குறள் கூறும் பொருளில் பிறர் பார்வையும் என் பார்வையும் – பார்வை – 01 … சங்கர சுப்பிரமணியன்


திருக்குறள் என்பது வியத்தகு நூல். ஏனைய நூல்களைப் போல் அன்று. சிலப்பதிகாரம் கண்ணகி வரலாற்றை சொல்லும் கம்பராமாயணம் இராமனைப் பற்றி பேசும் ஆனால் திருக்குறள் ஒவ்வொரு குறளும் பலபொருட்களை கண்முன் காட்டி கண்ணாமூச்சி காட்டும். மேற்போக்காக பார்த்தால் மேற்போக்காகவும் ஆழ்ந்து நோக்கினால் அற்புதமான பொருள் கிடைக்கும்.
திருக்குறள் விலைமதிக்க முடியாத வைரம். அதை பட்டை தீட்டத்தீட்ட அதன் ஒளி கண்ணைப் பறிப்பதில் வேறுபாடு காட்டி வியப்புற வைக்கும். வைரத்தை பட்டை தீட்டுவர்களின் திறமையைப் பொருத்து பரிணமிக்கும். ஏகப்பட்ட தமிழ்ப் பேரறிஞர்கள் மத்தியில் நானும் கானமயிலாட கண்டிருந்த வான்கோழியாக பட்டை தீட்ட வந்துள்ளேன்.
இந்த முன்னுரையுடன் திருக்குறளில் ஒரு குறளைப் பற்றி பொருள் காண்போம்.
“அறவாழி அந்தணன் தாள் சேர்ந்தார்க்
கல்லால் பிறவாழி நீந்தல் அரிது”
என்பதே அக்குறள்.
திருக்குறளுக்கு பொருள் காண்பது எளிதல்ல. இரண்டு அடிகள் முழுமையாக இல்லாத குறள்தானே என்று சற்று ஏளனமாக எண்ணினால் தீட்டிய கத்திபோல் பதம் பார்த்துவிடும் ஆற்றல் அதற்குண்டு. இதனை என் தமிழாசான் உயர்நிலைப்பள்ளியில் எனக்கு சொன்னது இன்னும் என் செவிப்பறையில் விழுவதுபோல் இருக்கிறது.
அவர் தான் எனக்கு திருக்குறளில் மூழ்கி முத்தெடுக்கும் வித்தையைக் கற்றுத் தந்தார்.
என் ஆசானைத் தொழுது மேற்கண்ட குறளுக்கு என் சிற்றறிவுக்கு எட்டிய அளவுக்கு பொருள் சொல்கிறேன். பேரறிஞர்கள் பொருத்தருள்க.
முதலில் அந்தணன் என்ற சொல்லுக்கு பொருள் காண்போம். அந்த சொல்லுக்கு பல பொருள் உண்டு. அவற்றுள் இடத்திற்கு ஏற்ப பொருள் காணவேண்டும். கனியிருப்ப காய் கவர்ந்தற்று என்று வள்ளுவரே ஆலோசனை சொல்கிறார் அல்லவா? அவையின்கண் என்றால் அவைக்கு ஏது கண் என்று கேட்கக் கூடாது. அவையின்கண் என்றால் அவையில் என்று பொருள்.
அந்தணன் என்ற சொல்லைப் பிரித்தால் அந்தம்+அணவு+அன் என்று வரும். இச்சொல்லின் பொருள் அறம் என்று முன்னோர்களால் வகுக்கப்பட்ட நீதிகளை முறைப்படி பின்பற்றுபவன் என்பதாகும். அவனே அந்தணன் ஆவான்.

அறக்கடலை அல்லது கடல் போன்ற அறத்தை பின்பற்றுவனே அறவாழி அந்தணன். தாள் சேர்ந்ந்தார்க்கல்லால் என்றால் தடால் என்று அவர் காலில் விழுந்து விழுவதாக பொருள் கொள்ளக்கூடாது. தடால் தடால் என்று சற்றும் சிந்திக்காமல் மற்றவர் காலில் விழுபவன் பெரும்பாலும் நேர்மையற்றவனாகவே இருப்பான்.
வயதில் மூத்தவர்கள் மற்றும் பெற்றோர் காலில் விழுவதில் தவறில்லை. இந்த இடத்தில் அறவாழி அந்தணன் வழியைப் பின் பற்றாதவர்களால் அல்லது பின் தொடாதவர்களால் என்றே பொருள் கொள்ள வேண்டும். இந்த அறவாழி அந்தணர் வயதில் மூத்தவர்களாக இருக்கும் பட்சத்தில் காலில் விழுந்தாலும் தவறில்லை.
