செய்யும் தொழிலே தெய்வம்… முருகையா தவமணிதேவி

தமது குடும்பத்தையும், சமூகத்தையும், நாட்டையும் உழைப்பால் தலை நிமிர வைக்கும் ஒவ்வொரு வியர்வைத் துளிகளுக்கும் இனிய தொழிலாளர் தின நல்வாழ்த்துக்கள்.
தொழிலாளர் என்பவர் நாட்டின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக திகழ்கிறவர். இவர்களை போற்றி கெளரவிக்கும் முகமாக ஒவ்வொரு வருடமும் மே முதலாம் திகதி சர்வதேச தொழிலாளர் தினம் கொண்டாடப்படுகின்றது. இந்த உலகம் இயங்குகிறது ஒவ்வொரு தொழிலாளியின் உழைப்பில்தான் அதே போல் ஒவ்வொரு உயிரும் வாழக் காரணம் மனித உழைப்பாகும்.
ஆரம்பக் காலங்களில் முதலாளி வர்க்கமானது மிகவும் கடுமையான, மனிதாபிமானமற்ற முறையில் தொழிலாளர்களை நடாத்தினர். உண்மையில் தொழிலாளர்கள் மனிதர்களாக கருதப்படவில்லை. எனவே தொழிலாளர்களின் தற்போதுள்ள உரிமைகளுக்கு பின்னணியில் பல்வேறு நாட்டின் போராட்டங்களும், இரத்தக்கறைப் படிந்த வரலாறுகளும் உள்ளன. தொழிலாளர்களின் அதிக நேர பணியை அதாவது ஆரம்பக் காலங்களில வேலை செய்யும் நேரம் 12-15 மணித்தியாலங்களாகவே காணப்பட்டன. அதாவது தாம் உழைக்கும் நேரத்தை விட ஊதியம் எதுவும் இன்றி அதிகமான நேரம் ஊழியம் செய்வதற்கு தூண்டப்பட்டனர்.
இது அவர்களின் உழைப்பின் சுரண்டலாக கருதப்பட்டதால் அதனை 8 மணித்தியாலங்களாக குறைப்பதற்கு பல போராட்டங்கள் நிகழ்த்தப்பட்டன. உற்பத்தி திறன் அதிகரிக்கப்படுவதற்கு தொழிலாளர்கள் அதிகளவு துன்புறுத்தல்களுக்கு உள்ளாவதை இவர்களின் இரத்தம் சாறாக பிழியப்பட்டதை கண்டித்தும் போராட்டங்கள் எழுந்தன. இதனால் கார்ல்மாக்ஸ் மற்றும் ஏங்கல்ஸ் உள்ளிட்ட 18 நாடுகளை சேர்ந்த 400 பேர் வரை இப்போராட்டத்தில் ஈடுபட்டனர். 1986ம் ஆண்டு அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட போராட்டம் வெற்றிக் கண்டது. இவ்வெற்றியை நினைவு கூறும் வகையில் மே முதலாம் திகதி தொழிலாளர் தினமாக கொண்டாடப்படுகிறது.
ஒவ்வொரு நாட்டினதும் இயக்கத்தில் செல்வாக்கு செலுத்தும் தொழிலாளர்கள் எமது அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் உணவு, உடை, உறையுள் என்பவற்றிலும் தமது உழைப்பின் வியர்வையை சிந்தியுள்ளனர் என்றால் மிகையில்லை.
இவ்வாறு நாட்டின் முதுகெலும்பாக திகழும் தொழிலாளர்களின் தேவைகள் பூர்த்தி செய்யப்படுகின்றனவா? என்று ஆராயும் போது சற்று சிந்திக்க கூடிய விடயமாக உள்ளது. வேலைத்தளங்களில் இவர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ள சந்தர்ப்பங்கள் குறைவாகவே காணப்படுகின்றன. தொழிலாளர் உரிமை வென்றெடுக்கப்பட்டாலும் இவர்கள் உரிமைகள் பறிக்கப்பட்ட பல இடங்கள் இன்னும் காணப்படுகின்றன. 8 மணிநேர வேலை, 8 மணிநேர ஓய்வு, 8 மணி நேர உறக்கம் அற்ற எத்தனையோ தொழிலாளர்கள் எம் மத்தியில் உள்ளனர். குடும்ப பொருளாதாரம் தலைக்கு மேல் உள்ளதால் முதலாளி வர்க்கத்துக்கு தலை குனியும் தொழிலாளர் பட்டாளமும் இன்றும் இருக்கத்தான் செய்கின்றனர். உயரமான பல மாடிக் கட்டிடங்களில் தொழில் புரியும் தொழிலாளர்கள், மின்சார வேலைகளில் ஈடுபடும் தொழிலாளர்கள் மற்றும் ஆபத்தான தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்களின் உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்றே கூறலாம்.
செய்யும் தொழிலே தெய்வம் என்ற பழமொழிக்கு ஏற்ப தொழில்புரியக் கூடிய ஒவ்வொரு தொழிலாளர்களும் மதிக்கப்பட வேண்டியவர்களே. சமூகத்தில் தொழிலாளர்களுக்கான அந்தஸ்து வழங்கப்பட வேண்டும். அவர்கள் மரியாதையுடன் நடாத்தப்பட வேண்டும். அவர்கள் குடும்பச் சுமையை தோளில் சுமக்கின்றனர் என்பதை நாம் உணர வேண்டும். அவர்களின் உரிமைகளை மீறும் செயற்பாடுகளில் நாம் ஈடுபடக்கூடாது. இன்றைய சமூகத்தில் தொழில்களை அடிப்படையாக வைத்துக் கொண்டு தாழ்வான தொழில் செய்யக் கூடியவர்கள் குறைத்து மதிப்பிடவும், உயர்வான தொழிலை செய்யக்கூடியவர்கள் மதிக்கத்தக்கவர்களாகவும் மக்கள் கருதுகின்றனர். இவ்வாறான தவறான மதிப்பீடுகளை தவிர்க்க வேண்டும்.
ஒரு நாட்டின் பொருளாதார வீழ்ச்சிக்கும், வளர்ச்சிக்கும் அவர்களின் பங்கு
இன்றியமையாததாகும். உழைக்கும் நேரங்களில் தொழிலாளர்கள் உழைக்காது போனால் அந்நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துவிடும். எனவே குறிப்பிட்ட நாட்டின் பொருளாதாரம் அந்நாட்டின் தொழிலாளர் கைகளிலேயே தங்கியுள்ளது. உழைப்பாளி இல்லாத நாடு உயிரற்ற உடலைப் போன்றது. ஒவ்வொரு நாட்டிலும் தொழிலாளர்களின் பங்கு மகத்துவமானது.
எனவே இவ்வாறு வியர்வையினால் மண்ணிற்கு ஈரமூட்டும் தொழிலாளர்கள் போற்றப்பட வேண்டியவர்கள். மதிக்கப்பட வேண்டியவர்கள். இந்த தொழிலாளர் தினத்திலாவது இவர்களின் வாழ்வியல் தேவைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும். தொழிலுக்கேற்ற ஊதியம் பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும். அவர்களின் பொருளாதார தேவைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும். அவர்கள் குறிப்பிட்டளவு நேரம் மட்டுமே தொழிலில் ஈடுபட வேண்டும். விடியலுக்காக ஏங்கும் இவர்களின் வாழ்வில் எப்போது வெளிச்சம் வரும்.
முருகையா தவமணிதேவி
வட்டகொட.
![]()