கொலை!,கொலை!!,கொலை!!! தினமும் எத்தனை கொலைகள்; சஜித் கடும் குற்றச்சாட்டு

கல்கிஸ்சை கடற்கரையில் (புதன்)இரவு சடலமொன்று கரையொதுங்கியுள்ளது. இன்று(நேற்று) கந்தானைப் பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் உயிரொன்று பலியாகியுள்ளது. நாட்டில் சிறிது காலமாகவே தொடர்ச்சியாக கொலைகள் நடந்து வருகின்றன. இது குறித்து அரசாங்கத்திடம் கேள்வி எழுப்பி, அறிவுறுத்தல் விடுத்தும், இந்த விடயத்தில் அரசாங்கத்திடம் எந்த பதிலும் இல்லை. நாட்டில் சட்டம் ஒழுங்கு மற்றும் குற்றங்களை குறைப்பது எதிர்ப்பது குறித்து அரசாங்கத்திற்கு எந்த யோசனையும் இல்லை. சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதற்கும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் எந்த வேலைத்திட்டமோ அல்லது தொலைநோக்குப் பார்வையோ இல்லாததொரு அரசாங்கமே இன்று நாட்டில் காணப்படுகின்றது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
கொலைகள் தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றன. பாதாள உலகக் கும்பல்கள், போதைப்பொருள் கடத்தல் கும்பல்கள், பல்வேறு அடக்குமுறை கும்பல்கள், அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரிகள் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்டுவரும் கும்பல்கள் இந்நாட்டில் தொடர்ந்து கொலைகளைச் செய்து வருகின்றன. இந்த குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன. சமூகத்தில் வாழும் உரிமை இல்லாது போயுள்ளது. வாழ்வதற்கான உரிமையை உறுதி செய்ய அரசாங்கம் தவறிவிட்டது என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார்.
இலங்கை ராமஞ்ஞ மஹா பீடத்தினால் இரு வருடங்களுக்கு ஓரு முறை நடத்தப்படும் உபசம்பதா புண்ணிய நிகழ்வு நேற்று வியாழக்கிழமை அநுராதபுரம் கலாவெவ பிரதேசத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பங்கேற்றதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
தேசிய பாதுகாப்பு குறித்து டியூசன் எடுப்போம் என வீராப்பு பேசிய அமைச்சர்களால், தற்போது இயலாமைக்கு மத்தியில் இருந்து வரும் அரசாங்கத்தால், நாட்டின் தேசிய பாதுகாப்பை உறுதி செய்ய முடியாதுபோயுள்ளது. அரசாங்கம் மெத்தனப் போக்குக் கொள்கையைக் கடைப்பிடித்து வருகிறது. இந்தப் படுகொலைகளும் துப்பாக்கிச் சூடுகளும் நிகழ்ந்து வரும் சந்தர்ப்பத்தில், இச்சம்பங்கள் தேசியப் பாதுகாப்பைப் பாதிக்காது என்று அரசாங்கம் தொடர்ந்து கூறி வருகிறது. வீடுகளிலும், வீதிகளிலும், வேலைத்தளங்களிலும், நீதிமன்றத்திலும் கூட துப்பாக்கிச் சூடு நடக்கும் நிலைக்கு நாடு வந்துள்ளது. இதைத் தடுக்க அரசாங்கத்திடம் எந்தத் திட்டமும் இல்லாமையினால் காட்டுச் சட்டமே கோலோச்சி காணப்படுகின்றது. சட்டத்தின் ஆட்சி இல்லாது போய், கொலை செய்யும் கலாச்சாரம் பரவி காணப்படுகின்றது.
இன்று நாட்டு மக்கள் அச்சத்திலும் சந்தேகத்திலும் வாழ்ந்து வருகின்றனர். மிகுந்த அதிர்ச்சிக்கு மத்தியில் இருந்து வருகின்றனர். இந்தப் பிரச்சினைகள் குறித்து அரசாங்கத்தால் எந்தத் தெளிவான நடவடிக்கைகளையும் எடுக்க முடியாதுபோயுள்ளது. ஜனாதிபதி தலைமையிலான இந்த அரசாங்கம் பலவீனமான அரசாங்கமாக காணப்படுகின்றது. தாம் வழங்கிய வாக்குறுதிகளைக் கூட மீறிய இந்த அரசாங்கத்தால் சட்டம் ஒழுங்கைக் கூட சரியாக பாதுகாக்க முடியாதுபோயுள்ளது. எனவே, தூங்கிக் கொண்டிருக்காமல் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட நடவடிக்கை எடுக்கமாறும் கோரிக்கை விடுத்தார்.
![]()