முச்சந்தி

தையிட்டி விகாரை தொடர்பில் சபையில் சரமாரியாகக் கேள்வி; உடனடியாக பதிலளிக்க முடியாது -அவகாசம் கோரிய அமைச்சர் 

யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள தையிட்டி கிராமத்தில் பொதுமக்களுக்குச் சொந்தமான காணிக்குள் அமைக்கப்பட்டுவருவதாக குற்றம்சாட்டப்பட்டு அதற்கெதிராக அப்பகுதி மக்களினால் தொடர் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுவரும் ”திஸ்ஸ ராஜமகா விகாரை” தொடர்பில் தமிழரசுக்கட்சியின் யாழ் மாவட்ட எம்.பி.யான சிவஞானம் சிறீதரன் அடுக்கடுக்காக பல கேள்விகளை எழுப்பியபோதும் உடனடியாக இக்கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாதெனத்தெரிவித்த விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் பதில்களை வழங்க கால அவகாசம் கோரினார்

பாராளுமன்றத்தில் நிலையியற்கட்டளை 27இன் கீழ் 2 இல் புத்தசாசன,சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் ஹினிதும சுனில் செனவியிடம் தமிழரசுக்கட்சியின் யாழ் மாவட்ட எம்.பி.யான சிவஞானம் சிறீதரன் யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள தையிட்டி கிராமத்தில் பொதுமக்களுக்குச் சொந்தமான காணிக்குள் அமைக்கப்பட்டுவருவதாக குற்றம்சாட்டப்பட்டு வரும் ”திஸ்ஸ ராஜமகா விகாரை”தொடர்பில் கேள்விகளை எழுப்பினார்.

யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள தையிட்டி கிராமத்தில் பொதுமக்களுக்குச் சொந்தமான காணிக்குள் ‘திஸ்ஸ ராஜமகா விகாரை என்ற பெயரில் விகாரையொன்று அமைக்கப்பட்டுள்ளதை அமைச்சர் அறிவாரா?

அந்த விகாரை அமைக்கப்பட்டுள்ள ஏறத்தாள 20 பரப்பு காணியின் உரிமையாளர்கள் விகாரையை அகற்றி தங்களின் நிலங்களை தங்களிடம் கையளிக்குமாறு மிக நீண்டகாலமாக அகிம்சாவழியில் போராட்டம் நடத்திவருவதை அமைச்சர் அறிவாரா?

இவ்விகாரை அமைந்திருக்கும் காணிகள் திருத்தப்பட்டவாறாக 1950ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க காணி சுவிகரிப்பு சட்டத்தின் கீழ் அரசினால் ஏற்கனவே சுவீகரிக்கப்பட்டுள்ளதா?

அவ்வாறு சுவீகரிக்கப்பட்டுள்ளதாயின் அது தொடர்பான வர்த்தமானி பிரசுரத்தின் இலக்கத்தினையும் என்ன நோக்கத்திற்காக கவீகரிக்கப்பட்டது என்பதனையும் அமைச்சர் அறியத்தருவாரா?

ஒருநோக்கத்திற்காக சுவீகரிக்கப்படும் காணியை இன்னொரு நோக்கத்திற்காக பாவிக்க முடியாது என்பதனை அமைச்சர் அறிவாரா?

அவ்விகாரை அமைந்துள்ள காணியானது விகாரை அமைப்பதற்கென சுவீகரிக்கப்படவில்லையாயின் அக்காணிக்குள் விகாரையினை கட்டியிருப்பது சட்டத்திற்கு முரணான செயல் என்பதனை அமைச்சர் ஏற்றுக்கொள்வாரா?தங்களது காணியினை தங்களிடம் கையளிக்குமாறு போராடி வரும் காணி உரிமையாளர்களுக்கு அரசின் தீர்வு என்ன என்பதனை அமைச்சர் அறியத் தருவாரா? என பல கேள்விகளை சிறீதரன் எம்.பி அடுக்கினார்

ஆனால் அனைத்தையும் அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்த புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் ஹினிதும சுனில் செனவி,இந்த கேள்விகளுக்கு பதிலளிப்பதற்காக ஒருவார கால அவகாசம் வழங்குமாறு கோருகின்றேன். காணி அமைச்சு உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களிடம் தகவல்கள் பெற்றுக்கொள்ள வேண்டியுள்ளது. அதன்பின்னர் முழுமையான பதிலை வழங்கு கின்றேன் என்றார்

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button