உலகம்

இருளில் மூழ்கும் காசா! 20 லட்சம் மக்கள் பாதிப்பு

காசாவுக்கான மின்சார விநியோகத்தை துண்டிப்பதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. இதனால் காசாவில் 20 லட்சதிற்கும் அதிகமான மக்கள் இருளில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது.

பிணையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள எஞ்சியுள்ள இஸ்ரேலிய பணயக்கைதிகளை விடுவிக்க ஹமாஸ் மீது அழுத்தம் கொடுக்கும் நோக்கத்துடன் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

காசாவிற்கு அனைத்து அத்தியாவசிய உதவிகளையும் நிறுத்தி ஒரு வாரத்திற்குள் அவர்கள் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர்.

ஏற்கனேவே காசா நகர கட்டமைப்பு பெருமளவில் அழிக்கப்பட்டுள்ளதால் மின்சாரம் வழங்க மின்பிறப்பாக்கிகள் மற்றும் சூரிய சக்தியை பயன்படுத்தப்படுகின்றன.

இந்நிலையில் கிடைத்துவந்த சொற்ப மின்சாரமும் அவர்களுக்கு மறுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே வைத்தியசாலைகளில் அடிப்படை வசதிகள் இன்றி சிகிச்சை அளிப்பது கேள்விக்குறியாகியுள்ள நிலையில் மின்சார துண்டிப்பு மேலும் ஆழாமாக தாக்கத்தை ஏற்படுத்தும்.

இஸ்ரேலிய எரிசக்தி அமைச்சர் எலி கோஹன் அளித்த பேட்டியில், இஸ்ரேல் மின்சார சபையிலிருந்து காசா பகுதிக்கு மின்சாரம் வழங்குவதை உடனடியாக நிறுத்துவதற்கான உத்தரவில் நான் கையெழுத்திட்டுள்ளேன். பணயக்கைதிகளை விடுவிப்பதற்கும், காசாவில் இருந்து ஹமாஸை ஒழிப்பதற்கும் எங்களால் முடிந்த அனைத்தையும் நாங்கள் பயன்படுத்துவோம் என்று தெரிவித்தார்.

இரண்டாம் கட்ட போர் நிறுத்த பேச்சுவார்த்தையில் ஹமாஸ் அமைப்பினரை விட தங்கள் கை ஓங்கி இருக்க வேண்டும் என்பதற்காக இஸ்ரேல் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் அப்பாவி மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்த கவலை எழுந்துள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *