பலதும் பத்தும்

தூத்துக்குடியை சேர்ந்த சக்தி ‘மிஸ் திருநங்கை’ ஆக தேர்வு

தூத்துக்குடியைச் சேர்ந்த சக்தி (நடுவில் இருப்பவர்) மிஸ் திருநங்கை ஆக தேர்வு செய்யப்பட்டார் 

விழுப்புரத்தில் சனிக்கிழமை (மே 11) இரவு நடைபெற்ற விழாவில் ‘மிஸ் திருநங்கை’ பட்டத்தை தூத்துக்குடியைச் சேர்ந்த சக்தி என்ற திருநங்கை பெற்றார்.

தேசிய திருநங்கைகள் கூட்டமைப்பு மற்றும் தொண்டு நிறுவனங்கள் சார்பில் ‘கூவாகம் திருவிழா – 2025’ விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள நகராட்சி திடலில்  (மே 11) இரவு நடைபெற்றது.

முன்னிஜி நாயக் தலைமை வகித்தார். முன்னாள் நகராட்சி சேர்மன் ஜனகராஜ் முன்னிலை வகித்தார். குத்துவிளக்கு ஏற்றி வைத்து ஆட்சியர் ஷேக் அப்துல் ரகுமான் தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசும்போது, “ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒவ்வொரு விழாக்கள் சிறப்பாக நடைபெறும். அதேபோன்று ஒருங்கிணைந்த விழுப்புரம் மாவட்டத்தில் கூத்தாண்டவர் கோயில் திருவிழா நடைபெற்றது. மாவட்டம் பிரிந்த பிறகும், தொடர்ந்து நடைபெறுவது விழுப்புரம் மாவட்டத்திற்கு பெருமை சேர்க்கிறது.

பிற மாவட்டங்கள், மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வருகை தந்துள்ள திருநங்கையர்களை அன்புடன் வரவேற்கிறோம். மகிழ்ச்சியுடன் நிகழ்ச்சியில் பங்கேற்று கூத்தாண்டவர் கோயிலுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்ய வாழ்த்துகள்” என்றார். பின்னர் அவர், திருநங்கைகள் சார்பில் விழுப்புரம் நகராட்சி முன்னாள் சேர்மன் ஜனகராஜுக்கு ‘மக்கள் தொண்டன்’ என்ற பட்டத்தை வழங்கி கௌரவித்தார். இதையடுத்து, திருநங்கைகளின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.

தமிழக அரசின் சிறந்த திருநங்கை விருது பெற்ற பொன்னி தலைமையிலான குழுவினர் பரதநாட்டியம் ஆடினர். விவசாயம், கால்நடை வளர்ப்பு, மருத்துவம், கல்வி, காவல், நாடகம், மருத்துவம், சுயதொழில், நடனம், ஆட்டோ ஓட்டுநர் என பல்வேறு துறைகளில் சாதனை படைத்த 22 திருநங்கைகளுக்கு பரிசு மற்றும் வெகுமதி வழங்கி ஆட்சியர் கவுரவித்தார். தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஓட்டுநராக பணிபுரியும் சுபப்பிரியா என்ற சாதனை திருநங்கை பேசும் போது, ‘விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் திருநங்கை ஒருவரை ஓட்டுநர் பணிக்கு நியமிக்க வேண்டும்’ என ஆட்சியர் ஷேக் அப்துல் ரகுமானுக்கு கோரிக்கை விடுத்தார்.

மேலும் திருநங்கைகள் பேசும்போது, ‘கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் தனி இட ஒதுக்கீடு வழங்கினால் சாதனை புரிய பல திருநங்கைகள் காத்திருக்கின்றனர். எனவே, திருநங்கைகளுக்கு தன இடஒதுக்கீடு வழங்க வேண்டும்’ என தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். தொடர்ந்து பேசிய திருநங்கைகள், ‘நடிகர் சங்கத்தில் திருநங்கைகளை உறுப்பினராக்க வேண்டும்’ என நடிகர் விஷாலிடம் கேட்டுக்கொண்டனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button