வாழ்க்கை என்பது மலர்ப்படுக்கையல்ல. அது முற்படுக்கை. வாழ்க்கயை பற்றற்ற கடக்கவேண்டும் என்பது தத்துவ ஞானிகளின் கருத்தை ஏற்றுக் கொண்டாலும் பாமரமக்களின் யதார்த்த நிலையிலும் நின்று பார்க்கவேண்டும்.
இப்போது எனக்கு சிவாஜி கணேசன் நடித்த படத்திலிருந்து ஒரு பாடல் நினைவுக்கு வருகிறது. அப்பாடலில் இருந்து சில அடிகளை கீழே தந்தபின் கட்டுரையில் பயணிப்போம்.
படித்திருந்தும் தந்தை தாயை மதிக்க மறந்தான்
ஒருவன் படுக்கையிலே முள்ளை வைத்து பார்த்து ரசித்தான்
பிடித்த முயல் அத்தனைக்கும் மூன்று காலென்றான்
ஒருவன் பெண்டாட்டியின் கால்களுக்கே காவல் இருந்தான் என்றும்
மரணத்தை எண்ணி கலங்கிடும் விஜயா என்ற மற்றொரு பாடலில்,
கண்ணனே காட்டினான் கண்ணனே சாற்றினான்
கண்ணனே கொலை செய்கின்றான்
காண்டீபம் எழுக நின் கைவண்ணம் எழுக
இக்களமெல்லாம் சிவக்க வாழ்க
என்றும் அற்புதமான கருத்துக்கள கண்ணதாசன் எனும் ஆகச்சிறந்த கவிஞன் நமக்குத் தந்துள்ளான். மேற்கண்ட பாடல்கள் சாதாரண திரைப்பட பாடல் என்றாலும் அதில் பொருள் புதைந்துள்ளது. வெறும் திரைப்படல் பாடல்தானே என்று அதைத்
தள்ளிவிட முடியாது. இந்த பாடல்களின் வரிகளையும் துணைகொண்டு நான் பொருள் சொல்லவந்த குறளுக்கு வலு சேர்க்கிறேன்.
படித்திருந்தும் தந்தை தாயை மதிக்க மறந்ததைத்தான் படுக்கையிலே முள்ளை வைத்து பார்த்து ரசிப்பதோடு ஒப்பிடுகிறார் வள்ளுவர். இப்படி பெண்டாட்டியின் சொல்கேட்டு பெற்றோரை மதியாமல் அவர்கள் செய்வதே சரி என்று நினைப்பதைத்தான் பிடித்த முயல் அத்தனைக்கும் மூன்றுகால் என்றும் ஒப்பிடுகிறார்.
அடுத்ததாக கண்ணனே காட்டானான் வரிகளுக்கு வருவோம். நாமே திருக்குறளை போற்றுகின்றோம். திருக்குறளை மலம் என்று சொன்ன ஈ. வெ. ரா போன்றோரின் பேச்சைக்கேட்டுக் கொண்டு நாமே திருக்குறளை தூற்றுகின்றோம். எனவே நாம்
அறிவு சார்ந்த காண்டீபத்தை எழுப்புவோம். நம் திறமையைக்காட்டுவோம்.
இக்களமெல்லாம் சிவக்க என்பதுபோல் திருக்குறளின் செம்மையை சிறக்க வைப்போம்.
அடுத்ததாக பிறவாழி நீந்தல் அரிது என்கிறார். வள்ளுவர் நம்மை எந்தக் கடலை நீந்தச் சொல்கிறார் அதையும் ஏன் கடினம் என்கிறார் என்றெல்லாம் குழம்பக்கூடாது. அல்லது பெரிய அலைகள் அடிக்கும் கடலில் நீந்துவதை அபாயம் என்கிறாரா? அப்படியொன்றும் இல்லை. இதற்கும் நேரடியாக பொருள் கொள்ளக்கூடாது.
இங்கு பிறவாழி என்றால் மற்ற பிரச்சனைகளை அதாவது பிறபிரச்சனைகளை கடந்து செல்வது கடினம் என்றே பொருள் கொள்ள வேண்டும்.
இப்போது எடுத்துக் கொண்ட குறளுக்கு முழுமையாக பொருள் காண்போம். கடல்போன்ற அறத்தை வாழ்வின் வழியாக கொண்டவனை பின்பற்ற வேண்டும். அப்படி பின்பற்றுபவர்களைத் தவிர வேறு எவராலும் பிற பிரச்சனைகளை கடப்பது கடினமாகும் என்பதே இக்குறளின் பொருளாகும்.
(தொடரும்…)
![]()