பெருந் தோட்டப் பகுதியில் 54 தொழிற்சாலைகளைத் தீக்கிரையாக்கிய ஜே.வி.பி.

மலையக தலைவர்கள் மன்னிப்பு கோர வேண்டும் என்று ஜே .வி.பி.யினர் கூறுவதனை ஏற்றுக்கொள்ள முடியாது. ஜே .வி.பி.யினர் பெருந்தோட்டப் பகுதியில் 54 தொழிற்சாலைகளை தீக்கிரையாக்கினர் . அதற்கு மன்னிப்பு கோருவீர்களா,
என இலங்கைத்தொழிலாளர் காங்கிரஸ் தலைவரும் ஐக்கிய தேசியக் கட்சியின் நுவரெலியா மாவட்ட எம்.பி.யுமான ஜீவன் தொண்டமான் கேள்வி எழுப்பினார்.
பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சு மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு கேள்வி எழுப்பிய அவர் மேலும் பேசுகையில்
நோர்வூட் பிரதேச செயலகத்தில் காணப்படும் வளப்பற்றாக்குறையால் தான் அதனை ஹட்டன் பகுதிக்கு மாற்ற தீர்மானித்துள்ளதாக அரசு ஆதரப்பு எம்.பி கலைச்செல்வி குறிப்பிடுகிறார். வீட்டின் கூரை பழுதடைந்தால் வீட்டை மாற்றுவதில்லை. வீட்டை திருத்த வேண்டும் அதுபோல்தான் இதுவும். நோர்வூட் பிரதேச பிரதேச செயலகத்தில் வளப்பற்றாக்குறை காணப்பட்டால் அதனை நிவர்த்தி செய்த நிதி ஒதுக்குங்கள் அதனை விடுத்து ஹட்டன் பகுதிக்கு பிரதேச செயலத்தை கொண்டுச் செல்ல வேண்டாம்.
நோர்வூட் பிரதேச செயலகத்தை இடமாற்றம் செய்வதற்கு எதிராக அப்பிரதேச மக்கள் கையெழுத்துக்களை பதிவு செய்து தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளார்கள். ஆகவே மக்களின் நிலைப்பாட்டுக்கு மதிப்பளித்து செயற்படுங்கள்.
மலையக அரசியல் தலைமைகள் மன்னிப்பு கோர வேண்டும் என்று ஆளும் தரப்பின் உறுப்பினர் கலைச்செல்வி குறிப்பிட்டிருந்தார். ஏன் மன்னிப்பு கோர வேண்டும்? எதற்கு மன்னிப்பு கோர வேண்டும்? 1948 ஆம் ஆண்டுக்கு பின்னர் மலையக மக்கள் இந்த நாட்டில் நாடற்றவர்களாக இருந்தார்கள். 2009 ஆம் ஆண்டுக்கு பின்னரே முழுமையாக குடியுரிமை கிடைக்கப்பெற்றது. இதற்கு மன்னிப்பு கோர வேண்டுமா,
வீடமைப்பு உட்பட இதர உரிமைகளுக்காக மலையக மக்கள் இந்திய அரசாங்கத்திடம் பிச்சை கேட்கவில்லை. மலையக மக்களின் விவகாரத்தில் இந்திய அரசாங்கத்துக்கும் பொறுப்புண்டு. ஒரு காலத்தில் இந்திய அரசாங்கமும், இலங்கை அரசாங்கமும் மலையக மக்களை நாடு கடத்தியது. இதற்கு யார் மன்னிப்பு கோருவது?
பெருந்தோட்ட மக்களின் கல்வி மேம்பாட்டுக்காக ஸ்ரீபாத கல்வியியல் கல்லூரி பாரிய போராட்டத்துக்கு மத்தியில் உருவாக்கப்பட்டது. இதற்கு மன்னிப்பு கோர வேண்டுமா? எவரையும் விமர்சிக்க வேண்டும், ஆவேசமாக பேச வேண்டும் என்பது எனது கொள்கையல்ல. நாம் அனைவரும் பின்தங்கப்பட்டுப்பட்டுள்ள எமது மலையக மக்களைளே பிரதிநிதித்துவப்படுத்துகிறோம். ஆகவே ஒருவரை ஒருவர் விமர்சித்துக் கொண்டிருந்தால் எமது மக்களுக்கு அபிவிருத்திகளும் உரிமைகளும் கிடைப்பது தொடர்ந்து போராட்டத்துக்குரியதாக அமையும்.
மலைய மக்கள் மத்தியில் அரச மற்றும் எதிர்க்கட்சி என்ற வேறுப்பாடு இருக்க கூடாது என்பதற்காகவே நான் தமிழ் முற்போக்கு கூட்டணியின் மேடை ஏறினேன். மலையக சிரேஷ்ட அரசியல் தலைமைகளான மனோகணேசன், இராதாகிருஷ்ணன் திகாம்பரம் ஆகியோருடன் இணக்கமாக செயற்படுகிறேன்.
மலையக தலைவர்கள் மன்னிப்பு கோர வேண்டும் என்று ஜே .வி.பி.யினரான நீங்கள் குறிப்பிடுகின்றீர்கள் . அவ்வாறாயின் உங்கள் கட்சி ( கலைச்செல்வியை நோக்கி) பெருந்தோட்டத்தில் 54 தொழிற்சாலைகளை தீக்கிரையாக்கியது. அதற்கு உங்களால் மன்னிப்பு கோர முடியுமா/ ஆகவே தொடர்ந்து குறை கூறுவதை மாத்திரம் முன்னிலைப்படுத்தாதீர்கள்.
ஆளும் தரப்பின் உறுப்பினர் அம்பிகா தனது உரையில் 2014 முதல் 2024 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் இந்திய வீடமைப்பு திட்டத்துக்கும் இலங்கை அரசாங்கத்தின் வீடமைப்புத் திட்டத்துக்கும் ஒதுக்கப்பட்ட நிதிக்கு என்ன நேர்ந்தது என்பதை அறியவில்லை என்று குறிப்பிட்டிருந்தார்.
2020 ஆம் ஆண்டு நான் இராஜாங்க அமைச்சராக பதவியேற்ற போது 4000 வீடுகள் கட்டப்பட்டிருந்தன. அவற்றில் 2000 வீடுகளின் பணிகள் முழுமைப்படுத்தப்பட்டிருந்தன. அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சு பதவி இல்லாமல் மலையகத்துக்கு அபிவிருத்திகளை முன்னெடுப்பது கடினமானது என்பதை தற்போதைய பிரதி அமைச்சர் பிரதீப் நன்கு அறிவார்.
இராஜாங்க அமைச்சராக பதவி வகித்துக் கொண்டு இயலுமான வகையில் வீட்மைப்புத் திட்டத்தை முழுமைப்படுத்தினேன். 2024 ஆம் ஆண்டு இலங்கை அரசாங்கத்தின் நிதி திட்டத்தில் 329 வீடுகளை நிர்மானிக்க ஆரம்பித்தோம். 2020 முதல் 2024 ஆம் ஆண்டு காலப்பகுதியில் 1667 வீடுகள் கட்டப்பட்டு மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.
அதேபோல் இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியின் கீழ் 2020 -2024 வரையான காலப்பகுதியில் 1821 வீடுகள் கட்டப்பட்டு, மக்கள் பாவனைக்கு வழங்கப்பட்டுள்ளன. அமைச்சராக ஒரு வருடம் பதவி வகித்தேன்.அக்காலப்பகுதியில் 14 வீடுகள் கட்டப்பட்டன.
இந்திய வீட்மைப்பு திட்டத்தில் 1300 வீடுகள் இன்றும் இழுபறி நிலையில் காணப்படுவதாக குற்றஞ்சாட்டப்படுகிறது. இந்த வீட்டுத்திட்டத்தை ஆரம்பிக்கும் போது ஒரு வீட்டுக்கான செலவு 9 இலட்சமாக மதிப்பிடப்பட்டது. கொவிட் பெருந்தொற்று இ பொருளாதார பாதிப்பு ஆகிய காரணிகளால் வீட்டின் நிர்மாணிப்பு செலவு 32 இலட்சமாக உயர்வடைந்தது.
இலங்கை அரசாங்கத்தின் நிதியை ஏற்றாற் போல் மாற்றிக்கொள்ளலாம்.இந்திய அரசாங்கத்தால் வழங்கப்பட்ட நிதியுதவி திட்டத்தை இந்திய அரசாங்கமே மாற்றியமைக்க வேண்டும். இதற்கான நடவடிக்கைளை நான் முன்னெடுத்தேன். இந்திய மத்திய அரசாங்கத்துக்கு:கு 18 கடிதங்களை அனுப்பி இவ்விடயம் தொடர்பில் தொடர்ச்சியாக கலந்துரையாடினேன். இதன் பிரதிபலனாகவே 950000 ரூபா செலவுத் தொகை 25 இலட்சமாக அதிகரிக்கப்பட்டது. இந்த திட்டத்தில் 600 வீடுகளை நிர்மாணிக்கும் பணிகளை நாங்கள் ஆரம்பித்தோம், நீங்கள் நிறைவு ப்படுத்துவீர்கள் என்று எதிர்பார்க்கிறோம்.
![]()