கட்டுரைகள்
ரணிலின் சுயரூபத்தை வெளிக்காட்டிய அல்ஜசீரா : போர்க்குற்ற விசாரணை மறுதலிப்பா? ஒப்புதலா? … நவீனன்.

(நுணலும் தன் வாயால் கெடும் எனும் பழமொழிக்கு ஒப்பாக, ரணிலும் தன் வாயால் பல விடயங்களை ஒப்புக்கொண்டு விட்டார். அல்லது ஒப்பாரி வைத்து விட்டார் என்றும் கருதலாம். எப்படித்தான் தன் சிங்கள இனத்தை போர்க்குற்றத்தில் இருந்து காப்பாற்ற அவர் முயற்சித்து இருந்தாலும், அவரின் நேர்காணல் சிங்கள தேசத்தின் உண்மை முகத்தை உலகிற்கு தோலுரித்துக் காட்டி விட்டது என்பதை மறுக்க முடியாது)
சிங்களவர்களால் அதிபுத்திசாலியாகக் கருதப்படும் சிறிலங்காவின் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அல் ஜசீராவில் தொலைக்காட்சியின் ஹெட் டு ஹெட் (Head To Head) நிகழ்ச்சியில் ஊடகவியலாளர் மெஹ்தி ஹசனுக்கு வழங்கிய நேர்காணலில், ஈழத் தமிழர்களின் மீதான இறுதிப் போரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி வழங்குவதை இராணுவம் தடுத்து நிறுத்தியதை தன் வாயேலேயே ஒப்புக் கொண்டுள்ளார்.
நுணலும் தன் வாயால் கெடும் எனும் பழமொழிக்கு ஒப்பாக, ரணிலும் தன் வாயால் பல விடயங்களை ஒப்புக்கொண்டு விட்டார். அல்லது ஒப்பாரி வைத்து விட்டார் என்றும் கருதலாம்.
எப்படித்தான் தன் சிங்கள இனத்தை போர்க்குற்றத்தில் இருந்து காப்பாற்ற அவர் முயற்சித்து இருந்தாலும், அவரின் நேர்காணல் சிங்கள தேசத்தின் உண்மை முகத்தை உலகிற்கு தோலுரித்துக் காட்டி விட்டது என்பதை மறுக்க முடியாது.
போரில் உதவியை தடுத்த இராணுவம்:
ரணில் விக்கிரமசிங்க தன்னை அமைதியின் அரசியல்வாதி, ஜனநாயகம் மற்றும் ஸ்திரத்தன்மையை நிலைநிறுத்தும் தலைவர் என்று பல சுயமுத்திரைகளை குத்துக் கொள்பவர். அத்துடன் இலங்கை ஒரு வன்முறையற்ற நாடு என்றும், முன்னேற்றம் மற்றும் நல்லிணக்க நடவடிக்கைகளை கவனமாக தான் வடிவமைத்துள்ளார் என்றும் அவர் உலகிற்கு கூறி வருபவர்.
இருப்பினும், ஈழத் தமிழர்களைப் பொறுத்தவரை, அவரது வார்த்தைகள் யதார்த்தத்தின் கொடூரமான கேலிக்கூத்தாகும். இறுதிப் போரில் மட்டும் 165,000க்கும் மேற்பட்டோர் ஒரு பாரிய இனப்படுகொலையில் கொல்லப்பட்டனர். அதை ரணில் வெறும் சம்பவமாக குறை மதிப்பிட்டே கூறி வருகிறார்.
உண்மையிலே ரணில் விக்கிரமசிங்கவின் நிலைப்பாடு இதுதான், போர்க்குற்றங்களை வெள்ளையடித்தல், இனப் படுகொலை எனும் சொற்பதத்தையே அகராதியில் இருந்து நீக்குதல், மற்றும் இன அழிப்பு செய்த அரசைப் பாதுகாத்தல்.
ஆனால் அவரது தலைமை தாங்கிய சிங்கள அரசோ 77 ஆண்டுகளாக தமிழர்களை ஒடுக்கிய பௌத்த இனவாத வன்முறையின் கட்டமைப்புகளால் உருவமைக்கப்பட்டுள்ளது என்பதை எவராலும் மறுக்க முடியாது.
