தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கி – வௌியான மேலதிக தகவல்கள்

தங்க முலாம் பூசப்பட்ட T56 ரக துப்பாக்கி கண்டுபிடிக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையதாக தெரிவிக்கப்பட்டு கைது செய்யப்பட்ட இரண்டு பெண்களையும் எதிர்வரும் 23 ஆம் திகதி வரை வௌ்ளவத்தை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுக்குமாறு நீதிமன்றம் (21) உத்தரவிட்டது.
சந்தேக நபர்கள் இருவரும் கல்கிஸ்ஸ நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது, கல்கிஸ்ஸ நீதவான் ஏ.டி. சதுரிகா சில்வா இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.
ஹெவ்லொக் சிட்டி வீடமைப்பு தொகுதியில் (20) பிற்பகல் பெண்ணொருவருன் பயணப் பொதியில் இருந்து தங்க முலாம் பூசப்பட்ட T56 ரக துப்பாக்கி கண்டுபிடிக்கப்பட்டது.
ஒரு வயதான பெண் T56 துப்பாக்கியுடன் வீடமைப்பு தொகுதி நோக்கி செல்வதாக, ஹெவ்லொக் சிட்டி வீடமைப்பு தொகுதியில் இருந்த பாதுகாப்பு அதிகாரிகள், பொலிஸ் அவசர எண்ணான 119இற்கு அழைத்து தெரிவித்தனர்.
அதன்படி, வெள்ளவத்தை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி உள்ளிட்ட பொலிஸ் அதிகாரிகள் குழு சம்பவ இடத்திற்குச் சென்று சோதனை செய்தபோது, தங்க முலாம் பூசப்பட்ட T56 ரக துப்பாக்கி கண்டுபிடிக்கப்பட்டது.
இரண்டு பெண்களிடமும் துப்பாக்கி பற்றி கேட்டபோது, அது காரின் பின்புறத்தில் இருப்பதாகவும், அது ஒரு பொம்மை துப்பாக்கி என்று நினைத்து அதைக் கொண்டு வந்ததாகவும் அவர்கள் கூறியதாக பாதுகாப்பு அதிகாரி மேலும் தெரிவித்தார்.
பின்னர் பொலிஸார் வருகைதந்து துப்பாக்கியை கொண்டு வந்த 69 வயதுடைய பெண் மற்றும் அவரது மருமகளான கஜகஸ்தான் நாட்டைச் சேர்ந்த பெண்ணிடம் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.
சம்பவத்தில் சந்தேகிக்கப்படும் வயதான பெண், துப்பாக்கி தொடர்பான மேலதிக விசாரணைக்காக நேற்று பிற்பகல் வெள்ளவத்தை பொலிஸாருக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
அதன்படி, சந்தேகநபர் காரில் பயணித்த பகுதிகளைச் சுற்றியுள்ள சிசிடிவி காட்சிகளைப் பயன்படுத்தி விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளன.
ஹெவ்லொக் சிட்டி வீடமைப்புத் தொகுதியில் உள்ள தங்களது வீட்டிலிருந்து இரண்டு பெண்களும் பயணப் பொதியையும் T56 ரக துப்பாக்கியையும் வெளியே எடுத்துச் செல்வதைக் காட்டும் சிசிடிவி காட்சிகள் இருப்பது தெரியவந்துள்ளது.
இதையடுத்து, பெலவத்தையில் உள்ள மருமகளின் வீட்டை பொலிஸார் சோதனை செய்து, அவரையும் துப்பாக்கி இருந்த காரையும் வெள்ளவத்தை பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தனர்.
காரின் கதவுகள் பூட்டப்படாதபோது, யாரோ ஒருவர் துப்பாக்கியை காருக்குள் வைத்திருந்ததாக இரண்டு பெண் சந்தேக நபர்களும் பொலிஸாரிடம் தெரிவித்தனர்.
இருப்பினும், T56 துப்பாக்கியை வைத்திருந்தமை மற்றும் அதற்கு உதவிய குற்றச்சாட்டின் பேரில், சம்பந்தப்பட்ட காருடன் இரண்டு சந்தேக நபர்களும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
![]()