முச்சந்தி

தமிழரசுக் கட்சி தொடர்பில் முகநூலில் வெளிவரும் தகவல்கள் பொய்யானவை

இலங்கைத் தமிழரசுக் கட்சியினால் திருகோணமலை மாநகர சபை முதல்வர், உப்புவெலி பிரதேச சபை தவிசாளர், வெருகல் பிரதேச சபை தவிசாளர் ஆகிய தெரிவுகள் ஏற்கனவே தெரிவு செய்யப் பட்டதாக முகநூலில் வெளிவரும் தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை என இலங்கை தமிழரசு கட்சியின் திருகோணமலை மாவட்ட எம்.பி. சண்முகம் குகதாசன் தெரிவித்தார்.

திருகோணமலை குச்சவெளி பகுதியின் நாவற்சோலை கிராமத்தில் இடம்பெற்ற உள்ளூராட்சி மன்ற வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நிகழ்வில் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,

அப்படி எந்தவொரு முடிவுகளும் எடுக்கப் படவில்லை. முகநூலில் வெளிவந்ததாக நீங்கள் கூறுவதும் ஒரு போலியான செய்தியாகத் தான் இருக்க வேண்டும். எந்தவொரு சபையினுடைய தலைவரையும் தமிழரசுக் கட்சியோ அல்லது வேறு எந்தக் கட்சியோ தெரிவு செய்ய இயலாது.தேர்தல் முடிவடைந்த பின்பு அந்த சபையில் தெரிவு செய்யப்பட்ட மொத்த உறுப்பினர்களில் அரைவாசிக்கு மேற்பட்ட உறுப்பினர்களது ஆதரவைப் பெறுபவரே சபைத் தலைவராக உள்ளூராட்சி ஆணையாளரால் நியமிக்கப்படுவார் என்பதனை பள்ளி மாணவர்களே அறிவர்  இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கின்றது.

திருகோணமலை மாநகர சபை பட்டணமும் சூழலும் பிரதேச சபை வெருகல் பிரதேச சபை ஆகிய சபைகளில் ஆட்சியமைப்போம்.மூதூர், குச்சவெளி ஆகிய பிரதேச சபைகளில் ஆட்சி அமைப்பதில் செல்வாக்கு செலுத்துவோம். சேருவில, தம்பலகாமம், மொரவேவா, கிண்ணியா ஆகிய சபைகளில் தமிழர்கள் வாழும் வட்டாரங்களில் வெற்றி பெறுவோம்.

வெற்றிக்காக எவ்வாறான உத்திகளை கையாள உள்ளோம் என்பதனை வெளிப்படையாக கூற முடியாது. தமிழரசுக் கட்சி அதிகார பரவலாக்கதிற்கு போராடுகின்ற ஒரு கட்சி, அந்த அடிப்படையில் உட்கட்சியிலும் அதிகார பரவலாக்கல் இருக்க வேண்டும் என்னும் நோக்கோடு, ஒவ்வொரு கோட்டத்திற்கும், தத்தம் உள்ளூராட்சி சபைகளுக்கான வேட்பாளர்களை தெரிவு செய்யும் சுதந்திரம் வழங்கப்பட்டது. அந்த அடிப்படையில் வட்டாரம் மற்றும் கோட்டக் கிளையினர் தெரிவுகளை மேற்கொண்டனர்.

போலி பிரசாரங்கள் முன்னெடுக்கபட்டு வருகின்றன.என்னிடம் ஒரே ஒரு முகநூல் கணக்கு தான் இருக்கின்றது ஆங்கில எழுத்துக்களில் கதிரவேலு சண்முகம் குகதாசன் என்னும் கணக்கு ஆகும். இதற்கு blue tick என அறியப் படும் நீலச் சரி குறியீடு வழங்கப் பட்டுள்ளது. இதைத் தவிர வேறு எந்தக் கணக்குகளும் இல்லை. அப்படி இருந்தால் அவை போலியான கணக்குகள் ஆகும்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் மகளிர் மற்றும் இளையோர் உரிய விகிதத்தில் இல்லாமல் இருந்திருந்தால் தேர்தல் திணைக்களம் வேட்புமனுவை நிராகரித்து இருக்கும்.

திருகோணமலை மாவட்டத்தில் நாங்கள் வேட்புமனு தாக்கல் செய்த 9 சபைகளது வேட்பு மனுக்களும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன . இதிலிருந்தே நாங்கள் சரியான முறையில் மகளிர் மற்றும் இளையோரைத் தெரிவு செய்து இருக்கின்றோம் என்பதனை அறிந்து கொள்ள முடியும் என்றார்.

 

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button