உலகம்

அமெரிக்கா பொருளாதாரத்தில் மந்தநிலை ஏற்படும்: சர்வதேச நிதி ஆய்வு நிறுவனம் கணிப்பு

”அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்த புதிய வரிகளின் தாக்கம் காரணமாக, ஆண்டு இறுதிக்குள் பொருளாதாரத்தில் மந்தநிலை ஏற்படும்” என சர்வதேச நிதி ஆய்வு நிறுவனம் ஜே.பி. மோர்கன் கணித்துள்ளது.

அமெரிக்க பொருட்களை இறக்குமதி செய்ய மற்ற நாடுகள் அதிக வரி விதிப்பதால் ஏற்படும் வர்த்தக சமநிலை இல்லாமைக்கு தீர்வு காண்பதாக கூறி, இந்தியா உட்பட 60 நாடுகளின் பொருட்கள் இறக்குமதிக்கு அதிபர் டிரம்ப் வரி விதித்திருக்கிறார். அதில், இந்திய பொருட்களுக்கு 27 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது.

டிரம்பின் வரி விதிப்பால் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யும் நாடுகள் கடுமையாக பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் உலகம் முழுவதும் பங்குச்சந்தைகள் வீழ்ச்சி அடைந்துள்ளன. இந்நிலையில், ”புதிய வரிகளின் தாக்கம் காரணமாக, ஆண்டு இறுதிக்குள் பொருளாதாரத்தில் மந்தநிலை ஏற்படும்” என ஜே.பி. மோர்கன் கணித்துள்ளது.

இது குறித்து, இந்த நிறுவனத்தின் பொருளாதார நிபுணர் மைக்கேல் பெரோலி கூறியதாவது: புதிய வரிகளின் தாக்கம் காரணமாக, ஆண்டு இறுதிக்குள் பொருளாதார மந்தநிலை ஏற்படும். வேலையின்மை விகிதம் 5.3 சதவீதம் வரை அதிகரிக்கும்.

மற்ற நாடுகளின் வரிகளுடன் ஒப்பிடும் போது, இந்தியாவிற்கு 26 சதவீத வரி நியாயமானது. பலவீனமான அமெரிக்க பொருளாதாரம் காரணமாக, இந்திய ஐ.டி., துறையில் பாதிப்பு ஏற்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

டிரம்பின் புதிய வரி விதிப்பு குறித்து பெடரல் ரிசர்வ் தலைவர் ஜெரோம் பவல் கவலை தெரிவித்தார். அவர் கூறியதாவது: புதிய வரி விதிப்பு முன்பு எதிர்பார்த்ததை விட மிகப் பெரிய சேதத்தை ஏற்படுத்தும். அதிக பணவீக்கம் ஏற்பட இதுவே உண்மையான காரணமாக அமையும் என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.