இலங்கை

எந்தத் தரப்புடனும் தமிழரசுக் கட்சி கூட்டாட்சிக்கு இணங்கவில்லை என்கிறார் சுமந்திரன்

“நாங்கள் ஆட்சியமைப்பது தொடர்பில் ஏனைய தமிழ்க் கட்சிகளிடம் ஆதரவுக் கோரிக்கையை எந்தவித ஒளிவு மறைவும் இல்லாமல் நேரடியாக மேற்கொண்டிருக்கின்றோம். மாறாக ஜனநாயகத் தமிழ்த் தேசிய கூட்டணி மற்றும் அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் இணைந்து புதிதாக உருவாக்கப்பட்ட கூட்டு சார்பில் தர்மலிங்கம் சித்தார்த்தன், டக்ளஸ் தேவானந்தாவை இரகசியமாகச் சந்திப்பதற்கு நேரம் ஒதுக்கிவிட்டு, அந்தச் சந்திப்பு பற்றி மக்களுக்குத் தெரியவந்தவுடனே அது பிற்போடப்பட்டது எனக் கூறி, ஒளித்து திரிவதைப்போல் நாங்கள் செயற்படவில்லை. நாங்கள் ஒளிவு மறைவு இல்லாமல் கட்சியின் தீர்மானத்தின் படி சகல கட்சிகளுடனும் பேசியிருக்கின்றோம்.”- இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

கொழும்பில் அவரது இல்லத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள் முடிவடைந்த கையோடு எங்களுடைய கட்சியின் அரசியல் குழு வவுனியாவில் கூடி ஆராய்ந்து ஒரு தீர்மானத்தை எடுத்திருந்தோம். அதாவது எந்தெந்தச் சபைகளில் அதிகூடிய ஆசனங்கள் இருக்கின்றதோ அந்தக் கட்சிக்கு ஆட்சியமைக்க ஏனைய கட்சிகள் ஆதரவளிக்க வேண்டும் எனவும், இது தொடர்பில் ஏனைய தமிழ்க் கட்சிகளுடன் பேசுவது என்பதைப் பகிரங்கமாகவே கூறியிருந்தோம்.

வன்னியிலும் கிழக்கிலும் நாங்கள் முஸ்லிம் கட்சிகளுடனும் பேச வேண்டி இருந்தது. அதனால் ‘தமிழ் தேசியக் கட்சிகள்’ என்று வரையறுக்காமல் ‘தமிழ்க் கட்சிகள்’ என எல்லா தரப்பையும் அணுகுவது என்று தீர்மானித்தோம்.

அந்தக் கூட்டத்தில் பங்கு பற்றிய சிறிதரனும் அது பற்றி பேசினார். தம்முடன் ஹக்கீம் பேசி இருக்கின்றார் என்றும், ஆகையினால் முஸ்லிம் கட்சிகளுடனும் நாங்கள் இது பற்றி பேச வேண்டும் என்றும் அவர் கூறியமையைக் கட்சி ஏற்றுக் கொண்டது. அதன்படியே தமிழ் கட்சிகள் எல்லாவற்றுடனும் பேசுகிறோம்.

எவருடனும் கூட்டணியை அமைக்கப்போவதாக நாங்கள் கூறவில்லை. எனினும் விசேடமாக திருகோணமலையில் முஸ்லிம் காங்கிரஸோடு ஒப்பந்தம் ஒன்றை பகிரங்கமாக செய்திருக்கின்றோம். மேலும் வவுனியாவில் பல கட்சிகளோடு ஏற்பட்ட இணக்கப்பாட்டை ஊடக சந்திப்புக்கள் ஊடாக பகிரங்கமாகவே சொல்லியிருக்கின்றோம். அது வெறுமனே உள்ளூராட்சி மன்றங்களில் நிர்வாகங்களை எப்படி பகிர்ந்துகொள்வது என்பதற்கான ஒப்பந்தமும் கலந்துரையாடலும் மட்டுமே ஆகும்.

யாழ்ப்பாணத்தில் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி எங்களோடு சந்திப்பை மேற்கொள்ள விரும்பினார்கள். நான் சித்தார்த்தனின் இல்லத்துக்குச் சென்று சந்தித்தேன். அதன் பின்னர் எனது இல்லத்திலும் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியினர் வருகை தந்து சந்திப்புகளில் ஈடுபட்டார்கள். இதன்போது எங்களுக்கு அதிகூடிய ஆசனங்கள் உள்ள சபைகளில் எங்களுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தோம். அதற்கு அவர்கள் இணங்கினார்கள். அவர்கள் எங்களிடம் ஒரு சில சபைகளில் தாங்கள் ஆட்சியமைப்பது தொடர்பிலும் பேசினார்கள்.