ஈழத்தில் இறுதிப் போரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி வழங்குவதை இலங்கை அரச படைகள் தடுத்தன என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். மேலும் மெஹ்தி ஹசனுக்கு வழங்கிய நேர்காணலில், பதவி நீக்கம் செய்யப்பட்ட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை வழக்குத் தொடுப்பிலிருந்து பாதுகாக்கவில்லை என்றும் மறுத்துள்ளார்.
போர்க் குற்ற விசாரணை மறுதலிப்பு :
இந் நேர்காணலில் கூறியது போல இலங்கை வன்முறையற்ற நாடு என்ற விக்கிரமசிங்கவின் கூற்று அப்பட்டமான அவமானமாகும். இலங்கை அரசு ஒருபோதும் வன்முறையற்றதாக இருந்ததில்லை என்பது வரலாற்றில் தெளிவாகிறது.
1956, 1958, 1977 மற்றும் 1983 ஆம் ஆண்டுகளில் அரசால் நடத்தப்பட்ட இனப்படுகொலைகள் முதல் 2009 இல் முள்ளிவாய்க்கால் படுகொலையில் உச்சக்கட்டத்தை அடைந்த இனப்படுகொலைப் போர் வரை தமிழ் மக்களை திட்டமிட்டு அழிப்பதன் அடிப்படையில் சிங்கள அரசும் , அதன் இராணுவமும் கட்டமைக்கப்பட்டது.
இன்றும் கூட, தமிழ் நிலம் சிங்கள இராணுவ ஆக்கிரமிப்பின் கீழ் உள்ளது. தமிழ் பத்திரிகையாளர்கள் கடத்தப்பட்டு தொடர்ந்தும் சித்திரவதை செய்யப்படுகிறார்கள். தமிழ் ஆர்வலர்கள், அறிஞர்கள் மௌனமாக்கப்படுகிறார்கள். அத்துடன் போரில் காணாமல் போன தங்கள் அன்புக்குரியவர்களைத் தேடும் தமிழ் குடும்பங்கள் தொடர்ந்து அச்சுறுத்தலை எதிர்கொள்கின்றன.
2019 ஆம் ஆண்டு இலங்கையை உலுக்கிய கொடிய ஈஸ்டர் பயங்கரவாத தாக்குதல்களுடன் அரசாங்க தொடர்புகள் இருப்பதாகக் கூறப்படுவதை நம்பகத்தன்மையுடன் விசாரிக்க தனது சொந்த நிர்வாகம் தவறிவிட்டது என்ற புதுப்பிக்கப்பட்ட குற்றச்சாட்டுகளையும் மறுத்தார்.
2009 ஜனவரி – மேக்கு இடையில், 165,000 க்கும் மேற்பட்ட தமிழர்கள் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டனர். பொதுமக்கள் “போர் இல்லாத பிரதேசம்” (No Fire Zone) என்று அழைக்கப்படுவதற்குள் கூட்டமாக அழைத்துச் செல்லப்பட்டு கொல்லப்பட்டனர்.
தமிழ் இனப்படுகொலை மறுதலிப்பு ?
நீண்ட காலப் போரில் தமிழர் தாயகம் இலங்கை இராணுவத்தால் இடைவிடாமல் குண்டுவீசித் தாக்கப்பட்டது. பொது மருத்துவமனைகள் மீது ஷெல் வீசப்பட்டன. பல்லாயிரம் பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டனர். சரணடைந்த தமிழர்கள் அரச படைகளால் கொல்லப்பட்டனர்.
பச்சிளங் குழந்தைகள் தங்கள் தாய்மார்களின் கைகளிலிருந்து பறிக்கப்பட்டு காணாமல் போனார்கள். இது ஒரு இனப்படுகொலை இல்லை என்று இப்போது அதி மேதாவி ரணில் வாதிடுகிறார்.
