உலகம்

கிரீன்லாந்து அமெரிக்காவுக்கு கட்டாயம் வேண்டும்: ட்ரம்ப் திட்டவட்டம்

டென்மார்க் வசமுள்ள கிரீன்லாந்தை, அமெரிக்காவுடன் இணைப்பது தொடர்பாக நேட்டோ பொதுச்செயலாளருடன் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இந்த சந்திப்பை தொடர்ந்து, இது நிச்சயம் நடக்கும் என்று நினைப்பதாக டிரம்ப் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் பொறுப்பேற்றது முதல் அண்டை நாடுகளை வரியினாலும், கருத்தாலும் தொடர்ந்து அச்சுறுத்தி வருகிறார்.
அந்த வகையில், கனடாவை அமெரிக்காவின் ஒரு மாகாணமாக இணைய வேண்டும் என்று கூறிய அவர், பனாமா கால்வாயை திரும்பப் பெறப் போவதாகவும் எச்சரித்தார்.

இதைத் தொடர்ந்து, நாட்டின் பாதுகாப்பு மற்றும் உலக சுதந்திரத்திற்காக கிரீன்லாந்து மீதான உரிமையும், கட்டுப்பாடும் அவசியம் என்று கூறிய ஜனாதிபதி டிரம்ப், டென்மார்க்கிடம் இருந்து கிரீன்லாந்தை வாங்க வேண்டும் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

இந்த நிலையில், நேட்டோ பொதுச்செயலாளர் மார்க் ரூட்டை வெள்ளை மாளிகையில் டிரம்ப் சந்தித்து பேச்சு நடத்தினார். இந்த சந்திப்பை தொடர்ந்து, இருவரும் செய்தியாளர்களை சந்தித்தனர்.

இதன்போது கருத்து வெளியிட்ட ட்ரம்ப்,
‘ சர்வதேச பாதுகாப்புக்கு கிரீன்லாந்து அவசியம். அதை அமெரிக்காவுக்கு வேண்டும். இது நடக்கும் என்று நான் நினைக்கிறேன். இதற்கு முன்பு இதைப்பற்றி அதிகம் யோசிக்கவில்லை. தற்போது ஒரு முக்கியமான நபருடன் அமர்ந்திருக்கிறேன். ” என்று குறிப்பிட்டுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *