தையிட்டி சட்டவிரோத விகாரையை அரசே சட்டரீதியாக அகற்ற வேண்டும்

யாழ்ப்பாணம் தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரை அரச கட்டமைப்பின் ஊடாக சட்டரீதியாகவே அகற்றப்பட்ட வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.
தையிட்டி விகாரையை இடித்து அகற்ற கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அழைப்பு விடுத்ததாக
சமூக வலைத்தளத்தில் பரவும் துண்டுப்பிரசுரம் தொடர்பாக யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே இதனை தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
தையிட்டி விகாரையை இடித்து அகற்ற நான் அழைப்பு விடுத்ததாக சமூக வலைத்தளத்தில் துண்டுப் பிரசுரமொன்று பரப்பப்படுகிறது. அது போலியான தகவல். அது போலியான தகவல் என்று எனது சமூக வலைத்தளத்தில் நான் பதிவிட்டுள்ளேன்.
யாழ்ப்பாண ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பின்னரும் தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள விகாரையை மத ஸ்தலமாக கருத முடியாது. அது ஒரு சட்டவிரோத கட்டிடம்.
இந்த நாட்டில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள கோவில் மற்றும் பள்ளிவாசல் என்பன இடித்து அகற்றப்பட்டுள்ளன. அந்தவகையில் தையிட்டி விகாரையும் அகற்றப்பட வேண்டும். ஆனால் அது சட்ட ரீதியாக அரச கட்டமைப்பின் ஊடாகவே அகற்றப்பட வேண்டும் – என்றார்.
![]()