அதன்பின் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் செயலாளர் செல்வராசா கஜேந்திரனுடனும் சந்தித்து கலந்துரையாடியிருந்தோம். அதன்போது கொள்கை உடன்பாடு குறித்து எதுவும் பேசவில்லை. உள்ளூராட்சி சபைகளில் எந்தவொரு முரண்பாடுகளும் இல்லாமல் ஆட்சியமைப்பது தொடர்பில் பேசினோம். அவர்களும் அதற்கு இணங்கினார்கள்.

எங்கள் சந்திப்புக்கு முன்னரே கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சபைகளில் முதன்மை பெற்ற தமிழ்க் கட்சிக்கு ஆதரவு என்ற நிலைப்பாட்டை ஊடக சந்திப்பில் தெளிவுபடுத்தியிருந்தார்.

இந்நிலையில் நேற்றைய தினம் தமிழரசுக் கட்சியின் தலைவர் சி.வி.கே.சிவஞானத்துக்கும் டக்ளஸ் தேவானந்தாவுக்கும் இடையில் சந்திப்பு சிறீதர் திரையரங்கில் இடம்பெற்றது. எங்கள் அரசியல் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவான, எந்தெந்த சபைகளில் தமிழ்க் கட்சிகள் அதிகூடிய ஆசனங்களை பெற்றிருக்கின்றனவோ அந்த கட்சிக்கு சபைகளில் ஆட்சியமைக்க ஈ.பி.டி.பி. ஆதரவளிக்க வேண்டும். எந்தெந்தச் சபைகளில் தமிழரசுக் கட்சிக்கு அதிகூடிய ஆசனங்கள் உள்ளதோ அங்கே தமிழரசுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்பதையே அவர் சந்திப்பில் வெளிப்படுத்தினார்.

சகல தமிழ்க் கட்சிகளுடனும் நாங்கள் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டது கூட்டணிகளை அமைப்பதற்காக அல்ல. சபைகளில் அதிகூடிய ஆசனங்களைப் பெற்ற தமிழ்க் கட்சி ஏனைய கட்சிகள் ஆதரவளிப்பது என்ற கோட்பாட்டை அழுல்படுத்தவே ஆகும்.

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைமைக் காரியாலயம் அமைந்துள்ள சிறீதர் திரையரங்கிற்கு சென்று பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டமை தொடர்பில் பலர் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றார்கள். அது குறித்தும் சிவஞானத்திடமும் வினவியிருந்தேன். “நாங்கள் பெரிய கட்சி என்று பாரபட்சம் பார்க்காது, நாங்களாக சந்திக்கச் செல்கின்றபோது அவருடைய இடத்துக்குச் சென்று சந்திப்பதே முறையானது” என்று அவர் தெரிவித்தார். கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துக்கும் எங்களுக்கும் இடையிலான சந்திப்பும் ஆரம்பத்தில் கஜேந்திரகுமாரின் இல்லத்திலேயே ஏற்பாடு செய்யப்பட்டது. பின்னரே சந்திப்பு இடம் மாற்றப்பட்டது.

பலருக்கு சிறீதர் திரையரங்கு தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் இருக்கலாம். அதனை நாம் ஏற்றுக்கொள்கின்றோம். எங்கள் தலைவர் பொது இடத்திலோ அல்லது தன்னுடைய இல்லத்துக்கு அழைத்தோ டக்ளஸ் தேவானந்தாவைச் சந்தித்து இருக்கலாம். ஆனால், இங்கு பிரதான விடயம் சந்திப்பு எங்கு நடைபெற்றது என்பதல்ல. நாங்கள் அதிகூடிய ஆசனங்களை பெற்ற சபைகளில் ஏனைய தமிழ்க் கட்சிகள் ஆதரவளிக்க வேண்டும் என்ற கோரிக்கையே முக்கியமானது.

நாங்கள் ஆட்சியமைப்பது தொடர்பில் ஏனைய தமிழ்க் கட்சிகளிடம் ஆதரவுக் கோரிக்கையை எந்தவித ஒளிவு மறைவு இல்லாமல் நேரடியாக முன்வைத்திருக்கின்றோம் . மாறாக ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி மற்றும் அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் இணைந்து புதிதாக உருவாக்கப்பட்ட கூட்டு சார்பில் தர்மலிங்கம் சித்தார்த்தன் டக்ளஸ் தேவானந்தாவை இரகசியமாக சந்திப்பதற்கு நேரம் ஒதுக்கிவிட்டு அந்த சந்திப்பு மக்களுக்கு தெரியவந்தவுடனே கூட்டம் காலவரையின்றி பிற்போடப்பட்டது எனக் கூறி ஒளித்துத் திரிவதைப்போல் நாங்கள் செயற்படவில்லை. நாங்கள் ஒளிவு மறைவு இல்லாமல் கட்சியின் தீர்மானத்தின் படி சகல கட்சிகளுடனும் பேசியிருக்கின்றோம்.” – என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button