தமிழ் இனப்படுகொலையை மறுக்க, திரித்து, நிராகரிக்க இலங்கையின் பரந்த முயற்சியின் ஒரு பகுதியாக சர்வதேச அளவில் சிங்கள அரசு முயன்று வருகிறது. இது பொறுப்புக்கூறலைத் தவிர்ப்பதற்கும், சர்வதேச சமூகத்தை ஏமாற்றுவதற்கும், தற்போதைய அடக்குமுறை நிலையைப் பேணுவதற்கும் ஒரு திட்டமிட்ட நடவடிக்கையாகவே கருதலாம்.
இலங்கையின் உள்நாட்டுப் போரைத் தொடர்ந்து போர்க்குற்ற விசாரணைகளை அரசாங்கம் கையாண்ட விதம் மற்றும் 1980 களின் பிற்பகுதியில் அவரது கண்காணிப்பின் கீழ் செய்யப்பட்ட சித்திரவதை குற்றச்சாட்டுகள் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு சூடான விவாதம் இந்த நேர்காணலில் இடம்பெற்றது.
இலங்கையின் உபோருக்கு முந்தைய உண்மை மற்றும் சமரசம் குறித்து ஹசன், விடுதலைப் புலிகள் (LTTE) பக்கம் திரும்பியபோது, 2009 இல் முடிவடைந்த மோதலில் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கானோருக்கு நீதி வழங்கப்பட்டதா என்று கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த முன்னாள் ஜனாதிபதி, இல்லை. எந்த சமூகத்திற்கும் நீதி இதுவரை வழங்கப்படவில்லை என்று மிக அப்பட்டமாகவே கூறியுள்ளார். அத்துடன் போரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகள் தடுக்கப்பட்டதையும், சில மருத்துவமனைகள் குண்டுத் தாக்குதல்களில் தாக்கப்பட்டத்தையும் அவர் ஒப்புக் கொண்டார்.
ஆனால் அத்தகைய குண்டுவெடிப்புகள் முறையாக திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டவை என்பதை மறுத்தார்.
போர்க் குற்ற ஒப்புதல் ?
ஐ.நா. குழுவின் கூற்றுப்படி, இலங்கை அரசாங்கப் படைகள் போரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி வழங்குவதைத் தடுத்தன என்று நேர்காணலில் ஹசன் கூறினார். அது தொடர்பில் பதிலளித்த போரின் இறுதிக் கட்டத்தின் போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ரணில் விக்ரமசிங்கே, அது நடந்தது என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன் என்றார்.
அதேசமயம் அமெரிக்க வெளிவிகாரத் துறை போர்க்குற்றங்கள் செய்ததாக குற்றம் சாட்டும் ஜெனரல் சவேந்திர சில்வாவை, மீண்டும் இலங்கையின் ஆயுதப் படைகளுக்குத் தலைவராக நியமித்ததற்கான காரணம் குறித்தும் ரணில் விக்ரமசிங்க இதன்போது நேர்காணலில் வெளிப்படையாக தெளிவுபடுத்தினார்.
ஈழ மண்ணில் 2009 க்குப் பிறகும், இராணுவ ஆக்கிரமிப்பு, நில அபகரிப்புகள், கட்டாயமாக காணாமல் போதல்கள் என்று இனப்படுகொலை இன்னமும் தொடர்கிறது.
இலங்கையில் இனப்படுகொலை நடந்து கொண்டிருக்கிறது. சர்வதேச சமூகம் இலங்கையின் குற்றங்களை வெள்ளையடிப்பதை நிறுத்தி உண்மையை அங்கீகரிக்க வேண்டும். இலங்கை ஒரு இனப்படுகொலை நாடு, மேலும் ரணில் விக்கிரமசிங்க போன்ற தலைவர்கள் அதன் தொடர்ச்சியில் உடந்தையாக உள்ளனர் என்பதை அவர் தன்வாயால் அருந்தருளிய செவ்வியிலேயே தெளிவாக தெரிவித்து விட்டார்.
இனி! உலகமும் ஈழத் தமிழர்களுக்கு என்ன பதிலை, என்ன வியாக்கியானத்தை சொல்லப் போகுறது ??
![]()