இலக்கியச்சோலை

நீந்திக் கடந்த நெருப்பாறான நா. யோகேந்திரநாதன்: ஈழத்து எழுத்துலகின் ஒரு சரித்திரம் சாய்ந்தது!…  ஐங்கரன் விக்கினேஸ்வரா

ஈழத்தின் முற்போக்கு எழுத்தாளர், நடிகர், சிந்தனையாளர், பின்னணி குரல் கலைஞர், பல புத்தகங்களை எழுதியவர் என பன்முக ஆற்றலைக் கொண்ட நா.யோகேந்திரநாதன் இவ்வுலகை விட்டு ஞாயிறு 29/12/24இல் பிரிந்தார்.
இறுதிப் போரின் வலிகளைச் சுமந்த வரலாற்றைப் படைத்த மூத்த படைப்பாளர் நா.யோகேந்திரநாதனின் ‘நீந்திக்கடந்த நெருப்பாறு’ நாவல் அண்மையில் சிறிலங்கா அரசின் அச்சுறுத்தலுக்கும் உள்ளானது.
போர்க்காலத்தில் எழுத்தாளராகவும் ஊடகவியலாளராகவும் பணியாற்றிய நா. யோகேந்திரநாதன், புலிகளின் குரல் நாடகங்கள் வழியாகவும் பிரபலமாக அறியப்பட்டார். இவர் இறுதி யுத்த அனுபவத்தை ப‌‌‌ல பாகங்களாக நீந்திக்கடந்த நெருப்பாறு என்ற நாவலாக எழுதியமை குறிப்பிடத்தக்கது.
ஈழத்தின் மூத்த எழுத்தாளர் நா. யோகேந்திரநாதன் எழுதிய ‘34 நாட்களில் நீந்திக் கடந்த நெருப்பாறு’ நாவல் வெளியீட்டு விழா கிளிநொச்சியில் இவ்வருட ஆரம்பத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது.
தமிழ் தேசியக் கலை இலக்கியப் பேரவையின் ஏற்பாட்டில், அவ் அமைப்பின் தலைவரும் ஈழத்து எழுத்தாளருமான தீபச்செல்வன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் , ஈழத்தின் மூத்த எழுத்தாளர் நா. யோகேந்திரநாதனின் நாவலுக்கு கிளிநொச்சியில் மகத்தான வரவேற்பு கிடைத்தது.
விடுதலைப் புலிகளின் வீரம் செறிந்த போரான குடாரப்பு தரையிறக்கம் குறித்த இந்த நாவல் வெளியீட்டில் அரங்கம் நிறைந்த மக்கள் வருகை தந்தனர். மக்களின் மகத்தான வரவேற்புடன் நடைபெற்ற இந்த நிகழ்வில் நாவலின் அனைத்துப் பிரதிகளும் விற்றுத் தீர்ந்தன என்பது உண்மையான படைப்பாளிக்கு கிடைக்கும் கௌரவச் சான்றாகும்.
மூத்த எழுத்தாளருக்கு மதிப்பளிப்பு:
இதேவேளை இந்நிகழ்வில் ஈழத்தின் மூத்த எழுத்தாளர் நா. யோகேந்திரநாதன் அவர்களுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனால் மதிப்பளிப்பு செய்யப்பட்டது.
இறுதி யுத்தம் குறித்த இந்த நாவல் மன்னாரில் இருந்து முள்ளிவாய்க்கால் வரையான துயரப் பயணத்தை பதிவு செய்துள்ளது. இதுவரையில் நீந்திக் கடந்த நெருப்பாறு நாவலானது இரண்டு பாகங்கள் வெளிவந்துள்ளன.
இறுதிப் பாகமான மரண மழையில் நீந்திக் கடந்த நெருப்பாறு வெளியிடப்பட்டது. போர் முடிவடைந்து பல ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் இந்த நூல் ஈழத் தமிழ் மக்களின் சோக வரலாற்றை மீண்டும் நினைவுபடுத்துகின்றது.
இந்த நிகழ்வில் படைப்பாளிகள், அரச ஊழியர்கள், இளைஞர், யுவதிகள், பொதுமக்கள் எனப் பலரும் திரண்டு கலந்து கொண்டிருந்தமை விசேட அம்சமாகும்.
ஓர் எழுத்தாளன் இறந்துபோயினும் அவர்தம் எழுத்துக்கள் என்றும் உயிர்ப்புடன் வைத்திருப்பது அவரின் படைப்புக்களாகும். மகாதேவா ஆச்சிரமம் சைவச் சிறுவர் இல்லம் 2012, 34 நாட்களில் நீந்திக்கடந்த நெருப்பாறு, இடிபடும் கோட்டைகள், இமயம்: விருதுபெற்ற நாயகனை நெஞ்சாரப் பாராட்டி விரியும் வாழ்த்து மலர், காட்டு நிலா (வானொலி நாடகங்கள்), நீந்திக்கடந்த நெருப்பாறு, பூநகரியிலிருந்து புதுமாத்தளன் வரை நீந்திக் கடந்த நெருப்பாறு, மரண மழையில் நீந்திக்கடந்த நெருப்பாறு ஆகிய படைப்புகளை மூத்த எழுத்தாளர் நா. யோகேந்திரநாதன் வெளியிட்டுள்ளார்.
கிளிநொச்சியின் மைந்தனும், முன்னர் திருவையாறு உப தபாலதிபருமாக இருந்தார். போராட்ட காலத்தின் பதிவுகளை சிறப்பாக வெளிக் காட்டிய நா யோகேந்திரநாதன் அவர்களின் பங்களிப்பு ஈழத்து இலக்கிய வளர்ச்சிக்கு அளப்பரிய பங்களிப்பைத் தந்துள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *