இலங்கை

3 மாதத்திற்குள் பயங்கரவாத தடை சட்டம் நீக்கம் ; அரசாங்கம் தீர்மானம்

பயங்கரவாத தடை சட்டத்தை மூன்று மாதத்திற்குள் நீக்குவது குறித்து அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது. இதன் பிரகாரம் நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடை சட்டத்தை முழுமையாக நீக்கவும், அதற்கு பதிலாக புதிய சட்டம் ஒன்றை நிறைவேற்ற அரசாங்கம் தீர்மானித்துள்ளதுடன், நிகழ்நிலை பாதுகாப்பு சட்டத்தை முழுமையாக நீக்காது திருத்தங்களை கொண்டு வரவும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்று வெளிவிவகார அமைச்சு தெரிவித்தது.

இலங்கையில் நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடை சட்டம் குறித்து பல்வேறு சர்ச்சைகள் நீண்டகாலமாக உள்ளது. குறிப்பாக விடுதலை புலிகளுக்கும் அரச படைகளுக்கும் இடையிலான போர் 2009 ஆம் ஆண்டில் நிறைவடைந்த பின்னரும் இந்த பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை பயன்படுத்தி பல்வேறு கைதுகள் இடம்பெற்றது.

இதனை சர்வதேச நாடுகளும் உள்ளுர் மனித உரிமைகள் செயல்பாட்டளர்களும் கண்டித்திருந்தனர். குறிப்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை மற்றும் ஐரோப்பிய ஒன்றியும் போன்ற சர்வதேச அமைப்புகள் பயங்கரவாத தடை சட்டத்தை சுட்டிக்காட்டி கடும் விமர்சனங்களை இலங்கைக்கு எதிராக முன்வைத்திருந்தது.

இவ்வாறானதொரு எதிர்ப்பு நிலை இன்றும் தொடர்கின்ற நிலையில், ஜி.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகை போன்ற சர்வதேச ஒத்துழைப்புகளை பெறுவதற்கும் நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடுப்புச் சட்டம் மற்றும் அதன் பயன்பாடு தடையாக உள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜி.எஸ்.பி பிளஸ் கண்காணிப்புக் குழுவின் அண்மைய இலங்கை விஜயத்தின் போதும் பயங்கரவாத தடை சட்டம் குறித்து பேசப்பட்டுள்ளது. ஜி.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகையில் பயனடையும் குறைந்த அல்லது குறைந்த நடுத்தர வருமானம கொண்ட 8 நாடுகளில் இலங்கையும் ஒன்றாகும்.

மனித உரிமைகள், தொழிலாளர் உரிமைகள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, காலநிலை மாற்றம் மற்றும் நல்லாட்சி தொடர்பான 27 சர்வதேச மரபுகளை அங்கீகரித்த பொருளாதார ரீதியில் பாதிக்கப்படக கூடிய வளரும் நாடுகளிக் நலன் கருதி இந்த சலுகை வழங்கப்படுகிறது. ஜி.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகையை பெறும் நாடுகளை இரண்டு வருடங்களுக்கு ஒரமுறை மதிப்பீடு செய்து சலுகைக்கான ஒப்பந்தம் புதுப்பிக்கப்படும்.

இவ்வாறானதொரு நிலையில் மனித உரிமைகளின் பாதுகாப்புக்கு நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடை சட்டம் கடும் சவாலாக உள்ளமையினால் அதன நீக்குவதற்கான பரிந்துரையை ஐரோப்பிய ஒன்றியம் ஏற்கனவே இலங்கைக்கு முன்வைத்துள்ளது. இதேவேளை பயங்கரவாத தடை சட்டத்தை நீக்குவதாக ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் தற்போதைய அரசாங்கம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *