உலகம்

இந்தோனேசியா கல் குவாரியில் பாறைகள் சரிந்து 8 பேர் பலி – தேடுதல் பணி தீவிரம்

இந்தோனேசியாவின் ஜாவா தீவுகளில் செயல்பட்டு வந்த சுண்ணாம்பு கல் குவாரியில் பாறைகள் சரிந்ததில் 8 பேர் பலியாகியுள்ளனர்.

மேற்கு ஜாவா மாகாணத்தின் சிரேபன் நகரத்தில் செயல்பட்டு வந்த சுண்ணாம்பு கல் குவாரியில், (மே 30) காலை 9.30 மணியளவில் பாறைகள் சரிந்துள்ளன.

அப்போது, அங்கு பணியாற்றிய தொழிலாளர்கள் மற்றும் ஏராளமான இயந்திரங்கள் பாறைகளுக்குள் புதைந்தன. இந்தச் சமபவத்தில் 8 தொழிலாளர்கள் பலியான நிலையில் ஏராளமானோர் படுகாயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அந்தச் சுரங்கம் சட்டப்படி உரிய அனுமதிகள் பெற்று இயங்கி வந்தாலும், அங்குப் போதுமான பாதுகாப்பு வசதிகள் இல்லையென மேற்கு ஜாவா ஆளுநர் டெடி முல்யாடி கூறியுள்ளார்.

இதுகுறித்து, உள்ளூர் காவல் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், பாறைச்சரிவுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும்; இதுவரை 8 பேர் பலியாகியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், படுகாயமடைந்துள்ள 12 பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

நிகழாண்டு (2025) துவங்கியதிலிருந்து அந்தச் சுரங்கம் 2வது முறையாக சரிந்துள்ளதாகக் கூறப்படுகிறது. கடந்த பிப்ரவரி மாதம் இந்தச் சுரங்கத்தின் சில பகுதிகள் சரிந்தன. இருப்பினும், அப்போது எந்தவொரு உயிர் சேதமும் ஏற்படவில்லை என்பது உறுதியானது.

இதனைத் தொடர்ந்து, அந்தச் சுரங்கம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள குழிகள் அனைத்தும் நிரந்தரமாக மூடப்படுவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, கடந்த 2024-ம் ஆண்டு சுலாவெசி தீவில் திடிரென ஏற்பட்ட நிலச்சரிவில் அங்கு சட்டவிரோதமாகச் செயல்பட்டு வந்த தங்கச் சுரங்கம் மண்ணுக்குள் புதைந்தது. இதில், 23 பேர் பலியானதுடன், 35 பேர் மாயமானது குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *