75 நாட்களில் 800 கோடி போலி அழைப்புகள்; கண்டறிய உதவியது ஏ.ஐ., தொழில்நுட்பம்

ஏ.ஐ., தொழில்நுட்பம் மூலம் ஏர்டெல் நிறுவனம், 800 கோடி போலி அழைப்புகளை கண்டறிந்துள்ளது.

இன்றைய உலகம் நவீனமானது, புதிய தொழில்நுட்பங்களால் சூழ்ந்தது. கைகளில் வாட்ச், மோதிரம் உள்ளிட்டவை இருக்கிறதோ இல்லையோ, அனைவர் கைகளிலும் செல்போன் உள்ளது. சாமானிய நபர்கள் முதல் சாதனை நபர்கள் வரை கைகளில் செல்போன் தவழும் இந்த காலகட்டத்தில் தவறான அல்லது தொந்தரவான அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகளுக்கு பஞ்சமில்லை.

இதுபோன்ற தருணங்கள் இம்சையானதை அறிந்த ஏர்டெல் நிறுவனம், தமது வாடிக்கையாளர்களுக்கு ஏ.ஐ., தொழில்நுட்பத்தை புகுத்தியது. தீர்வை காண அறிமுகப்படுத்தப்பட்ட இந்த தொழில்நுட்பம், கைமேல் பலன் கொடுத்துள்ளது. 75 நாட்களில் மட்டும் 800 கோடி ஸ்பேம் அழைப்புகளையும், 8 கோடி மோசடியான குறுஞ்செய்திகளையும் கண்டறிந்து, வாடிக்கையாளர்களுக்கு உதவி இருக்கிறது.

அதுபற்றிய சுவாரசிய தகவல் வருமாறு;

நாள் ஒன்றுக்கு 10 லட்சம் ஸ்பேம் அழைப்பாளர்கள் கண்டறியப்பட்டு வருகின்றனர். ஒட்டு மொத்த செல்போன் அழைப்புகளில் 6 சதவீதம் அழைப்புகள் மோசடியான அழைப்புகளாக இருக்கின்றன. 2 சதவீதம் மோசடி குறுஞ்செய்திகளை வாடிக்கையாளர்கள் எதிர்கொள்கின்றனர்.

இதில் ஒரு சுவராசியமான தகவல் என்னவென்றால், செல்போன் பயன்படுத்துபவர்களில் 79 சதவீதம் ஆண்களை குறிவைத்தே மோசடி அழைப்புகள் மேற்கொள்ளப்படுகின்றன. 21 சதவீதம் அழைப்புகள் பெண்களை குறிவைத்து அழைக்கப்படுகின்றன. 35 சதவீத மோசடி பேர்வழிகள், லேண்ட்லைன் (landline) தொலைபேசிகளை பயன்படுத்தி இருக்கின்றனர்.

36 வயது முதல் 60 வயது வரை உள்ளவர்கள் 48 சதவீதமும், 26 வயது முதல் 35 வயது வரை உள்ளவர்கள் 29 சதவீதமும் பாதிக்கப்பட்டு உள்ளனர். 18 வயது முதல் 25 வயது வரை உள்ள இளைய தலைமுறையினர் 13 சதவீதம் வரையும், 60 வயதை கடந்த மூத்த குடிமக்கள் 8 சதவீதமும் மோசடி அழைப்புகளை எதிர்கொண்டு உள்ளனர்.

கவர்ச்சியான குரல்களில் மயங்கி அதில் ஏமாந்தவர்களும் உண்டு. 12 சதவீதம் பேர் ஸ்பேம் அழைப்புகளால் ஏமாந்துள்ளனர். டில்லி, மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இருந்து மோசடி நபர்கள் அழைப்புகளை மேற்கொண்டு இருக்கின்றனர்.

அழைப்புகளில் எப்படி வயது வித்தியாசம் பார்த்து மோசடியாளர்கள் வலைவீசுகிறார்களோ அதேபோல் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் தான் அவர்கள் தங்கள் கைவரிசையை காட்டுகின்றனர். முற்பகல் 11 மணி முதல் மதியம் 3 மணி வரை அதிகபட்ச ஸ்பாம் அழைப்புகளை ஏர்டெல் வாடிக்கையாளர்கள் பெற்றுள்ளனர். இரவு 8 மணிக்கு மேல் மோசடி அழைப்புகள் குறைவாக வருகிறது.

வார நாட்களை ஒப்பிடும் போது, வார இறுதிநாட்களில் வாடிக்கையாளர்களை மோசடி நபர்கள் தொந்தரவு செய்வது இல்லை. இத்தகைய தருணங்களில் 40 சதவீதம் அழைப்புகள் தான் மேற்கொள்ளப்படுகின்றன.

புதுடில்லியில் செல்போன் அதிகம் பயன்படுத்துபவர்களுக்கு தான் பெரும்பான்மையான மோசடி அழைப்புகளும் சென்றிருக்கின்றன. அதற்கடுத்து ஆந்திர பிரதேசம், உத்தரபிரதேச மாநிலங்களில் வசிப்போர் மோசடி அழைப்புகளை சந்தித்து இருக்கின்றனர் என்பது தெரிய வந்துள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button