திருமலை சல்லி அம்பாள் ஆலயத்திற்கு அருகில் வெள்ளை கருங்கல் மலையை உடைப்பதற்கு எதிர்ப்பு

திருகோணமலை சல்லி அம்பாள் ஆலயத்திற்கு அருகில் காணப்படுகின்ற வெள்ளை கருங்கல் மலையை உடைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் நேற்று திங்கட்கிழமை (16) எதிர்ப்பில் ஈடுபட்டனர்.
தனியாருக்கு சொந்தமான இந்த வெள்ளை கருங்கல் மலையை காணி உரிமையாளரின் உத்தரவுக்கு அமைய ஜே.சி.பி. இயந்திரத்தை பயன்படுத்தி உடைக்க முற்பட்டபோது அங்கு ஒன்றுகூடிய 300 க்கும் மேற்பட்ட கிராம மக்கள் எதிர்ப்பில் ஈடுபட்டதுடன் ஜே.சி.பி. இயந்திரத்தையும் தாக்கியுள்ளனர்.
இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. இதன் பின்னர் பாதிக்கப்பட்டவரினால் உப்புவெளி பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டினை அடுத்து தாக்குதலுடன் தொடர்பானவர்கள் பொலிசாரினால் அழைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டனர். இதன் பின்னர் மலை உடைப்பிற்கு எதிராக பொதுமக்களும் முறைப்பாடு ஒன்றினை உப்புவெளி பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்தனர்.
இந்த மலையை உடைப்பதனால் கடல் நீர் உட்புகும் அபாயம் இருப்பதாகவும் மீனவர்களின் வாழ்வாதாரத்திற்கு இது பாதிப்பை ஏற்படும் எனவும் இயற்கை அழகு இல்லாமல் போவதுடன் இயற்கை அனர்த்தங்களின் போது கூடுதலான பாதிப்புகளுக்கு தாம் முகம் கொடுக்க வேண்டி வரும் எனவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக சம்பவ இடத்திற்கு விஜயம் மேற்கொண்ட ஆளுநரின் பிரத்தியேக செயலாளர் மற்றும் அரச அதிகாரிகள் மக்களுடன் கலந்துரையாடினர்.
அத்துடன் அந்த மலையை அகற்றுவதற்கு முன்னர் அதனுடன் தொடர்புடைய சில அரச திணைக்களங்களின் அனுமதி பெறப்படவில்லை எனவும் தெரிய வருகின்றது.
![]()