தரையில் கிடந்த பொருள்; கையில் எடுத்த இஸ்ரேல் சிறுமிக்கு இன்ப அதிர்ச்சி

இஸ்ரேலில் மூன்று வயது சிறுமி ஒருவர் குடும்பத்துடன் சுற்றுலா சென்ற போது ஒரு பழங்கால புதையலைக் கண்டுபிடித்ததன் மூலம் ஒரே இரவில் பிரபலமடைந்துள்ளார்.
தெற்கு இஸ்ரேலில் உள்ள டெல் அசேகாவின் தொல்பொருள் தளத்திற்கு சென்றிருந்தபோது, 3,800 ஆண்டுகளுக்கு பழமையான கானானிய சமூகங்களைச் சேர்ந்ததாக நம்பப்படும் ஒரு ஸ்காராப் தாயத்தை ஷிவ் நிட்சான் என்ற சிறுமி கண்டுபிடித்தார்.
இதுதொடர்பாக சிறுமியின் சகோதரி கூறுகையில், “நாங்கள் பாதையில் நடந்து சென்று கொண்டிருந்தோம். அப்போது, ஷிவ் குனிந்தாள். அவளைச் சுற்றி நிறைய கற்கள் இருந்தது. ஆனால் அவள் இந்த குறிப்பிட்ட கல்லை மட்டும் எடுத்தாள். அந்த கல் பார்ப்பதற்கே அழகாக இருந்தால் என் பெற்றோரை அழைத்தேன். அப்போதுதான் நாங்கள் ஒரு தொல்பொருளை கண்டுபிடித்ததை உணர்ந்தோம்,” என்றார்.
பின்னர் அந்தக் குடும்பத்தினர் இந்தக் கண்டுபிடிப்பு தொடர்பாக இஸ்ரேலின் தொல்பொருள் ஆணையத்திடம் (IAA) தகவல் தெரிவித்தனர். அவர்கள் சிறுமி ஷிவ்வுக்கு நல்ல குடியுரிமைக்கான பாராட்டுச் சான்றிதழை வழங்கினர்.
இதனிடையே இஸ்ரேலின் தொல்பொருள் ஆணைய இயக்குனர் கூறுகையில், “இஸ்ரேல் நாட்டின் தேசிய பொக்கிஷத்தை கண்டுபிடித்து ஒப்படைத்த ஷிவ் மற்றும் அவரது குடும்பத்தினர் பாராட்டுக்குரியவர்கள்.
அவர்களுக்கு நன்றி. அனைவரும் அதைப் பார்த்து மகிழ முடியும். பஸ்கா பண்டிகையை முன்னிட்டு, இஸ்ரேல் தொல்பொருள் ஆணையத்தால் அமைக்கப்பட்டுள்ள ஒரு சிறப்பு கண்காட்சியில் இந்த முத்திரையை நாங்கள் வழங்குவோம்” என்று கூறினார்.