பலதும் பத்தும்

வியட்நாமில் நடைபெறும் இரண்டாவது உலகத் தமிழர் மாநாடு

இரண்டாவது உலக தமிழர் மாநாடு தமிழர்களின் பண்பாடு மற்றும் வரலாறு ஆகியவற்றுடன் நெருங்கிய தொடர்புகொண்ட வியட்நாம் நாட்டில் உள்ள டனாங் (Da Nang) நகரில் எதிர்வரும் 21, 22 ஆகிய திகதிகளில் நடைபெறவுள்ளது என உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பன்னாட்டு தமிழர் நடுவம், வியட்நாம் தமிழ் சங்கம், தமிழ் சாம்பர் ஒஃப் காமர்ஸ் ஆகிய தமிழ் அமைப்புகளின் ஒருங்கிணைப்புடன் ‘வியட்நாம் உலக தமிழர் மாநாடு 2025’ நடைபெறவுள்ளது.

இந்த இரண்டு நாள் மாநாட்டில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் இந்திய மக்களவை உறுப்பினருமான தொல். திருமாவளவன், தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவரும் தமிழக சட்டமன்ற உறுப்பினருமான வேல்முருகன், இலங்கை பிரதமரின் தனிச் செயலர் சிறி பகவான் வினிதா உள்ளிட்ட பலர் சிறப்பு அதிதிகளாக பங்குபற்றுகிறார்கள்.

மேலும் இலங்கை, இந்தியா, மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேசியா உட்பட 40க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து வருகைதரும் பிரதிநிதிகள் பங்குபற்றவுள்ளனர்.

இரண்டாம் உலக தமிழர் மாநாடு குறித்து மாநாட்டின் ஒருங்கிணைப்பாளரான பன்னாட்டு தமிழர் நடுவத்தின் தலைவரான திருத்தணிகாசலம் கூறுகையில்,

”இரண்டாம் நூற்றாண்டிலேயே கடல் வணிகத்தில் சோழ, பல்லவ, பாண்டிய பேரரசர்கள் ஏற்றுமதியாளர்களாக இருந்துள்ளனர். பண்டைய பட்டுப்பாதை எனப்படும் கடல் வணிக பாதை என்பது சீனா, கம்போடியா, வியட்நாம், இந்தோனேசியா, மலேசியா, மாமல்லபுரம்,  நாகப்பட்டினம், தொண்டி வழியாக இலங்கையை தொட்டு, அரபு நாடுகள் வழியாக ஐரோப்பாவுக்கு கடல் வணிகம் நடைபெற்றுள்ளது.

வியட்நாமில் உள்ள டனாங் கடற்கரை நகரத்திற்கு அருகில் மைசன் எனும் இடத்தில் சைவ மற்றும் வைணவ கோயில்கள் இருக்கின்றன.

முக லிங்கம் என்பது உலகத்திலேயே சிறப்பு வாய்ந்த லிங்கம் ஆகும்.  இந்த லிங்கத்தில் சிவனின் முகம் இருக்கும். இத்தகைய முக லிங்கம் வியட்நாமின் மைசன் நகரத்தில் இருக்கிறது. இங்கு சிவன் கோயில், முருகன் கோயில் உள்ளன. அத்துடன் சிவபெருமானுக்கும் முருகப் பெருமானுக்கும் மீசை இருப்பதும் தனித்துவமானது. இதை போன்ற முக லிங்கம் தமிழகத்தில் மதுரைக்கு அருகில் உள்ள பரமக்குடி எனுமிடத்திலும் உள்ளது. தமிழ்நாட்டின் ஆதிச்சநல்லூர் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட முதுமக்கள் தாழி வியட்நாம் நாட்டிலும் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

நான்காம் நூற்றாண்டில் சாம்பா பேரரசு சாம் எனும் புதிய மொழியை தமிழிலிருந்து தோற்றுவித்தது. பண்டைய சாம் மொழியில் தான் கம்போடியா, இந்தோனேசியா, வியட்நாம், மலேசியா ஆகிய நாடுகளின் பழைய கல்வெட்டுகள் காணப்படுகின்றன.

மேலும் சாம் மொழியும் தமிழ் எழுத்துக்கள் போலவே க, ஞ, ச, ன, ய , ர, ல, வ, ழ, ள என முடிகிறது.

டனாங் நகரில் சாம்பா அருங்காட்சியகம் உள்ளது. அங்கே சிவன், பார்வதி, முருகன், காரைக்கால் அம்மையார் ஆகியோரின் சிலைகள் உள்ளன.

இவ்வாறு தமிழர்களுடன் நெருக்கமான வரலாற்றுத் தொடர்புகளையும் பண்பாட்டு தொடர்புகளையும் கொண்டிருக்கும் வியட்நாமில் உள்ள டனாங் நகரில் தான் உலக தமிழர் மாநாடு பெப்ரவரி 21, 22 ஆகிய திகதிகளில் நடைபெறவுள்ளது.

உலக தமிழர்களின் ஒன்றுகூடல் மாநாடாக நடைபெறும் இந்த மாநாட்டில் 40க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து தமிழறிஞர்கள், தமிழர்கள், தமிழ் மொழி ஆய்வாளர்கள், வணிகர்கள் என பலரும் பங்குபற்றுகிறார்கள்.

மேலும், இந்த மாநாட்டில் இரண்டாவது நாளில் உலக தமிழர்களின் வணிகம் சார்பான மாநாடும் நடைபெறுகிறது. இது உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் தங்களுக்குள் வணிக தொடர்புகளை மேம்படுத்திக்கொள்ளவும், புதுப்பித்துக்கொள்ளவும், உருவாக்கிக்கொள்ளவும் வாய்ப்பாக அமையும்” என்றார்.

இதனிடையே பன்னாட்டு தமிழர் நடுவம் சார்பில் கடந்த 2018ஆம் ஆண்டின் கம்போடியா நாட்டில் உள்ள சியாம்ரீப் எனும் நகரில் முதலாவது உலக தமிழர் மாநாடு நடைபெற்றமை என்பதும், இந்த மாநாட்டில் 40க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து தமிழர்கள் பங்கு பற்றினார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button