சுதந்திர தினத்தை முன்னிட்டு வடக்கில் மோப்ப நாயுடன் விசேட சோதனை

இலங்கையின் 77 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு நேற்று செவ்வாய்க்கிழமை வடக்கில் விசேட சோதனை நடவடிக்கையினை விசேட அதிரடிப் படையினரும், பெலிசாரும் இணைந்து மேற்கொண்டனர்.
தெற்கில் இருந்து வடக்கிற்கு செல்லும் ஏ 9 பிரதான வீதியில் தாண்டிக்குளம் பகுதியில் மூன்று இடங்களில் மோப்ப நாய்களின் உதவியுடன் விசேட அதிரடிப் படையினரும், பொலிசாரும் இணைந்து சோதனை நடவடிக்கையை மேற்கொண்டனர்.
வடக்கில் இருந்து தெற்கு நோக்கி வரும் வாகனங்கள் இரு இடங்களில் வழிமறிக்கப்பட்டு வாகன ஆவணங்கள் சோதிக்கப்பட்டதுடன், மோப்ப நாய்களின் உதவியுடன் வாகனங்களின் உட்பகுதியும் சோதனை செய்யப்பட்டது.
தெற்கில் இருந்து வடக்கு நோக்கி வரும் வாகனங்கள் ஒர் இடத்தில் வழிமறிக்கப்பட்டு சோதனை முன்னெடுக்கப்பட்டிருந்தது.
மோட்டார் சைக்கிள்கள், பேரூந்துகள், பாரவூர்திகள் மற்றும் சொகுசு வாகனங்கள் என அனைத்தும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இதில் விசேட அதிரடிப்படையினர், ஆண் – பெண் பொலிசார் மற்றும் போக்குவரத்து பொலிசார் ஈடுபட்டிருந்தனர்.
![]()