இலங்கை

பிள்ளையான் போன்ற நபர்கள் இப்போது தேசிய ஹீரோக்களாக உயர்த்தப்படுகிறார்கள்

எதிர்க்கட்சிகள் சுயாதீனக் குழுக்களை உருவாக்கி வெவ்வேறு சின்னங்களின் கீழ் போட்டியிட்டாலும், அவர்கள் தங்கள் நடைமுறைகள், தத்துவம் மற்றும் நடத்தையை மாற்றிக்கொள்ளாவிட்டால், இந்த நாட்டு மக்கள் அவர்களுக்கு ஒரு வாய்ப்பை வழங்க மாட்டார்கள் என்று பிரதமர் டாக்டர் ஹரிணி அமரசூரிய கூறினார்.

கலபாலுவாவ, பொதுஅராவ, அகுரேகொட மற்றும் போரலுகொட ஆகிய இடங்களில் பொதுக் கூட்டங்களில் உரையாற்றிய அவர், ஆறு மாதங்களில் மூன்றாவது முறையாக நாடு தேர்தலை எதிர்கொள்ள உள்ளது என்று குறிப்பிட்டார்.

மேலும், அரசாங்கத்தின் திட்டங்களை செயல்படுத்த தேவையான அமைப்பை நிறுவ நாங்கள் பணியாற்றும்போது, கிராமத் தலைமையை வலுப்படுத்தவும், கிராமத்திற்கு ஏற்ற கட்டமைப்பை உருவாக்கவும் இது எங்களுக்கு ஒரு வாய்ப்பு என்று அவர் கூறினார்.

2024ஆம் ஆண்டில், பாரம்பரியக் கட்சிகளால் மக்கள் ஏற்கனவே நிராகரித்த ஊழல் நிறைந்த, வீணான அரசியல் கலாச்சாரத்தைப் பாதுகாக்க முடியவில்லை. இதன் விளைவாக, பலர் இப்போது சுயாதீனக் குழுக்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். ஆனால், அதே பழைய முகங்கள்தான் என்று அவர் தெரிவித்தார்

இது பழைய மதுவை புதிய லேபிள்களுடன் புதிய போத்தல்களில் போடுவது போன்றது. இப்போது அவர்கள் புதிய பெயர்கள் மற்றும் சின்னங்களுடன் தங்களை மறுபெயரிட முயற்சிக்கிறார்கள் என்றும் கூறினார்.

எதிர்க்கட்சியின் எதிர்காலம் ஆபத்தில் இருப்பதால் அவர்கள் போராடி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அவர்களுக்கு உயிர்வாழ்வதற்கான கேள்வி எழுந்துள்ளது. அதனால்தான் அவர்கள் திசைகாட்டியைத் தோற்கடிக்க பரஸ்பர ஒப்பந்தங்களை எட்டத் துடிக்கிறார்கள்.

எதிர்க்கட்சி இன்னும் தங்கள் ஊழல் முகாமை மக்கள் நிராகரித்து விட்டார்கள் என்பதை உணரவில்லை. அதனால்தான் பிள்ளையான் போன்ற நபர்கள் இப்போது தேசிய ஹீரோக்களாக உயர்த்தப்படுகிறார்கள். எதிர்க்கட்சி இன்னும் பாடம் கற்றுக்கொள்ளவில்லை என்றால், அதற்கு 6ஆம் திகதி பாடம் கற்பிக்கப்படும்.

நமக்கு ஒரு எதிர்க்கட்சி தேவை, ஆனால், நாம் ஒன்றை உருவாக்க வேண்டுமென்றால், முதலில் அதற்கு ஒரு சரியான பாடம் கற்பிக்கப்பட வேண்டும். அப்போதுதான் அதே தோல்வியுற்ற வழிகளில் வெற்றி பெற முடியாது என்பதை அது புரிந்துகொள்ளும். இந்த நாட்டு மக்கள் தங்கள் நடைமுறைகள், தத்துவம் மற்றும் நடத்தையை மாற்றாவிட்டால் அவர்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுக்க மாட்டார்கள் என்று நாங்கள் நம்புகிறோம் என்றும் பிரதமர் கூறினார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *