ஆப்கானிஸ்தானில் சதுரங்க விளையாட்டுக்கு தடை!

ஆப்கானிஸ்தானில் சதுரங்க விளையாட்டுக்கு தாலிபான் அரசாங்கம் தடை விதித்துள்ளது.
தாலிபான் விளையாட்டுத்துறையின் செய்தித் தொடர்பாளர் அடல் மஷ்வானி, “இந்த விளையாட்டு இஸ்லாமிய கொள்கைகளுடன் ஒத்துப்போகிறதா என்பதை மத அதிகாரிகள் பரிசீலிக்கும் வரை தடை அமலில் இருக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் சதுரங்க விளையாட்டு முக்கியமானதாக இருக்கிறது. இந்த விளையாட்டு அண்மையில் தான் பிரபலமானது . வேலைவாய்ப்பு இல்லாதது, பொருளாதார வளர்ச்சியில் ஏற்பட்டிருக்கும் சரிவு, பொழுது போக்கு மையங்கள் மற்றும் குறிப்பிட்ட சில விளையாட்டுகளையும் தடை செய்திருப்பது இளைஞர்களை சதுரங்கத்தை நோக்கி திருப்பியிருக்கிறது. இந்த விளையாட்டு வணிகமாக்கப்பட்டிருப்பதால் இந்த தடை உத்தரவு வணிக ரீதியான பாதிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2021ம் ஆண்டு ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சியை கைப்பற்றினர். அவர்கள் ஆட்சிக்கு வந்ததிலிருந்து ஏராளமான தடை உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக பெண்கள் விளையாட்டு துறையிலிருந்தே அப்புறப்படுத்தப்பட்டார்கள். இதற்கு சர்வதேச அளவிலிருந்து கண்டனங்கள் எழுந்தன. ஆனால் தாலிபான்கள் இதனை செவிமடுக்கவில்லை.
முன்னதாக சில நாட்களுக்கு முன்னர் எம்எம்ஏ எனப்படும் கலப்பு தற்காப்புக் கலையையும் தடை செய்தனர். அதீத வன்முறையை இது கொண்டிருக்கிறது என இதற்கான காரணத்தை கூறியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
![]()