உலகம்

ரஷ்யாவை அடுத்தடுத்து தாக்கிய நிலநடுக்கங்கள்; விடுக்கப்பட்ட சுனாமி எச்சரிக்கை – அதிர்ச்சியில் மக்கள்!

ரஷ்யாவில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கத்தால் ரஷ்யாவின் சில பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

ரஷ்யாவின் கம்சட்கா தீபகற்பத்தின் கிழக்கு கடற்கரையில் இன்று தீடீரென 7.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. அதனைத்தொடர்ந்து அடுத்தடுத்து இரு நிலநடுக்கங்கள் ஏற்பட மொத்தமாக ரஷ்யாவில் மூன்று நிலநடுக்கங்கள் பதிவாகின.

கம்சட்கா மண்டலத்தின் தலைநகரான பெட்ரோபாவ்லோவ்ஸ்க்-கம்சாட்ஸ்கிக்கு கிழக்கே சுமார் 140 கிமீ தொலைவில் 6.7 மற்றும் 5 ரிக்டர் அளவிலான தொடர்ச்சியான நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. இந்த நிலநடுக்கங்கள் பெட்ரோபாவ்லோவ்ஸ்க்-கம்சாட்ஸ்கி கடற்கரையில் அடுத்தடுத்து 32 நிமிடங்களுக்குள் தாக்கின. இதன் பின்னர் 7.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் 20 கிமீ ஆழத்தில் ஏற்பட்டது.

கம்சட்கா மண்டலத்தின் தலைநகரான பெட்ரோபாவ்லோவ்ஸ்க் பகுதியில் சுமார் 180,000 க்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர். திடீரென அங்கு ஏற்பட்ட நிலநடுக்கங்களால் அங்குள்ள கட்டடங்கள் அதிர்ந்து போயுள்ளன. அத்துடன் பொருள்களும் ஆங்காங்கு சிதறின.

இதனால் மக்கள் பாதுகாப்புக் கருதி சாலையை நோக்கி ஓடினர். இந்த நிலநடுக்கம் அயல் நாடுகளிலும் உணரப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

அடுத்தடுத்து ஏற்பட்ட 3 நிலநடுக்கங்களை அடுத்தே ரஷ்யாவின் சில பகுதிகளுக்கு அமெரிக்க தேசிய சுனாமி எச்சரிக்கை மையம் சுனாமி எச்சரிக்கையை விடுத்தது.

அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களால் உறைந்து போன ரஷ்ய மக்களுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதேவேளை குறித்த பகுதியில் கடந்த 1900 ஆம் ஆண்டு முதல் 8.3 ரிக்டருக்கு மேற்பட்ட ஏழு பெரிய நிலநடுக்கங்கள் தாக்கியுள்ளன. நவம்பர் 4, 1952 அன்று, கம்சட்காவில் 9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *