வழக்கிலும் எழுத்து வழக்கிலும் திரைப்படம், தொலைக்காட்சி, வானொலி என்றோ அல்லது தினசரி, வார இதழ், மாத இதழ் என்றோ இருந்தால்தானே கலப்படம் ஆவதற்கு? அம்மொழியை கடவுள் பூசாரியிடமும் பூசாரி கடவுளிடம் பேசுவதற்கும் மற்றும் கல்யாணம் கருமாதி போன்றவற்றில் தான் பயன்படுகிறது.
அப்படியிருக்க அதில்போய் யார் கலப்படம் செய்யப்போகிறார்கள். கடவுளர் சிவன் மற்றும் முருகன் முறையே நக்கீரனிடமும் ஔவையிடமும் தமிழ் பேசியிருப்பதாக படித்திருக்கிறோம். திரைப்படங்களில் பார்த்திருக்கிறோம். கடவுள் கிருஷ்ணன் கௌரவர்கள் மற்றும் பாண்டவர்களுடன் சமஸ்கிருதத்தில்தான் கதைத்திருப்பாரோ?
நான் பெங்களூரில் வாழ்ந்திருப்பதால் எனக்கு கன்னடம் தெரியும். கன்னடத்தில் கலப்படம் உள்ளது. விரைவாகப் போகவேண்டும் இல்லாவிட்டால் தவறவிட்டு விடுவோம் என்பதை “பேகனே ஓகுபேகு இல்லாந்ர மிஸ் மாடு பிடுத்துவி” என்பார்கள்.
இது மாதிரி ஆங்கிலத்தில் பேசும்போது தவறு என்பதற்கு ஆங்கிலத்தில் மிஸ் என்பதற்கு பதில் வேறு மொழி வார்த்தையின் கலப்படம் உள்ளதா? அதைத் தவிர இல்லாவிடில் என்பதற்கு தமிழும் கலந்துள்ளதா? இன்னும் சந்தேகமா? மெல்பனில் இந்தியர்களில் இந்தி பேசம் மக்கள் அதிகம். அவர்களோடு நான் தொடர்வண்டியில் பயணிக்கும்போது
அவர்கள் பேச்சில் நிறைய ஆங்கில சொற்கள் பயன்படுத்துவதை கண்டுள்ளேன்.
இப்படி ஆங்கில மொழியோடு தொடர்பு கொண்ட ஒவ்வொரு இனமக்கள் பேசும் மொழியிலும் கண்டிப்பாக ஆங்கிலத்தின் தாக்கம் இருக்கவே செய்யும். ஒரு சிறிய தீவில் இருந்துகொண்டே நிலத்தைதேடி உலகெங்கும் பயணித்து அமெரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து என்று நாட்டைக் கண்டுபிடித்து குடியேறி உள்ளார்கள. அத்தகைய திறமைசாலிகளின் மொழி பரவாமல் போகுமா?
தனக்கு வந்தால் ரத்தம் மற்றவர்களுக்கு வந்தால் தக்காளிச் சட்டினாயா என்பதுபோல் நம்ம மொழியில் மற்றவர் மொழி கலந்தால் அது கலப்பு மற்றவர் மொழியில் நம்மொழி கலந்தால் சிறப்பா? ஆங்கிலத்தில் எண்ணற்ற தமிற்சொற்கள் கலந்துள்ளன. ஆனால் அவர்கள் தமிங்கிலிஷ் என்று சொல்கிறார்களா? இங்கு நாங்கள் சுத்தத் தமிழில் பேசுகிறோம் என்பவர்கள்கூட ஆங்கிலம் கலந்து பேசுவதை அவதானிக்க முடியும்.
ஆங்கிலத்தில் மாங்கா, கட்டுமரம், கட்டில், கல்வெட்டு, காசு, அய்யோ, சுருட்டு, சனல், கஞ்சி, கயிறு, கூலி, கறி, இஞ்சிவேர், சக்கைபழம், சர்க்கரை, மிளகுத்தண்ணீர், பறையர், பச்சையிலை. தேக்கு, அரிசி்போன்ற எண்ணற்ற சொற்கள் ஆங்கில சொற்களாகவே பச்சோந்திபோல மாறி கலந்திருக்கின்றன. இந்தியாவை ஆங்கிலேயர்கள் ஆட்சி செய்யும்போது குறைவான ஆங்கிலேர்களே இந்தியாவில் இருந்தனர்.
அப்படியிருந்தும் தமிற்சொற்கள் ஆங்கிலத்தில் ஊடுருவி விட்டன. இது இயல்பாக நடப்பது. இதைத் தவிர்க்கவும்
இயலாது. அதற்காக தமிழில் ஆங்கிலம் கலப்பதையோ வேறு மொழிகள் கலந்து விட்டதையோ நான் சரி என்று சொல்வதாக தப்பாக என்னை எண்ணிவிடாதீர்கள்.
அப்படி கலக்காமல் இருக்க வேண்டுமெனில் நாம் எங்கும் செல்லக்கூடாது. வேறு எவரும் நம் நாட்டில் நுழையவும் கூடாது. பேச்சில் இவ்வளவு கவனம் செலுத்தும் நம் பண்பாட்டில் கவனம் செலுத்துகிறோமா? கொளுத்தும் வெயிலில் கோட்டு சூட்டு.
தம்பி புடுங்குற புடுங்குக்க தயிறும் சோறும், கடிச்சிக்க ஒரு மயிரு. இது கொச்சையான பழமொழி அல்ல. புடுங்குதல் என்றால் பறித்தல் என்ற பொருள். மயிர் இழக்கும் கவரிமான் என்ற இலக்கிய நயம் கொண்ட சொல் மயிர். இந்த பழமொழியையே கொச்சையாக நினைக்கும்படி மக்களின் மனம் மாறுகிறது.
(தொடரும்…)
![]()