பலதும் பத்தும்
தமிழ் நாடு….. அன்னவாசல் ஒன்றியம் பரம்பூர் அருகே அரசு ஆரம்பப் பள்ளியில் கலை இலக்கியத் திருவிழா நடைபெற்றது!

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் பரம்பூர் ஊராட்சி காரசூராம்பட்டி அரசு ஆரம்பப் பள்ளியில் கலை இலக்கிய திருவிழா நடைபெற்றது. விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் கலைச்செல்வி தலைமை தாங்கினார். பள்ளி மேலாண்மை குழுத் தலைவர் ரேகா, துணைத் தலைவர் பரமேஸ்வரி, சமூக ஆர்வலர் துரைசிங்கம், சமூக ஆர்வலர் பச்சைமுத்து, சமூக ஆர்வலர் வேல்சாமி, புதுப்பட்டி கண்ணன் போன்றோர் கலந்து கொண்ட இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக வட்டாரக் கல்வி அலுவலர் கலா அவர்கள் கலந்து கொண்டார்கள். பாட்டுப் போட்டி, பேச்சுப்போட்டி, கவிதை போட்டி, நடன போட்டி விளையாட்டுப் போட்டிகள் நினைவாற்றல் போட்டி என பன்முக திறமைகளை விழிப்புணர்வு வகையில் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் கவிதைகள், நூற்றாண்டு கண்ட கவிஞர் தமிழ்ஒளி கவிதைகள், முண்டாசுக் கவிஞர் பாரதியார் கவிதைகள், பாவேந்தர் பாரதிதாசன் கவிதைகள் என இலக்கிய ஆளுமைகளின் படைப்புகளை மாணவர்கள் இவ்விழாவில் திறம்பட பேசினர். பரதநாட்டியம், கரகம், கருப்பசாமி ஆட்டம் என தமிழரின் கலைகளை பறைசாற்றும் விதமாக இலக்கியத் திருவிழா நடைபெற்றது.
பொதுமக்களால் அனைவருக்கும் மதிய உணவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆசிரியர் சித்ரா, தலைமை ஆசிரியர் தனலட்சுமி, வேல்சாமி, துரைசிங்கம் போன்றோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
வட்டார கல்வி அலுவலர் மாணவர்களுக்கு பரிசினை வழங்கி “இதுபோன்ற கலை திருவிழாக்களை ஆண்டுதோறும் நடத்த வேண்டும். ஊர் பொதுமக்களின் ஒற்றுமையை வெகுவாக பாராட்டுகின்றேன். மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பள்ளி செல்லும் குழந்தைகள் அனைவரையும் அரசு பள்ளியில் சேர்த்து மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். அரசாங்கம் மாணவர்களுக்கு எண்ணற்ற நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறது. அதை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். பொதுமக்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அறுசுவை உணவும் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் மிகவும் சிறப்பாக இருந்ததைப் போல எப்போதும் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் என்றும் பாராட்டி பேசினார்கள். நிகழ்ச்சியினை ஆசிரியர் திருப்பதி(எழுத்தாளர் சோலச்சி) தொகுத்து வழங்கி நன்றி கூறினார்.
![]()