உலகம்

காசாவில் யுத்தத்தில் சிக்கிய சிறுவனின் வாழ்க்கையை சித்தரிக்கும் விவரணச்சித்திரம்; இஸ்ரேலின் அழுத்தத்தால் நீக்கியது பிபிசி?

காசாவில் யுத்தத்தில் சிக்கிய ஒரு சிறுவனின் வாழ்க்கையை சித்தரிக்கும் விவரணச்சித்திரத்தை பிபிசி அகற்றியுள்ளதை தொடர்ந்து இஸ்ரேலின் அழுத்தங்கள்காரணமாகவே பிபிசி அதனை அகற்றியதுஎன   குற்றச்சாட்டுகள்எழுந்துள்ளன.

காசா – போர்க்களத்தில் எப்படி உயிர்தப்புவது என்ற வீடியோவை சில நாட்களிற்கு முன்னர் பிபிசி வெளியிட்டிருந்தது.

காசாவின் மீதான இஸ்ரேலின் ஈவிரக்கமற்ற  தாக்குதலின் மத்தியில் தப்பிபிழைத்து வாழும் 13 வயது சிறுவனின் வாழ்க்கை பற்றியது இந்த விவரணச்சித்திரம்.

காசாவில் இடம்பெற்ற பேரழிவு பற்றிய குழந்தைகளின் பார்வை குறித்த கருத்தே இந்த விவரணச்சித்திரம் என தெரிவித்திருந்த பிபிசி ,இது அவர்களின் அனுபவங்களிற்கான விலைமதிப்பற்ற சான்று என நாங்கள் கருதுகின்றோம்,வெளிப்படைத்தன்மை குறித்த எங்கள் அர்ப்பணிப்பை உறுதி செய்யவேண்டும் என குறிப்பிட்டிருந்தது.

எனினும் அந்த விவரணச்சித்திரத்தில் தோன்றிய சிறுவனின்தந்தை  கலாநிதி  அல்மான் அல்யாசூரி ஹமாஸ்  அரசாங்கத்தில் பிரதிவிவசாய அமைச்சராக பணியாற்றியவர் என தெரியவந்ததன் பின்னர் பிபிசி அந்த விவரணச்சித்திரத்தை நீக்கியுள்ளது.2007 இல் அவர் பிரதிஅமைச்சராக பணிபுரிந்திருந்தார்.

ஹமாஸ் அமைப்பை பிரிட்டன் பயங்கரவாத அமைப்பாக கருதுகின்றது.

பிபிசி அந்த விவரணச்சித்திரத்தை விலக்கியதை கண்டித்துள்ளவர்கள் குறிப்பிட்ட நபர் தொழில்நுட்ப அதிகாரியாகவே ஹமாசின் அமைச்சரவையில் பணியாற்றினார் என சுட்டிக்காட்டியுள்ளனர்.

பாலஸ்தீன மக்களை மனிதாபிமான முகத்துடன் சித்தரிக்கும் இஸ்ரேலின் தாக்குதலினால் காசா மக்களின் நாளாந்த வாழ்க்கை எவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளது என்பதை வெளிப்படுத்தும் அந்த வீடியோவை பிபிசி அகற்றியமை குறித்து பலர் கடும் கண்டனத்தினை வெளியிட்டுள்ளனர்.

வீடியோவில் தோன்றிய சிறுவனின் தந்தை ஹமாஸ் அமைப்பின் அமைச்சரவையில் பணியாற்றினார் என்பதற்காக அந்த வீடியோவை அகற்ற முடியாது என பலர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதேவேளை அந்த சிறுவனின் தந்தையின் பின்னணி குறித்து தனக்கு முதலில் தெரிந்திருக்கவில்லை என தெரிவித்துள்ள பிபிசி இது குறித்து ஆராய்ந்து வருவதாக தெரிவித்துள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *