மஹிந்தவுக்கும், நாமலுக்கும் உயிரச்சுறுத்தல் அரசியல் பழிவாங்களுக்காகவே இராணுவ பாதுகாப்பு நீக்கம்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவரது மகன் நாமல் ராஜபக்ஷ ஆகியோருக்கு உயிரச்சுறுத்தல் இருப்பதாக புலனாய்வு பிரிவு அறிக்கை சமர்ப்பித்துள்ள நிலையில் வழங்கப்பட்டுள்ள இராணுவ பாதுகாப்பு அரசியல் பழிவாங்களுக்காக நீக்கப்பட்டுள்ளது. மஹிந்த ராஜபக்ஷவுக்கு பாதுகாப்பு வழங்குவது ஒவ்வொரு பிரஜையினதும் கடமையாகும் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில்  நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

முன்னாள் ஜனாதிபதிபதிகளுக்கு வழங்கப்பட்ட இராணுவ பாதுகாப்பு முழுமையாக நீக்கப்பட்டமை முறையற்றதொரு செயற்பாடாகும். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று பாதுகாப்பு ஏதுமின்றி மக்கள் மத்தியில் செல்வதற்கான சூழலை மஹிந்த ராஜபக்ஷவே ஏற்படுத்திக் கொடுத்தார் என்பதை மறந்து விடக்கூடாது.

இராணுவத்தினர் தமது சொந்த ஊர்களுக்கு சவப்பெட்டியில் செல்லும் யுகத்தை மஹிந்த ராஜபக்ஷவே முடிவுக்கு கொண்டு வந்தார். ஆகவே அவருக்கு பாதுகாப்பு வழங்குவது ஒவ்வொரு பிரஜைகளினதும் தலையாய கடமையாகும்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும், பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கும் உயிரச்சுறுத்தல் காணப்படுவதாக புலனாய்வு பிரிவு அறிக்கை சமர்ப்பித்துள்ள நிலையிலும் இராணுவ பாதுகாப்பு நீக்கப்பட்டுள்ளமை முறையற்றதொரு செயற்பாடாகும். இதனை அரசியல் பழிவாங்களாகவே குறிப்பிட வேண்டும்.

தேர்தல் மேடைகளில் குறிப்பிட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றுவதாக குறிப்பிட்டுக் கொண்டு அரசாங்கம் முறையற்ற வகையில் செயற்படுகிறது. அரச வரப்பிரசாதங்களை பயன்படுத்துவதில்லை என்று குறிப்பிட்ட ஆளும் தரப்பினர் அரச சிறப்புரிமைகளை முழுமையாக பயன்படுத்துகிறார்கள். நாட்டு மக்கள் வெகுவிரைவில் உண்மையை விளங்கிக் கொள்வார்கள்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் குறித்து விசேட கவனம் செலுத்தியுள்ளோம். சந்தர்ப்பவாத அரசியலில் ஈடுபடும் தரப்பினருடன் கூட்டணி அமைக்க போவதில்லை. ஜனாதிபதித் தேர்தலின் போது எம்மை விட்டுச் சென்றவர்கள் இன்று அரசியலில் இருந்து காணாமல் போயுள்ளார்கள். அடுத்த தேர்தலில் எந்த தரப்பில் இருந்து போட்டியிடுவது என்பது அவர்களுக்கு கேள்விக்குறியாகியுள்ளது.ஆகவே உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் நாங்கள் தனித்து போட்டியிடுவோம் என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button